Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
அவன் - ஆசிப் மீரான்
Posted By:sisulthan On 3/15/2006

viagra kaufen

viagra kaufen
பள்ளிவாசல் முன்பு ஒரே கூட்டமாகவும் பரபரப்பாகவும் இருந்தது. அதிகாலை நேரத்துக்கேயுண்டான அமைதியைக் கிழித்துக்கொண்டு கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.

"ஹாஜியாருக்குத் தகவல் சொல்லியாச்சா?" யாரோ ஒருவர் உரக்க சொல்லிக் கொண்டிருக்க, "அதெல்லாம் அப்பவே சொல்லியாச்சு. வீட்டை விட்டும் அவர் புறப்பட்டாச்சாம்" என்று இன்னொருவர் பதில் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் .

"இருந்தாலும் எவ்வளவு நெஞ்சழுத்தம் பார்த்தீங்களா இந்தப் பயலுக்கு?" என்றார் மற்றொருவர்.

"ஆமா. இதுக்குப் பேரு நெஞ்சழுத்தமில்ல. திமிரு!" என்று இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசத்தைக் கண்டுபிடித்தது போல முன்னவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் இவர்.

"எனக்கு அன்னைக்கே சந்தேகமாத்தான் இருந்துச்சு. ஆனா, சரி ஏதோ வெளியூர்காரன் போலன்னு நெனச்சுக்கிட்டேன். ஆனா, இன்னைக்கு சரியா மாட்டிக்கிட்டான் பய" என்று சொல்லிக் கொண்டே தொப்பியைச் சரி செய்து கொண்டார் பள்ளிவாசலின் பராமரிப்பு வேலைகளைப் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஒன்றும் செய்யாமலிருக்கும் காதர் அண்ணன்.

"காதர் சொன்னபோது நான் நம்பவேயில்ல பாத்துக்கிடுங்க. அது எப்படி ஒருத்தன் தைரியமா நம்ம பள்ளிக்குள்ள வந்து இப்படி செஞ்சுடுவான்னு நானும் கொஞ்சம் மெத்தனமாத்தான் இருந்துட்டேன். ஆனா, எத்தனை நாளைக்குத்த்தான் கள்ளப் பயலுவளால தப்பிக்க முடியும்? இன்னைக்கு வசமா மாட்டிக்கிட்டான் பாத்தியளா?" பெரிய விசயம் செய்து முடித்த திருப்தியோடு சொல்லிக் கொண்டிருந்தார் முகமது மாஸ்டர். அவர் எப்போது, யாருக்கு, எங்கே மாஸ்டராக இருந்தார் என்பது யாருக்கும் தெரியாதென்றாலும், அவர் அப்படித்தான் அழைக்கப்படுகிறார். சுருக்கமாக 'மாஸ்டர்' என்று சொன்னாலேயே, "யாரு? அந்த வெளங்காத மம்மது மாஸ்டரா?" என்று 'பளிச்'சென்று அடையாளம் காட்டப்படக் கூடிய அளவுக்குப் பிரபலமானவர்.

"அதற்குள் "அம்மாஆஆஆஅ" என்ற வேதனைக் குரல் அந்த அதிகாலை நேரத்தின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் அந்தப் பள்ளிவாசலின் சுவரில் மோதித் தெறித்தது.

"லே சுலைமான்! அவனை ஏம்ல அடிக்க? அதான் ஹாஜியாரு வருதாருல்லா? அதுக்குள்ள அவனைக் கொன்னுப்போடாதலே" மோதினார் அப்துல் சலாம் சுலைமானிடம் கோபமாகப் பேசுவது போல காட்டிக் கொண்டார். நிஜமான கோபத்தோடு சுலைமானிடம் பேசினால் அப்புறம் அவரும் அலற வேண்டியிருக்கும் என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

