Posted By:sohailmamooty On 1/19/2009 |
|
வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள்
தன்னம்பிக்கை பேச்சாளர் சம்பந்தம் பேச்சு
நெல்லை, ஜன. 18: மாணவர்கள் வெற்றிக்கு வித்திடும் 5 விஷயங்களை மந்திரங்களாக மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தன்னம்பிக்கை பேச்சாளர் சம்பந்தம் பேசினார். ‘அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி‘ என்னும் தலைப்பில் அவர் பேசியதாவது: படிப்பு என்பது யோகா போல. உடலும், மனமும் ஒருங்கிணைந்து படிக்க வேண்டும். படிப்பதை விட, பார்ப்பதை விட பதிவு செய்வதே நல்லது. புரியும் வரை மாணவர்கள் படிக்க வேண்டும். தேர்வு எழுதும்போது மறந்துவிட்ட ஒன்றை மீண்டும் மீண்டும் யோசிக்கும்போதுதான் மனம் பதட்டம் அடையும். இதை தடுக்க வினாத்தாள்களை நன்கு வாசிக்க வேண்டும். தேர்வு எழுதும்போது மாணவ, மாணவிகள் செஸ் விளையாட்டு வீரர் போல மாறவேண்டும். ஏனெனில் விடைத்தாளில் முதல்வரி எழுதும்போதே அதன் தொடர்ச்சியை மனதில் ஓடவிட வேண்டும். இதுதான் தேர்வு வேகமாகும். இந்த வேகம் இல்லாத மாணவர்களால் நல்ல மதிப்பெண் பெற முடியாது. பொருத்தமற்ற விடைகளுக்கு பொருத்தமான கேள்விகளை தயாரிக்க மாணவர்கள் பழகி கொள்ள வேண்டும். பலம் பொருந்திய யானைக்கு அதன் பலம் தெரியாது. குட்டி யானையாக இருக்கும்போது அதை சங்கிலியால் கட்டி போட்டிருப்பர். அது வளர்ந்த பிறகு கயிறால் அதை கட்டிப்போட்டாலும், நம்மை பிணைத்திருப்பது சங்கிலிதான் என நினைத்து, அதை கட்டவிழ்க்க யானை முயலாது. அதுபோலவே நம்முடைய பலத்தை நாம் அறியாமலே இருக்கிறோம். திறமைவாய்ந்த சக்திகள் நம் மனதில் தூங்குகின்றன. மனத்தடையை நாம் அகற்றினால்தான் திறமை வெளிப்படும். மாணவர்களின் வெற்றிக்கு துல்லியமாக அறிதலும், வேகமும் மிக முக்கியம். எந்தவொரு பாடத்தையும் படிக்கும் முன்பு தலைப்பை முதலில் படியுங்கள். ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் படித்தால் நம் மனதில் அது ஆழமாக பதியும். செவி அறிவும் மாணவர்களுக்கு முக்கியம். கற்றலை விட கேட்டலே நன்று என்பதற்கிணங்க, கேள்வி ஞானமும் உங்களுக்கு அவசியமாகும். வேகமாக வாசிக்கும் பயிற்சி பள்ளி பருவத்திலே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நான் நம்பிக்கையானவன், நான் திறமையானவன், நான் சாதனையாளன், என்னால் எதுவும் முடியும், நான் வெற்றியாளன் என்ற 5 மந்திரங்கள்தான் உங்களுக்கு வெற்றியை உரிதாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
|
|