பக்ரீத் பண்டிகைக்கு சென்னையில் குவியும் ஒட்டகங்கள்
வண்ணாரப்பேட்டை : இஸ்லாமிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை இப்ராகிம் நபிகளாரின் தியாகத்தை போற்றும் விதமாக அமைந்ததாகும் தமிழகத்தில் 28 ஆம் தேதி அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ள நிலையில் அன்று கூட்டு குர்பானி கொடுப்பதற்காக சென்னையில் ஒட்டகங்கள் வருகை அதிகரித்துள்ளன.
தியாகத் திருநாளாக கொண்டாடும் இப்பண்டிகையில், ஏழைகள் வீட்டிலும் மாமிச உணவு பரிமாற வேண்டும் என்பதற்காக இறைச்சி வழங்குவது வழக்கம். இது,"குர்பானி' என அழைக்கப்படுகிறது. துவக்கத்தில் ஆடு, மாடுகளை பலியிட்டு, குர்பானி கொடுத்து வந்தனர். தற்போது அரபு நாடுகளைப் போல் இந்தியாவிலும் ஒட்டகங்களை குர்பானி கொடுக்கின்றனர்.
ஒட்டகம் விலை மிக அதிகம் என்பதால், பலர் ஒன்று சேர்ந்து ஒட்டகங்களை வாங்கி பங்கிட்டு தானம் கொடுக்கின்றனர். எனவே தான் இது,கூட்டு குர்பானி எனப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இதுபோன்று ஒட்டகங்கள் குர்பானி கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டும் 150 ஒட்டகங்கள் குர்பானி கொடுக்கப்பட்டன.வரும் 28ம் தேதி கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையை யொட்டி ராஜஸ்தானிலிருந்து இப்போதே ஒட்டகங்கள் சென்னைக்கு வரத் தொடங்கிவிட்டன. இன்னும் பல ஒட்டகங்கள் ஆந்திரா வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன.வண்ணாரப்பேட்டை, மண்ணடி, பிராட்வே உட்பட பல்வேறு இடங்களில் குர்பானிக்கு ஒட்டகங்கள் தயாராக உள்ளன.
|