பணவீக்கம் என்கிற மாயாஜாலம்
பி.எஸ்.எம். ராவ்
Saturday March 21 2009 00:00 IST
இது மட்டும் தேர்தல் நேரமாக இல்லாமல் இருந்திருந்தால், பணவீக்கத்தை ஒரு சதவீதத்துக்கும் கீழே கொண்டுவந்து வரலாற்றுச் சாதனை செய்துவிட்டதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மார்தட்டிக் கொண்டிருக்கும். ஆனால், அத்தியாவசிப் பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பணவீக்கம் குறைந்திருப்பதைக் கூறினால் அது தங்களுக்கே பாதகமாக அமைந்துவிடும் என்பதால் இந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது.
பணவீக்கத்தை கணக்கிடப் பயன்படும் டபிள்யு.பி.ஐ. (ரடஐ) எனப்படும் மொத்தவிலைக் குறியீடு குறைந்திருக்கும் போதும், அத்தியாவசியப் பொருள்களின் விலை வேகமாக உயர்ந்து கொண்டே போவது ஏன் என்பது மக்களுக்குப் புரியவில்லை.
கடந்த 19-ம் தேதி அரசு வெளியிட்ட அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின்படி, மார்ச் முதல் வாரத்தில் பணவீக்கம் 0.44 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் இதுவே மிகக் குறைவாகும். பணவீக்கம் இன்னும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மத்திய தொழில்துறை அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் வெளியிட்டுவரும் இந்தப் பணவீக்க மதிப்பு, கடந்த சில மாதங்களாகக் குறைந்து கொண்டேதான் வருகிறது. பணவீக்கம் தாறுமாறாக அதிகரித்தபோது, விலைவாசியும் உயர்ந்ததை வேதனையுடன் கவனித்த மக்கள், இப்போது விலைவாசி குறைய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு.
பணவீக்கம் என்பது மொத்தவிற்பனை விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறதே தவிர, சில்லறை விற்பனை விலையைக் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்களை மிகக் குறைந்த விலைக்கு சந்தைகளில் விற்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சில நேரங்களில் அவர்களது சாக்குப் பைகளைவிடக் குறைந்த விலையே, தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளுக்குக் கிடைக்கும்.
அதேநேரத்தில் நகரங்களில் அதே காய்கறிகள் மிக அதிக விலைக்கு விற்கப்படும். சில நேரங்களில் விலை கொஞ்சம் குறைந்தாலும், விவசாயி அனுபவிப்பது போன்ற கடுமையான சரிவு, சில்லறை விற்பனைக் கடைகளில் இருக்காது. இதுதான் சில்லறை விற்பனைக்கும் மொத்த விற்பனைக்கும் உள்ள வித்தியாசம்.
போக்குவரத்து, கமிஷன், லாபம் போன்ற பல அம்சங்கள் இதற்குக் காரணமாக இருக்கின்றன.
இரண்டாவதாக, பணவீக்கம் குறைந்தாலே, விலைவாசியும் அதனுடன் குறைந்தாக வேண்டும் என்பதில்லை. உண்மையில், பணவீக்கம் என்பது, பொருள்கள் எந்த விகிதத்தில் விலை உயருகின்றன என்பதையே காட்டுகிறது.
உதாரணமாக பணவீக்கம் 10 சதவீதமாக இருந்தபோது, ஒரு பொருளின் விலை சராசரியாக 10 சதவீதம் என்ற விகிதத்தில் உயர்ந்தது என்றால், அதுவே பணவீக்கம் 3 சதவீதமாக இருக்கும்போது 3 சதவீத வேகத்தில் உயரும். அதன்படி பார்த்தால், தற்போது பணவீக்கம் குறைந்திருப்பதால், விலை உயரும் விகிதமும் குறையுமே தவிர, விலை குறையாது.
சில பொருள்களின் விலை, பணவீக்கத்தைவிட அதிகமான விகிதத்தில் உயர்வதை நாம் காண்கிறோம். அதற்குக் காரணம், பணவீக்கம் மதிப்பிடப்படும்போது அனைத்துப் பொருள்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான்.