சுலைமானுக்கு அப்படி ஒரு உடம்பு. தார் ஊற்றிக் காய்ச்சிய கறுப்பில் 'தஹால்' போல வளர்ந்திருந்தான். மேல்நோக்கிய வளர்ச்சி என்றில்லாமல் பக்கவாட்டிலும் அதே போன்ற அசுர வளர்ச்சி. மடித்துக் கட்டிய சாரமும் அதற்கு மேல் கம்பி வலை ஜன்னல் போல முகத்தில் அடிக்கும் வண்ணத்தில் பனியனும், அதற்கும் மேல் பொத்தான்கள் போடப்படாத சட்டையும் எந்தக் கூட்டத்திலும் அவனை அடையாளம் காட்டி விடும்.

பள்ளிக்கூடம் என்றில்லை- பள்ளிவாசல் பக்கத்திலும் கூட மழைக்கு ஒதுங்காத இசுலாமியன். காலையில் எழுந்து இரண்டு வெள்ளாடுகளை அறுத்து காலைக் கட்டித்தொங்க விட்டால் மதியத்திற்குள் விற்று முடித்துவிட்டு காசை எண்ணிப் பார்த்துக் கொண்டு, அப்படியே வண்டியேறி திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி என்று எங்காவது சுற்றியலைந்து படம் பார்த்து அன்றைய காசை அன்றைக்கே செலவழித்து விடுவது என்பதில் மிகக் கவனமாக இருப்பவன். ஆடறுப்பதை விட்டு விட்டால், தகராறு என்று வரும்போது ஆளறுப்பதிலும் சமர்த்தன். இரண்டு முறை ஆட்டின் தோலைக் கிழிப்பது மாதிரி சிலரது குடலைக் கிழித்துப் பார்த்து அதற்காக மூன்று வருடங்கள் படமே பார்க்க முடியாமல் சிறையில் கிடந்தவன். சிறையை விட்டு வெளி வந்தபிறகும் கூட படம் பார்க்க முடியாமல் போனதற்காக வருந்தினானே தவிர வேறெதற்கும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆட்டோடு ஆளையும் அறுப்பதில் நிபுணத்துவம் இருந்ததால் அவனிடம் கடன் சொல்லவோ, அவன் அறுத்துக் கொடுப்பதைத் தவிர வேறேதும் அவனிடம் மறுத்துப் பேசவோ, அவனை எதிர்த்து இன்னுமொரு கடை நடத்தவோ யாரும் துணிந்ததில்லை. அவன் மேல் மற்றவர்களுக்கு அவ்வளவு பயம் இருந்தும் ஏதோ சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன் போல தனது ஆடுகளை ஓதி மட்டுமே அறுக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தான்.

பள்ளிவாசல், பள்ளிக் கூடம் இந்த இரண்டையும் தவிர, சுலைமான பார்த்தறியாத சில இடங்களில் 'மத்ரசா'** வும் ஒன்று. எனவே, சொந்தமாக ஓதி அறுக்கும் அளவிற்கு சுலைமானுக்கு ஞானம் இல்லை என்பதால் காலையிலேயே 'சுபஹூ' ** தொழுகைக்காக 'பாங்கு'*** சொல்ல வரும் மோதினாரைத்தான் ஓதி அறுப்பதற்காக அழைத்துச் செல்வது வழக்கம். அந்தப் பழக்கத்தில் மற்ற எவரையும் விட மோதினார் அப்துல் சலாம் கொஞ்சம் உரக்கவோ அல்லது உரிமையாகவோ உள்ளுக்குள் பயந்துகொண்டே பேசுவார். அதே போலத்தான் இப்போதும் பேசினார் அவர்.

"சரி, இவனை என்னதான் செய்யப் போறதா இருக்கீங்கன்னு சொல்லுங்க?" என்று கேட்டான் சுலைமான். அவன் கேட்ட விதமே கொஞ்சம் பயம் காட்டுவதாக இருந்தது.

