என்னுடைய அதிபதி எனக்கு ஒன்பது கட்டளைகளை அளித்திருக்கின்றான் என்கிற நபிமொழி நினைவிருக்கின்றதா?
(IFT வெளியீடான டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மத் அவர்கள் தொகுத்த ‘வேத வரிகளும் தூதர் மொழிகளும்’ நூலில் 94 ஆம் பக்கத்தில் இந்த நபிமொழி இருக்கின்றது)
அந்த ஒன்பது கட்டளைகளில் கடைசி கட்டளையாக இடம் பெற்றிருப்பது ‘என் பார்வை கூர்மை உள்ளதாய் இருக்க வேண்டும்’ என்பதே.
அதாவது படிப்பினைகளைப் பார்த்து உணர்கின்ற அளவுக்குக் கூர்மையாதாய் இருக்க வேண்டும் என்று பொருள்.
கடந்து சென்ற 2020 -யின் தனிச் சிறப்பு என்னவெனில் அது ‘படிப்பினைகளின் ஆண்டாக’ இருந்ததுதான். அது படிப்பினைகளைப் பார்த்து உணர்கின்ற நம்முடைய பார்வைத் திறனை மேன்மேலும் கூர்மைப்படுத்திவிட்டது.
நல்ல முறையில் பார்க்கின்ற திறனையும், நிகழ்வுகளும் நடப்புகளும் தருகின்ற செய்தியை உய்த்துணர்கின்ற அறிவாற்றலையும் பெற்றவர்கள் இந்த உலகத்தில் எல்லாவற்றிலும் எப்போதும் படிப்பினையைப் பெற்றவாறுதான் இருப்பார்கள்.
என்றாலும் கருணைமிக்க இறைவன் சில சமயம் மனிதர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகின்ற நோக்கத்துடன் நிகழ்வுகளையும் நடப்புகளையும் மறைத்து இருக்கின்ற திரையைக் கிழித்து தன்னுடைய அடையாளங்களை சட்டென்று எவரும் பார்த்துவிடக்கூடிய அளவுக்கு பட்டவர்த்தனமாக ஆக்கிவிடுகின்றான்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் இறைவனின் மகத்தான ஆற்றலின், அளப்பரிய வலிமையின் இம்மியளவிலான வெகுசாதாரணமான வெளிப்பாட்டையும் வீச்சையும் பார்த்து அது வரை அலட்சியத்தில் மதிமயங்கிக் கிடந்திருந்தவர்களும் சிலிர்த்தெழுகின்றார்கள். நிகழ்வுகளிலிருந்து படிப்பினைகளை உய்த்தறிகின்ற திறன் உயிர் பெற்றுவிடுகின்றது. ‘எந்தெந்த வெகுமதிகளை பொய்யெனக் கூறுவீர்கள்?’ என்கிற கனமான கேள்வியின் உஷ்ணத்தை உணர்ந்துகொள்கின்றார்கள்.
படிப்பினையைப் பார்த்துணர்கின்ற கண்களைக் கொண்டு என்னைப் பாருங்கள் அறிவுரையைச் செவியேற்கின்ற காதுகளைக் கொண்டு என்னைக் கேளுங்கள்
எனச் சொல்லியவாறு 2020 விடைபெற்று இருக்கின்றது.
2020-இல் வெடித்து புலப்பட்ட கொரோனா வைரசை படிப்பினை பெறுகின்ற கண்களுடன் பார்த்தவர்கள் எத்தனை பேர்? அதில் பொதிந்திருந்த இறை அழைப்பிலிருந்து அறிவுரை பெற்றவர்கள் எத்தனை பேர்? 2021 ஆண்டின் மாதங்களும் நாள்களும் இந்தக் கேள்விக்கான விடையைப் பொருத்தே அமையும். 2020-இல் இறைவன் விடுத்த எச்சரிக்கையையும் மீறி அலட்சியத்தில் அமிழ்ந்து கிடப்பவர்கள் மீது அல்லாஹ் கிருபை செய்வானாக. சோதனைகள் மேன்மேலும் கடுமையானவையாய் பேருருவம் எடுப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
அதே சமயம் எல்லாவகையான நிலைமைகளிலும் நன்மைகளை ஏவி, தீமைகளைத் தடுக்கின்ற பணியில் மும்முரமாக ஈடுபடுபவர்கள் வாழ்த்துக்குரியவர்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த வாழ்த்துக்குரியவர்களின் பட்டியலில் இணைப்பானாக! ஆமீன்
டாக்டர் ஹஸன் ரஜா மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
#சிந்தனை #சிந்தனைக்கு #இன்றுஒருதகவல் #ஜமாஅத் #டாக்டர்ஹஸன்ரஜா #மனத்துக்குள்வெளிச்சம் #மாற்றம்மலர #இஸ்லாமியசமுதாயம் #உரத்தசிந்தனை #தஸ்கியா #2020 #மிர்ஸாகாலிப் #படிப்பினை |