குறிப்பிட்ட 435 பொருள்களின் விலைகள் மட்டும்தான் பணவீக்கத்தைத் தீர்மானிக்கின்றன. பணவீக்கத்துக்கும் பொருள்களின் விலை உயர்வுக்கும் தொடர்பே இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீத பங்களிப்பை வழங்கும் சேவைகளுக்கான விலைகளும் பணவீக்க மதிப்பீட்டில் அடங்குவதில்லை.
இதனால், மக்கள் அதிகமாகச் செலவிடும் மருத்துவர் கட்டணம், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், வீட்டு வாடகை போன்றவை மிக அதிகமாக உயர்வது பணவீக்கப் புள்ளி விவரங்களில் எதிரொலிப்பதில்லை.
விலைவாசி உயர்வு மற்றவர்களைவிட குறைந்த வருவாய்ப் பிரிவு மக்களை அதிகம் பாதிக்கிறது. பணவீக்க விகிதம் என்னதான் குறைந்து வந்தாலும், இவர்கள் வாங்கும் பொருள்கள் மட்டும் மிக வேகமாக விலை உயருகின்றன.
பணவீக்கத்தை மதிப்பிடும்போது வெவ்வேறு வகையான பொருள்களுக்கு வெவ்வேறு வகையான மதிப்பு கொடுக்கப்படுவதுதான் இதற்குக் காரணம்.
உதாரணமாக ஒரு ஏழைக் கூலித் தொழிலாளி தனது மொத்த வருமானத்தையும் உணவுப்பொருள் வாங்குவதற்குத்தான் பயன்படுத்துவார். ஆனால், இதுபோன்ற பொருள்களின் விலையில் ஏற்படும் மாற்றமானது, பணவீக்கத்தை குறைந்த அளவிலேயே பாதிக்கிறது. இதனால், பணவீக்கம் மிக வேகமாகக் குறைந்தாலும், ஏழைகளுக்கு எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. அதனால் அரசின் புள்ளிவிவரங்களை அவர்கள் நம்புவதுமில்லை.
பணவீக்கம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், பொருள்களை வாங்குவதற்கு மக்கள் தயங்குவதால், முதலீடுகள் குறையும் என அஞ்சப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்புகளும் குறையும்.
இதைச் சரிசெய்வதற்காக வசதியானவர்களை அதிக அளவில் செலவு செய்ய வைப்பதற்கான பல நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. எனினும், பிற்காலத்தில் வேலை இழந்து வருமானம் குறையக்கூடும் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் இருப்பதால், இப்போதைய வருவாயைச் சேமித்து வைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில் வரிவிலக்கு அளிப்பதும் உதவாது.
இந்த நிலையில் யாரையும் வேலையைவிட்டு நீக்காமல் இருப்பதற்காக, அனைவருக்கும் ஊதியத்தை குறைத்து வழங்கலாம் என தனியார் நிறுவனங்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். எதிர்காலத்தில் வருவாய் குறையும் என்கிற மக்களின் அச்சத்தை இது அதிகரித்திருக்கிறது.
கார்கள் உள்ளிட்டவற்றின் விலைக் குறைப்பும், ஆடம்பரப் பொருள்களுக்கு வரிவிலக்கும் அளித்திருக்கிறது அரசு. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக இருக்கும் நமது நாட்டில், கார்களின் விலையைக் குறைப்பதும், ஆடம்பரப் பொருள்களுக்கு வரிவிலக்கு அளிப்பதும் வரவேற்பைப் பெறப்போவதில்லை.
மொத்தத்தில், பணவீக்கம் குறைந்திருப்பதும், பொருளாதாரத்தைச் சீரமைப்பதற்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளும், சாதாரண மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படாது என்பது மட்டுமே நிஜம்.
http://www.dinamani.com/news.asp?ID=DN020090320102056&lTitle=%A3l%D7d+Lh%D3%FBWLs+%2D+No+Title&Title=Editorial+Articles |