"இப்போதைக்கு ஒண்ணும் செய்ய வேணாம் சுலைமான் காக்கா, ஹாஜியார் வருதாங்க. அவங்க வந்ததுக்கப்புறம்தான் இந்த 'ஹராம்'** பொறந்தவனை என்ன செய்யணும்னு யோசிக்கணும்" என்றார் மம்மது மாஸ்டர். தன்னை விடப் பல வயது சிறியவன் என்றபோதும் சுலைமானுக்கு பயந்து அவனை காக்கா என்றழைத்ததன் மூலம் தன்னை ஒரு மாஸ்டராக அவர் அடையாளம் காட்டிக் கொண்டார்.

"அவரு வர்றாரு வராம போறாரு. எனக்கு அதப் பத்தி கவலையில்லை. மோதியாரப்பா, நீங்க வர்றீங்களா? எனக்கு ஆடு வெட்டப் போவணும்" என்று மோதியாரைப் பார்த்து சொன்னான் சுலைமான்- 'கருமமே கண்ணான' சான்றோரைப் போல.

"இரு சுலைமான். இப்ப ஹாஜியார் வந்துடுவாங்க" என்று வாசலைப் பார்த்துக் கொண்டே சொன்னார் மோதினார். ஹாஜியார் வரும்போது தான் இல்லாமல் போனால் தனது வேலையும் இல்லாமல் போய் விடக் கூடும். சுலைமான் கூப்பிட்டும் போகாமல் போனால் தானே இல்லாமல் போய் விடக் கூடும். எது உசிதம்? என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார் அவர். "கொள்ளைல போற பய! இப்படி வந்து அவன் மாட்டிக்கிட்டதால இப்ப எனக்குத்தான் சிக்கலாவுது" என்று மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தவன் மேல் அனாவசியத்துக்குக் கோபம் வந்தது அவருக்கு.. 'சரி அவனைக் கட்டி வச்சு அரைமணி நேரமாவுது. இந்த ஹாஜியார் 'ஹரபாப்'** போறவனாவது நேரத்துக்கு வந்துதொலைஞ்சா நல்லா இருக்கும்? அந்தாளு இனிமே எப்ப வருவானோ? இனி 'சஹர்'** செஞ்சுட்டுத்தான் வந்து தொலைப்பாரா இருக்கும்?! இந்த சுலைமான் வேற நிலையழிஞ்சு நின்னுக்கிட்டு இருக்கான்' மனசுக்குள் அலையலையாய் எண்ணங்களை எழுப்பிக் கொண்டிருந்தார் மோதினார்.

அதற்குள் வாசலில் அரவம் கேட்க 'ஹாஜியார் வந்தாச்சு" என்று கிசுகிசுப்பாகவும், கொஞ்சம் உரக்கவும் சப்தம் கேட்டது. கலாம் ஹாஜியாருக்கு வயது எழுபதைக் கடந்து விட்டது என்றாலும் அந்தக் காலை நேரத்திலும் மிடுக்கு கலையாமல் விறுவிறுவென நடந்து வந்தார்.

பள்ளிவாசலுக்குள் நுழைந்ததுமே அவரது கண்கள் தீர்க்கமாக அங்குமிங்கும் தேடத் துவங்கின.

"எங்கே?" என்றார் அருகிலிருந்தவர்களிடம். ஹாஜியார் எப்போதும் அப்படித்தான். வார்த்தைகளில் சிக்கனம்.

