தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம்
சென்னையில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு அங்கமாக எழுத்தாளர்கள் பலர் பேசுகிறார்கள். ஆவணப்படத்தைத் திரையிடுகிறார்கள். எழுத்தாளர்களுடன் வாசகர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடக்கிறது.
நேற்று வாசகர்களுக்கான அரங்கில் பேச வந்திருந்தவர் எழுத்தாளரும், விமர்சகருமான ந.முருகேச பாண்டியன்.
சுற்றிலும் எழுத்தாளர்களான சு.வெங்கடேசன், ஷோபா சக்தி, பாஸ்கர் சக்தி,த.மு.எ.ச முத்து, பிரகதீஸ்வரன், விஜய் மகேந்திரன் – அனைவரும் சேர்ந்திருக்க – அந்தச் சந்திப்பு கலந்துரையாடலைப் போல மாறியது.
தமிழில் விமர்சன மரபு எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்பதைப் பற்றிப் பேசிய முருகேச பாண்டியன் படைப்பாளிகள் பெருகியிருக்கிற அளவுக்குத் தமிழில் விமர்சகர்களின் எண்ணிக்கை விரிவடையாதது பற்றிச் சொன்னார்.
இலங்கையைச் சேர்ந்த விமர்சகரான கைலாசபதிக்கு முன்பிருந்த கவனம் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தவர் தமிழ் மொழியின் பயன்பாடு பற்றி ஒரு விஷயத்தைச் சொன்னார்.
‘ இப்போது நமக்கு இருக்கும் இலக்கிய வாசிப்பு அடுத்த தலைமுறைக்கு இருக்குமா என்கிற சந்தேகம் இருக்கிறது. இளைஞர்கள் பலருக்குத் தொழில்நுட்பச் சாதனங்களை இயக்குகிற அறிவு கூடியிருக்கிறது. ஆனால் சொந்தத் தாய் மொழியில் வாசிப்பது குறைந்திருக்கிறது.
அதனால் அடுத்த தலைமுறையில் எவ்வளவு புத்தகங்கள் வாசிக்கப்படும் என்கிற ஐயம் பலருக்கும் இருக்கிறது. இந்த இடைவெளி நீடித்தால் மொரீஷியஸில் உள்ளதைப் போன்று தமிழர்களாக இருந்தாலும் தமிழ் மொழியிடமிருந்து அந்நியப்பட்ட நிலை இங்கும் தோன்றிவிட வாய்ப்பிருக்கிறது. இந்த ஆபத்தை இங்குள்ள அரசும், மொழி பற்றிப் பேசும் அமைப்புகளும் உணர்ந்திருக்கின்றனவா?’’ என்றார் முருகேச பாண்டியன்.
இதையடுத்து ஈழ எழுத்தாளரான ஷோபாசக்தி புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருக்கும் வாசிப்பைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
‘’ புலம் பெயர்ந்து வாழ்ந்து இன்று பல நாடுகளில் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த நாடுகளில் குடியேறுகிறார்களோ, அந்த நாட்டு மொழியையும் கற்றுப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.பிரெஞ்சு மொழி உட்படப் பல மொழிகளைக் கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் தமிழ் மொழி மீது எங்களுக்கு இருக்கிற அந்தரங்கமான நேசம் எங்களுடைய அடுத்த தலைமுறைக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வீட்டில் பேசும் மொழி தமிழாக இருந்தாலும் வெளியே அந்தந்த நாட்டு மொழிகளைத் தான் அடுத்த தலைமுறை பேசிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய தலைமுறை தான் தமிழைப் பேசி எழுதும் கடைசித்தலைமுறையாகப் போய்விடுமோ என்கிற அச்சம் எங்களுக்கு இருக்கிறது.
வருத்தமளிப்பதாக இருந்தாலும் இது தான் அங்குள்ள நிலைமை.’’
- பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மணா அவர்களின் மொழி மற்றும் வாசிப்பு குறித்த முக்கியமான பதிவு...
|