.இரண்டாவது சிலுவை யுத்தம் ஐரோப்பாவிலிருந்து பெரும் படையொன்று, சிலுவையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, மத்திய கிழக்கை நோக்கி இரண்டாவது முறையாக யுத்தத்திற்கு வந்திருந்தது. திமுதிமுவென்று திரண்டு வந்திருந்தது அந்தப் பெருங்கூட்டம்.
திமஷ்க் எனப்படும் டமாஸ்கஸ் செழிப்பும் வளமுமாய் காண்பவர் மயங்கும் கட்டழகியாய்த் திகழ்ந்த காலம் அது. ‘கைப்பற்று’ என்று அதை நோக்கி முன்னேற ஆரம்பித்தது சிலுவைப் படை.
கிறிஸ்தவப் படைகளுக்கும் அவர்களது ஆட்சிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த மன்னர் நூருத்தீன் ஸங்கி அலப்போ நகரில் அமர்ந்து ஆட்சி செலுத்தி வந்தார். ஆனால் அலப்போவுக்குக் கட்டுப்படாமல் நூருத்தீனின் ஆட்சிக்குக் டிமிக்கிக் கொடுத்து நெடுங்காலம் சுயாதீனமாக விளங்கி வந்தது முஸ்லிம்களின் டமாஸ்கஸ் நகரம்.
இப்பொழுது வந்து சேர்ந்த இந்தப் பெரும் சோதனை நூருத்தீனுக்குப் பட்டுக் கம்பளம் விரி்த்தது. டமாஸ்கஸிலிருந்து உதவி கேட்டு செய்தி வந்து சேர, அலப்போவிலிருந்து உடனே கிளம்பியது பெரும் படை.
அந்த இரண்டாம் சிலுவை யுத்தத்தில் கிறிஸ்தவர்கள் அப்பட்டத் தோல்வியைத் தழுவியதும் சில காலத்திற்குப் பிறகு டமாஸ்கஸ் நூருத்தீனின் வசம் வந்து சேர்ந்ததும் திருப்பங்கள் நிறைந்த வரலாறு.
மற்றொரு முக்கிய விளைவையும் இந்த இரண்டாவது சிலுவை யுத்தம் நிகழ்த்தியது. டமாஸ்கஸ் நகர மக்கள் மத்தியில் அது பற்ற வைத்த தீ. ஜிஹாது தீ. பிற்காலத்தில் நூருத்தீனின் திட்டங்களுக்கு உதவியாய் அமைந்த தீ. டமாஸ்கஸ் வீரர்களுக்கு நடுவே மிகவும் வயது முதிர்ந்த காழீ ஒருவர் இருந்தார். அவர் பெயர் அல்-ஃபின்தலாவி (al-Findalawi). காலாட்படை வீரராக ஓடிக்கொண்டிருந்த அவரைப் பார்த்துவிட்ட தளபதி, “ஐயா! உங்களது வயது உங்களுக்குப் புனித போரிலிருந்து விலக்களிக்கிறது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று கருணை பொழிந்து, கெஞ்சாத குறையாய் அவரைத் திரும்பிப் போகச் சொன்னால் அப்பட்டமாக மறுத்தார் முதியவர் ஃபின்தலாவி.
“நான் என்னை விற்பனைக்கு அளித்தேன். இறைவன் என்னை வாங்கி விட்டான். அந்த ஒப்பந்தத்தை என்னால் முறிக்க முடியாது” என்று பதிலளித்து விட்டு கிறிஸ்தவப் படைகளுடன் சண்டையிட ஓடிவிட்டார்.
நகர் வாயிலின் அருகே அவரது ஆவி பிரிந்து, உயிர்த் தியாகியானார் அல்-ஃபின்தலாவி.
(Source: Saladin - Hero of Islam by Geoffrey Hindley)
|