"'கபரடி'**க்குப் போற வழியில" என்று பணிவாகச் சொன்னார் மாஸ்டர்

வேறெதுவும் கேட்காமல் நடையைத் தீவிரப்படுத்தினார் ஹாஜியார். போகும் வழியில் சுலைமானைப் பார்த்து" எப்படி இருக்க சுலைமான்?" என்று அவர் கேட்ட கம்பீரத்திற்கு, "நல்லா இருக்கேன் காக்கா" என்று சாரத்தை அவிழ்த்து விட்டுக் கொண்டே பதில் சொன்னான் சுலைமான். அதுதான் கலாம் ஹாஜியாரின் குணத்திற்குக் கிடைக்கும் மரியாதை. பெரும் செல்வந்தராக இருந்தபோதும் அனைவரையும் அனுசரித்துப் போகும் உயர்ந்த குணம் இருந்தது அவரிடம். வியாபாரத்தில் நேர்மை, பேச்சில் கண்ணியம், பார்வையில் சாந்தம் என்று அவரது குணநலன்களை அறியாதவர்கள் மிகக் குறைவுதான்.

'ஒளு'** செய்யும் இடம் தாண்டி கபரடிக்குப் போகும் வழியில் இருந்த தென்னை மரத்தில் கட்டிப் போடப்பட்டு கிடந்தான் அவன். "அவன் தான்!"என்று மற்றவர்கள் கை காட்ட, கையை உயர்த்தி அவர்களைப் பேசாமல் இருக்குமாறு பணித்து விட்டு அவனருகில் சென்றார் ஹாஜியார்.

கட்டி வைக்கப்பட்டிருந்ததாலோ என்னவோ 'வீரர்கள்' அனைவரும் ஆளாளுக்குத் தங்களது திறமைகளை அவன் மேல் காட்டியிருந்ததில் சில்மூக்கு உடைந்து குருதி வழிந்து கொண்டிருந்தது. "மோதியாரப்பா, தண்ணி கொண்டு வாங்க!!" சற்று உரக்கவே சொன்னார் ஹாஜியார்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தார் மோதினார். கையில் தண்ணீர் இருந்தது.

"மரம் மாதிரி நிக்காம, இவரு கட்டை அவுத்து வுட்டுட்டு, முகத்தை கழுவச் சொல்லுங்க. குடிக்க தண்ணி குடுங்க. மத்ததெல்லாம் பொறவு பார்த்துக்கலாம்" என்றார் ஹாஜியார்.

"ஹாஜியார், இவன் என்ன செஞ்சிருக்கான் தெரியுமா?" என்று இழுத்தார் மாஸ்டர்

"என்ன வேணும்னா செஞ்சிருக்கட்டும். அதுக்காக இந்த நோன்பு நேரத்துல இப்படியா ஒருத்தனை மாட்டை அடிக்குற மாதிரி அடிக்குறது? அவுத்து விடுங்க அவனை" ஹாஜியாரின் குரலில் தெரிந்த உறுதியைப் பார்த்ததும் சுறுசுறுப்பாகக் கட்டு அவிழ்க்கப்பட்டது.

கட்டவிழ்க்கப்பட்டதும் அவன் ஓடி வந்து ஹாஜியாரின் காலில் விழுந்து,"ஐயா!! என்னை மன்னிச்சிடுங்கய்யா" என்று கதறிக் கொண்டு அழுதான். அவன் காலில் விழுவதை எதிர்பார்க்காத ஹாஜியார் பதறிப் போய் விலகி, "டேய்! என்னப்பா இது. கால்ல விழுந்துக்கிட்டு.. மொதல்ல எந்திரிச்சு தண்ணியக் குடி. மோதியாரப்பா, அவனுக்குத் தண்ணி குடுங்க," என்றார்

மோதியாரப்பா அவனுக்குத் தண்ணீர் கொடுக்க, அடிபட்டுக் களைத்திருந்தவன் ஒரு செம்புத் தன்ணீரையும் ஒரே மூச்சில் உள்ளிறக்கினான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் கலாம் ஹாஜியார். அவன் அவசரம் அவசரமாக தண்ணீரை குடிக்கும்போது அவன் தொண்டைக்குழி ஏறி இறங்குவதையே கவனித்துக் கொண்டிருந்தவர் மெதுவாக மோதினார் பக்கமாகத் திரும்பி, "இவனை எவ்வளவு நேரமா கட்டி வச்சிருக்கீங்க?" என்றார்

"இப்பதான் ஒரு பத்து நிமிஷமா...." என்று இழுத்தவர் ஹாஜியாரின் பார்வையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு "ஒரு மணி நேரமா" என்று உண்மையைச் சொல்லி முடித்தார்.

