மாஞ்சோலை என்பது திருநெல்வேலிமாவட்டத்தில் மணிமுத்தாறுக்குஅருகில் இருக்கும் ஒரு மலைச் சுற்றுலாத் தலமாகும். இயற்கை எழில் மிகுந்த இடமாகும். திருநெல்வேலியில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இவ்விடத்தை 3 மணிநேரப் பயணத்தில் அடையலாம். இவ்விடத்தில் தேயிலைத் தோட்டம் மிகுந்துள்ளன.
*அமைவிடம்*
கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவிவழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.
*அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்*
மாஞ்சோலைக்கும் உயரே 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு(மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகளும் நிறைந்துள்ளன.இப்பகுதிடயில் மலைஉச்சிகளில் இருந்து மற்ற இடங்களை காணுதல் அருமையான ஒரு அனுபவமாக அமையும்.
*தேயிலைத் தோட்டத்தின் வரலாறு*
திருவிதாங்கூர் இளவரசர் மார்த்தாண்ட வர்மருக்கும் அவரது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. எட்டுவீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார் வர்மாவின் தாயார் ராணி உமையம்மை. வர்மாவுக்கு உதவப்போய், எதிர்பாராத விதமாக சிங்கம்பட்டி இளவரசர் மரணம் அடைந்தார். அப்படி இறந்தவ ருக்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். 32 வது மன்னர், சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கொலை வழக்கில் சிக்கினார். வழக்கிற்கு நிறைய செலவானதால், அதை சமாளிக்க மலைநாட்டுல் பரிசாக பெற்ற நிலத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலத்தை பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார்.இரயத்துவாரி நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகும் இந்நிறுவனம் அரசுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டு தேயிலைத் தோட்டத்தை நடத்தி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் இங்கு தனிப்பட்ட யாரும் ஒரு சதுர அடி இடம்கூட வாங்க முடியாது. முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் கவனத்துடன் பராமரிக்கப்படுகிறது. அதனாலேயே இயற்கை எழிலை உள்ளவாறு காணமுடிகிறது. பெரும்பாலும் இத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வோருக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்ட நிலையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது 138 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டது.