Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இரண்டு கேள்விகள், ஒரே பதில்: தமிழ் மொழி
Posted By:peer On 4/25/2020 9:02:02 AM

"நீ வசிக்கும் ஊர் எது? உன் காலில் காயம் வந்தது எப்படி?"
என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது.

"சாம்பார் மணப்பதேன்? உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் "பெருங் காயத்தால்!" என்பது.

இன்று ஆங்கில வழிக் கல்வி பெருகிவிட்ட காலம். முன்னர் பெரும்பாலானோர் தமிழ்வழிக் கல்வியில் பயின்றபோது இத்தகைய சொல் விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும், சிந்தனைத் திறனையும் ஒரு சேர வளர்த்தன...

இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு.

உதாரணமாக,
"தேர் ஓடுவது எதனால்? தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்,

"அச்சாணியால்" என்பது.

தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது அச் - சாணியால்
என்று பதிலில் விளக்கம் கிடைக்கும்.

இடைக்காலத்தில் வாழ்ந்த இளஞ்சூரியன், முதுசூரியன் என்ற இரட்டைப் புலவர்களில் ஒருவர் கண்பார்வையற்றவர், ஒருவர் கால் ஊனமானவர்.

கால் ஊனமானவரைக் கண்பார்வையற்றவர் தோளில் சுமந்து செல்வார். கால் ஊனமானவர் தோளில் இருந்தவாறே எப்படிச் செல்ல வேண்டும் என வழி சொல்வார்.

இவ்விரு புலவர்கள் எழுதிய வெண்பாக்கள் பலவும் இதேபோல் சொல் விளையாட்டு பாணியில் அமைந்தவை தான்.

ஒருவர் வெண்பாவின் இரண்டடியில் கேள்வி கேட்க மற்றவர் அடுத்த இரண்டடிகளில் பொருத்தமான பதில் சொல்வார்.

மதுரைத்தெப்பக் குளத்தில் கால் ஊனமானவர் படியில் அமர்ந்து பார்த்தவாறிருக்க, கண்பார்வை அற்றவர் தம் துணியை நீரில் அலசினார். அப்போது துணி குளத்தில் நழுவி எங்கோ சென்றுவிட்டது. அதைப் பார்த்த கால் ஊனமானவர்?

"அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ?" - எனக் கேள்வி கேட்டார்.

அதாவது, தண்ணீரில் துணியைப் போட்டு துவைக்கிற சாக்கில் அடிஅடியேன்று அடித்தால் அது (கோபித்துக் கொண்டு) நம்மை விட்டுப் போகாதா என்பது அவர் கேள்வியின் பொருள்.

அதற்கு பார்வையற்றவர் சொன்ன பதில் இதுதான்!  "எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதூரைச் சொக்கலிங்கம் உண்டே துணை" - என்று வெண்பாவை நிறைவு செய்தார்.

அதாவது க லிங்கம் என்ற சொல்லுக்குத் துணி என்று பொருள். இந்தத் துணி போனால் என்ன? மதுரைச் சொக்கலிங்க மாகிய தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்பதே அவரது பதில். பார்வையற்றிருந்தாலும் அவரது தெய்வ நம்பிக்கையின் ஆழம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

இப்போது முழு வெண்பாவையும் பார்க்கலாம்..!

"அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீர் அதனைத்தப்பினால் நம்மையது தப்பாதோ? -
எப்படியும் இக்கலிங்கம் போனால்என் ஏகலிங்க மாமதுரைச்சொக்கலிங்கம் உண்டே துணை!"

தமிழின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு தந்தோம்.

எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம், திருக்குறளைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டார்.

"திருக்குறள் 1330 குறள்கள் அல்லவா? திருக்குறளைத் திருக்குறள்கள் என்று தானே சொல்லவேண்டும்? அப்படியிருக்க பன்மையில் சொல்லாமல் ஏன் ஒருமையில் திருக்குறள் என்று சொல்கிறோம்?" என்று கேள்வி கேட்டார்.

அதற்கு சுஜாதா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

"திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை".

புலனத்தில் வந்தது




தமிழ் மொழி
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..