"என்ன தப்பு செஞ்சான் அவன்?" அடுத்த கேள்வி வந்தது

"என்ன ஹாஜியார் அப்படிக் கேக்குதியோ? அவன் யாரு தெரியுமா? அவன் நம்மளவனே இல்ல. ஒரு கள்ள காஃபிர்.** அவனுக்குப் பள்ளிவாசலுக்குள்ள என்ன வேலைன்னு மொதல்ல கேளுங்கோ!" என்றார் மாஸ்டர். அதைச் சொல்லி முடிக்கும்போதே சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்லி விட்டதான பெருமிதம் அவர் முகத்தில் பொங்கி வழிந்தது.

கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் மாஸ்டர் சரியாக விசயத்தை அதன் தீவிரம் குறையாமல் எடுத்துச் சொன்னதான திருப்தி முகத்தில் தென்பட்டது. மாஸ்டரைப் பிடிக்காதவர்கள் தவிர மற்றவர்கள் அவரைக் கொஞ்சம் பெருமையோடு பார்த்தார்கள்.

"அவன் பள்ளிவாசலுக்குள்ள நொழைஞ்சதுக்கா அவனைக் கட்டி வச்சு அடிச்சிருக்கீங்க?" ஹாஜியரின் குரலில் அதிருப்தி பலமாகத் தென்பட்டதும், மாஸ்டர் ஆதரவாளர்கள் மாஸ்டரை எரிப்பது போலப் பார்க்கத் துவங்கினார்கள்.

"அதில்ல காக்கா. இவன் இன்னொரு தப்பும் செஞ்சிருக்கான்" இம்முறை வேறு யாரும் வாய் திறக்காததால் சுலைமான் வாய் திறந்தான்.

"அப்படி என்ன தப்பு செஞ்சான்? சொல்றதைத் தெளிவாச் சொன்னாத்தானே எனக்கும் தெரியும். அவசரமா பள்ளி வாசல் பக்கம் வரைக்கும் வாங்கன்னு கூப்பிட்டீங்க. என்னனு கேட்டதுக்கு ஒருத்தனைக் கட்டி வச்சிருக்கோம் வந்து விபரமாக் கேளுங்கன்னு சொன்னீங்க. என்னமோ ஏதோன்னு வந்தா பள்ளிவாசலுக்குள்ள வந்தான். அதான் கட்டி வச்சிருக்கோம்னு சொல்றீங்க. வெக்கமா இல்ல உங்களுக்கு? அவன் வந்தா என்ன கெட்டுப் போச்சு உங்களுக்கு?" ஹாஜியாரின் குரலில் அதட்டும் தொனி தென்பட்டது.

"அப்படியில்ல ஹாஜியார். இவன் பள்ளிவாசல்ல நொழஞ்சதுக்காக அவனைக் கட்டி வைக்கலை. ரெண்டு மூணு நாளாவே இவன் பள்ளிவாசலுக்கு வந்து போய்கிட்டு இருக்கான். நாம பள்ளிவாசல்ல 'சஹர்'** செய்றதுக்காக சோறு வச்சிருக்கோம். இந்த 'மொஹல்லா'**ல இருக்குறவங்க மட்டும் காலைல வந்து 'சஹர்' செய்யுற மாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கோம்." காதர் அண்ணன் மெதுவாக எடுத்துச் சொன்னார்.

