Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தமிழின் 247 எழுத்துக்களில் பயன் படாத எழுத்துக்கள் உள்ளனவா?
Posted By:peer On 4/25/2020 8:38:38 AM

எனக்கு தமிழ் மொழி குறித்து நீண்ட நாட்களாக இருந்து வரும் சில ஐயப்பாடுகளுக்கு விடைத் தேடும் வகையில் தமிழறிஞர் ஒருவரிடம் ஒரு வினாவினை தொடுத்தேன்....

அய்யா...
தமிழில்
*உயிர் எழுத்துகள் 12
*மெய் எழுத்துகள் 18
*உயிர்மெய் எழுத்துகள் 216
*ஆய்த எழுத்து 1
என மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன.

இந்த 247 எழுத்துகளில் பல எழுத்துகள் பயன்பாடற்ற எழுத்துகளாகவே உள்ளனவே
... குறிப்பாக  *உயிர்மெய் எழுத்துகளில் உள்ள "ங"கர வரிசை எழுத்துகளில் ,"ங" என்ற எழுத்து மட்டுமே அதிக அளவில் பயன்படுகிறது! மற்றுமுள்ள 17 ஙகர வரிசை எழுத்துகள் பயனற்றே உள்ளன.!

அதேபோன்று *ஞ கர வரிசை எழுத்துகளிலும் *ஞ -ஞா ஆகிய இரண்டு எழுத்துகள் மட்டுமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.! *மற்ற 16 எழுத்துகள் பயன்பாடற்ற எழுத்துக்களாகவே உள்ளன.

*இதுபோன்றே இன்னும் சில உயிர்மெய் எழுத்துக்களும் பயனற்ற எழுத்துகளாகவே உள்ளன

பயனில்லாத அந்த எழுத்துகளை தமிழ் எழுத்துகளாகத்தொடர்ந்து வைத்திருப்பது ஏன்..? அது சரியானதுததானா..?
என , எனக்கு நீண்டநாட்களாக இருந்துவரும் சந்தேகத்தை தமிழ் புலமை மிக்க அந்த பெரியவரிடம் கேட்டேன்!

எனது கேள்வியை பாராட்டிய அவர், 'இந்த கேள்விக்கான விடையை நீங்களே, ஆய்வு செய்து ஒரு ஆய்வறிக்கையாக வழங்கலாமே தம்பி!  அதற்கான முயற்சியில் இப்போதே இறங்குங்கள் !!- எனக் கூறியவர்,
தொடர்ந்து,

"ஞ" கர வரிசை எழுத்துகளில் 'ஞ'-'ஞா' மட்டுமின்றி இன்னும் நிறைய எழுத்துகளும் பயன்பாட்டில் உள்ளன.
அந்த எழுத்துகளை கொண்ட பல சொற்கள் கழக அகராதியில் உள்ளன.

ஔவையாரும் ,பாரதியும், சமீபகாலத்தில் கவிஞர் சிற்பியும் "ஞ"கர வரிசை எழுத்துகளில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர்  எனக் கூறி சில 'ஞ'கர வரிசை சொற்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அதனை கேட்க,கேட்க "ஞ"கரத்தில் இத்தனை சொற்களா  என்ற ஆச்சரியம் ஏற்பட்டது! !

#ஞ கரம்

ஞண்டெனப் பற்று (ஞண்டு : நண்டு)
ஞாலத்து இசை பெறு (ஞாலம் : உலகம்)
ஞிமிரெனப் பாடு (ஞிமிர் : வண்டு)
ஞெழுங்க நட்புறு (ஞெழுங்க : இறுக்கமாக)
ஞேயம் நாட்டில் வை (ஞேயம் : அன்பு)
ஞகரத்தில் இத்தனை வார்த்தைகளை பயன்படுத்தி
கவிஞர் சிற்பி நவின ஆத்தி சூடி எழுதியுள்ளார்!

மேலும் ஆத்தி சூடி விஷயத்தில் சிற்பியின் முன்னோடிகளான பாரதியும், ஔவையும்
" ஞ"கரத்தை கையாண்டுள்ள விதம்
ஔவையாரின்
ஆத்தி சூடியில் ஞகரத்தில் தொடங்கும் வரி ஒன்றே ஒன்றுதான்.

ஞயம்பட உரை (ஞயம்பட : கனிவானமுறையில்)
ஔவையுடன் ஒப்பிடுகையில்,
பாரதியார் "ஞ"கரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
அவரது
‘புதிய ஆத்தி சூடி’யில், மொத்தம் ஐந்து வரிகள் ஞகர வரிசையில் அமைந்துள்ளன.

ஞமலிபோல் வாழேல் (ஞமலி : நாய்)
ஞாயிறு போற்று (ஞாயிறு : சூரியன்)
ஞிமிறென இன்புறு (ஞிமிறு : வண்டு )…
ஞெகிழ்வது அருளின் (ஞெகிழ்தல் : அலையல், அவிழ்தல், வாடுதல், சுழலுதல், தளர்தல், இளகுதல், என பல பொருள் உள்ளன !
ஞேயம் காத்தல் செய் (ஞேயம் : அன்பு)

மேலும் ஆசையோடு,
கழக அகராதியிலும் (திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) அணுகினேன்.
நிறைய அருமையான வார்த்தைகள் காணப்பட்டன.

ஞஞ்ஞை : மயக்கம்
(இதைச் சரியாகச் சொல்லிமுடிப்பதற்குள் நிஜமாகவே மயக்கம் வந்தாலும் வந்துவிடும்!)
ஞத்துவம் : அறியும் தன்மை
ஞலவல் : மின்மினிப் பூச்சி / கொக்கு
ஞறா : மயிலின் குரல்
ஞாஞ்சில் : கலப்பை / நாஞ்சில்
ஞாடு : நாட்டுப் பகுதி
(இப்படிப் பல வார்த்தைகளில்,
‘ஞ’கரத்தைத் தூக்கிவிட்டு,
‘ந’கரத்தைப் போட்டால், அர்த்தம் சரியாகவே வருகிறது!)

ஞாதி : சுற்றம் (நாதி?)
ஞாயிறுதிரும்பி : சூரிய காந்தி (வாவ்!)
ஞாய் : தாய்
ஞெகிழ் : தீ
ஞெள்ளை : நாய்
ஞேயா : பெருமருந்து
ஞொள்கு : இளை, அஞ்சு, சோம்பு, அலை

இனிமேல், ‘ஞாயிறு’, ‘ஞானம்’, ‘ஞாபகம்’ ஆகிய பொதுவான வார்த்தைகளை மட்டுமின்றி, மற்ற "ஞ"கர வார்த்தைகளையும் ஞாபகத்தில் வைத்திருந்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தவேண்டும்!
என முடிவு செய்துவிட்டேன்!




தமிழ் மொழி
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..