"ஆமா அது தெரிஞ்ச விசயம்தானே? நோன்பு வந்ததுன்னா காலைல 'சஹர்' வைக்குறதுக்கும் சாயங்காலம் நோன்பு திறக்க கஞ்சி வைக்குறதுக்கும் நம்ம 'மொஹல்லா'ல ஏற்பாடு வருசா வருசம் நடக்குற விசயம்தானே? அதுல என்ன இருக்கு?" ஹாஜியார் குரலில் இப்போது லேசான எரிச்சல் தென்பட்டது.

"இந்தப் பய ரெண்டு நாளா இங்கன வரான் ஹாஜியார். காலைல வந்து தொப்பி போட்டுக்கிட்டு எல்லாரு மாதிரியும் சஹர் செஞ்சிக்கிட்டு இருந்தான்."

"மொதல்ல எங்களுக்கு யாருக்கும் சந்தேகமே வரலை. பக்கத்து ஊருக்காரனா இருக்கும்னுதான் நெனச்சோம் கேட்டியளா?"

"ஆனா பொறவு பார்த்தா, இவன் சாப்பிடுதான். சாப்பிட்டுப் போட்டு அப்படியே மெதுவா காணாமப் போயிடுதான். 'சுபுஹு' பாங்கு சொல்லுறதுக்குள்ள ஆளே காணோம். சலாம் சொன்னா கூட ஒழுங்கா பதில் சலாம் சொல்லத் தெரியலை."

"அப்பத்தான் சலாம் காக்கா இவனை கொஞ்சம் கவனிச்சிருக்காரு. 'பேரு என்ன வாப்பா?'ன்னு கேட்டதுக்கு ரஹ்மான்னு சொல்லியிருக்கான். சரி 'வாப்பா பேரு என்ன?' ன்னு கேட்டதுக்கு முழிச்சிருக்கான். பொறவுதான் யோசிச்சு அல்லா பிச்சைன்னு சொல்லியிருக்கான். அவருக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகமாயி 'உம்மா பேரு என்னலே?'ன்னு கேட்டதுக்கு 'எனக்கு உம்மா இல்ல'ன்னு சொல்லியிருக்கான். 'எந்த ஊருலே?'ன்னு கேட்டதுக்கு 'விசலாமரம்'னு சொன்னதும்தான் சலாம் காக்காவுக்கு சந்தேகமா போயி காதர் அண்ணன் கிட்ட சொல்லியிருக்காரு"

"ஆமா ஹாஜியார் காக்கா, விசலாமரத்துல துலுக்கன் எங்க இருக்கான்? அதான் எனக்கு சந்தேகமாப் போச்சு"

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆளாளுக்குக் கொஞ்சம் நடந்ததை எடுத்துச் சொல்ல,

"சரி அதுக்கு....?" என்றார் ஹாஜியார்.

"என்ன ஹாஜியார் அப்படிக் கேக்குறீங்க? நம்ம பள்ளிவாசலுக்குள்ள நம்மாளு இல்லாத ஒரு காஃபிர் வந்து, நாம நோம்புக்கு 'சஹர்' செய்யுற நேரத்துல நம்ம கூட வந்து சாப்பிட்டு நம்மள ஏமாத்துறான். என்னன்னு சாதாரணமா கேக்குதீங்க?" என்றார் முகமது மாஸ்டர்.

எப்போதுமே முக்கியமான நேரத்தில் குரல் கொடுத்து அவரது மகிமையை நிலைநாட்டுவதை எண்ணி மாஸ்டரிஜின் ஆதரவாளர்கள் இன்னொருமுறை பெருமை பொங்க மாஸ்டரைப் பார்க்க, மாஸ்டரும் புன்னகை தவழ அதை ஏற்றுக் கொள்பவர் போலத் தலையசைத்தார்.

"தம்பி இங்க வாப்பா" என்றார் ஹாஜியார்.

அந்தத் தம்பி நடுக்கத்தோடு தரையிலிருந்து எழுந்து வந்தான்.

"நீ இசுலாமியனா இல்லையா?" ஹாஜியார் குரல் மென்மையாக ஒலித்தது

"இல்லீங்கண்ணாச்சி.. என்னை மன்னிச்சுடுங்க அண்ணாச்சி" குரல் தழுதழுத்தது அவனுக்கு..

"இது முசுலீம்கள் பள்ளிவாசல்னு உனக்குத் தெஜியாதாப்பா?" மீண்டும் அதிராத மென்மையான குரலிலேயே கேட்டார் ஹாஜியார்

"தெரியும் அண்ணாச்சி" தலையைக் கவிழ்ந்து கொண்டான் அவன். தரையைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்கள் குற்றவுணர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தன.

"இந்த பாரு தம்பி. அழுது என்ன புண்ணியம்? தப்புன்னு தெரிஞ்சும் எதுக்குப்பா பள்ளிவாசலுக்கு வந்தே?"

"தப்புத்தான் அண்ணாச்சி தெரியாம செஞ்சுப்புட்டேன். தப்புத்தான்" மீண்டும் மீண்டும் அதையே முணுமுணுத்தன அவனது உதடுகள்.

"பாருங்களேன் திமிரை. செய்யுறதையும் செஞ்சுட்டு மொதலக் கண்ணீரு வுடுறான்" என்றார் சலாம். கூட இருந்தவர்களும் ஆமோதித்து முணுமுணுக்க ஹாஜியார் மெல்லத் திரும்பி அவர்களைப் பார்த்ததும் மீண்டும் அங்கே அமைதி நிலவியது.

"சரி தம்பி. தப்பு செஞ்சிட்டீங்க. இனிமே இந்த மாதிரி செய்யாதீங்க என்ன?" என்றார் ஹாஜியார்

ஓடி வந்து மீண்டும் அவர் காலில் விழுந்தான் அவன். "ஐயா என்னை மன்னிச்சிடுங்கய்யா. நான் தெரிஞ்சே இந்தத் தப்பை செஞ்சுட்டேன்யா. என்னால ஏதாவது தெய்வக் குத்தம்னா என்னை தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்கய்யா" அவனது கதறல் அந்த அதிகாலை நேரத்தை கனமாக்கிக் கொண்டிருந்தது.

அவனை மெதுவாகக் கைத்தாங்கலாக உயரத் தூக்கினார் ஹாஜியார். "சரி தம்பி!! தெய்வக் குத்தம்லாம் ஒண்ணும் இல்ல. அதெல்லாம் மனுசங்களா நெனச்சுக்கறதுதான். நீனும் மனுசன் நானும் மனுசன் தானே? அதனால் தப்பெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனா, உனக்கு இங்க வரக்கூடாதுன்னு தெரிஞ்சும் வந்திருக்கிய என்ன காரணம்?"

ஹாஜியார் கேட்டதும் கையால் முகத்தை மூடிக் கொண்டு அழுதான் அவன். அந்த மெல்லிய உடல் குலுங்குவதையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் அவர். மெல்ல அவனருகே சென்று, "தம்பி, எதுக்காக அழணும்? காரணத்தை மட்டும் சொல்லு"

பேச முடியாமல் தொடர்ந்தும் அழுதான் அவன். அவன் அழுகை அடங்கட்டும் என்று ஹாஜியார் காத்திருந்தார். அவனது உடல் குலுங்கி நின்றதும் மெதுவாகக் கேட்டார். "தம்பி, இப்பவாவது சொல்லலாமா?"

"என்ன சொல்றது அண்ணாச்சி.. எழவெடுத்த பசி அண்ணாச்சி. நாலு நாளாவுது நானும் என் தம்பியும் சாப்பிட்டு. வெவசாயக் கூலிக்குப் பொழைக்குறவன் அண்ணாச்சி. மழயில்லாம வெவசாயமும் இல்ல வேலையும் இல்ல. கூலி வேலை செஞ்சும் ஒண்ணும் மிஞ்சலை. காலைல வேல தேடி வரக்குள்ள இங்க எல்லாம் காலைல நோம்புக்காக சாப்பிடுதாங்கன்னு தெரிஞ்சு போச்சு. அதான் நானும் கூட்டத்தோட வந்து கொஞ்சம் சாப்பிட்டுட்டு தம்பிக்கும் கொஞ்சமா ஒளிச்சு கொண்டு போய் குடுத்தேன் அண்ணாச்சி. உங்க ஆட்கள் புண்ணியத்துல மூணு நாளா அரை வயித்துக்குச் சாப்பிட்டோம். பண்ணுதது தப்புன்னு எனக்கு தெரிஞ்சுது அண்ணாச்சி. ஆனா எங்க பாழாப் போன வயித்துக்கு எதுவும் தெரியலை. எங்களை மன்னிசச்சிடுங்க!!" என்று அவன் அழுதபோது ஹாஜியார் கண்களும் கலங்கிப் போயிருந்தது.

கொஞ்ச நேர அமைதிக்குப் பின் ஹாஜியார் கூடியிருந்தவர்களைப் பார்த்தார்.

"என்ன மாதிரி 'ஈமான்' உள்ளவங்க நீங்க எல்லாம்னு எனக்குப் புரியலை? நோன்பு எதுக்காக வைக்குறோம்னு கூடத் தெரியாம நோன்பு வச்சு நீங்கள்லாம் என்னத்த சாதிக்கப் போறீங்களோ?! இல்லாதவனோட பசியையும், ராணுவத்துல கஷ்டப்படுறவனோட தாகத்தோட அருமையையும் புரிஞ்சுக்கறதுக்குத்தான் நோன்பு. இல்லாத ஒருத்தன் பசிக்காக உங்க கூட உட்கார்ந்து சாப்பிட்டா, அவனை மரத்துல கட்டி வச்சு அடிச்சுட்டு, நீங்க வைக்குற நோன்பை அந்த ஆண்டவன் எப்படி ஏத்துக்குவான்னு நினைக்குறீங்க? பசிச்சவனுக்கு ஒருவாய் சோறு போட வக்கில்லாம தலைல தொப்பிய வச்சுக்கிட்டு முஸ்லீம்னு சொல்லிக்கிட்டு திரியாதீங்க. எவனையும் அடிக்குறதுக்கு முன்னால என்ன ஏதுன்னு விசாரிங்க. விடிஞ்சும் விடியாமலும் ஒருத்தன் பள்ளிவாசலைத்தேடி வந்து சாப்பிட வந்திருக்கான்னா அவன் எந்தளவு பசியோட இருந்திருக்கணும்னு யோசிச்சிருந்தா இவனை அடிக்க உங்களுக்கெல்லாம் மனசு வந்திருக்காது. எதையும் அறிவோடயும் மனுசத்தனத்தோடயும் பாருங்க மொதல்ல!" ஹாஜியாரின் குரலில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.

"இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க. இந்தத்தம்பி நோன்பு முடியப் போற மீதி நாளுக்கும் அவன் தம்பியோட இங்கத்தான் சஹர் பண்றதுக்கு வருவான். இல்லாத அவனோட பசிக்கும் சேர்த்து நாம சோறு போட்டா நாம் ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டோம்.. புரிஞ்சுதா? மோதியாரப்பா. தம்பியப் பாத்துக்கிடுங்க!" சொல்லி விட்டு நகர்ந்தவர் அவனிடம் போய்,

"நாளைலேருந்து உன் தம்பியையும் கூட்டிக்கிட்டுவா தம்பி. தலைல தொப்பி எல்லாம் போட வேண்டாம் புரிஞ்சதா? என்று அவன் கன்னத்தை மெல்லமாகத் தட்ட அந்தக் கைகளைப் பிடித்துக் கொண்டவனின் கண்கள் நிறைந்து போயிருந்தது.





Moral Story
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..