Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 48
Posted By:Hajas On 3/11/2017 6:52:50 AM

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
==============================

by - Abu Malik

தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்

Episode 47:  (Nordic Aliens தொடர்ச்சி 01)

Episode 48:  (Nordic Aliens தொடர்ச்சி 02)

 

Image may contain: 1 person, text

(Nordic Aliens தொடர்ச்சி 02)
பொதுவாக இன்றைய உலகில் நடக்கும் இலுமினாட்டி சதித்திட்டங்கள் குறித்து ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதுண்டு. ஆனால், அவர்கள் அனைவரையுமே இலுமினாட்டிகள் குறிவைப்பதில்லை; ஒருசிலரை மட்டுமே குறிவைப்பதுண்டு. இதற்கான காரணத்தைப் பின்வருமாறு கூறலாம்:

சதி செய்வதிலும், தந்திரம் செய்வதிலும் இப்லீஸும், அவனது பரிவாரத்தவர்களும் மனிதர்களாகிய நம்மை விடவும் பல மடங்கு திறமை வாய்ந்தவர்கள்; நம்மை விடவும் அனுபவசாலிகள்.

இப்லீஸின் சதித்திட்டம் என்பது ஒரு வெங்காயத்தைப் போன்றது. ஒரு வெங்காயத்தைப் பொருத்தவரை, அதன் விதை என்பது மிகவும் சிறிய அளவில் நடுவில் ஒளிந்திருக்கும். அதைப் பாதுகாப்பது போல் பல இதழ்கள் பல தட்டுக்களாக அதை மூடி மறைத்துக் கொண்டிருக்கும். மேலால் இருக்கும் ஓரிரு இதழ்களை உரித்து விட்டு நாம், வெங்காயத்தை உரித்து விட்டதாக நினைத்துக் கொள்வோம். ஆனால், அதன் விதையைக் கண்டுபிடிப்பதாக இருந்தால், இன்னும் எத்தனையோ தட்டுக்களை உரிக்க வேண்டும்.

இதே போல தான் இப்லீஸின் சதித் திட்டங்களும். பல அடுக்குகளாகப் பல பொய்களால் மூடப்பட்டு இப்லீஸின் உண்மையான திட்டம் இன்று பாதுகாக்கப் பட்டிருக்கிறது. இன்றைய உலகின் அனேகமான ஆய்வாளர்கள், மேலால் இருக்கும் ஓரிரு இதழ்களை உரித்து விட்டு, வெங்காயத்தை உரித்து, இலுமினாட்டிகளின் சதித்திட்டங்களைக் கண்டுபிடித்து விட்டதாக நினைத்துப் பெருமூச்சு விடுவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் உரிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லையென்பது தான் உண்மை.

இதுவரை நான் மேற்கொண்ட பல ஆய்வுகளின் பிரகாரம், இப்லீஸின் சதித்திட்டம் எனும் இந்த வெங்காயத்திலிருக்கும் கணிசமான தட்டுக்களை என்னால் ஓரளவுக்குக் கண்டறிந்து கொள்ள முடிந்தது. அவற்றை இங்கு பட்டியல் போட்டுக் காட்டுகிறேன். ஆய்வு செய்வோருக்கு இது மிக நிச்சயமாகப் பயன் தருமென்றே கருதுகிறேன்:

முதலாவது இதழ்:
இலுமினாட்டிகள் எனும் பதிமூன்று குடும்பத்தாரும், அவர்கள் உலகில் இன்று அரங்கேற்ற முயன்று கொண்டிருக்கும் “புதிய உலக ஒழுங்கு” (New World Order) எனும் செயல்திட்டமும்.

இது தான் வெங்காயத்தின் மேற்தோல். மாசோனிகள் (Freemasons), இலுமினாட்டி போன்ற பல இரகசிய இயக்கங்கள், வங்கிகளின் வலைப்பின்னல், தடுப்பூசி குறித்த மருத்துவ விமர்சனங்கள், உலக யுத்தங்கள், ரொத்ஷைல்ட், ரொக்கஃபெல்லர் போன்ற குடும்பங்களின் இரும்புக் கரங்கள்.... போன்ற அனைத்துமே இந்த முதலாவது இதழைச் சேர்ந்தவை மட்டும் தான். இன்று இலுமினாட்டி குறித்து ஆய்வு செய்வோரில் அனேகமானோர் இந்த மேற்தோலை உரிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்.

இவ்வாறு மேற்தோலை மட்டும் உரிப்பவர்கள், உள்ளே இருக்கும் இரண்டாவது தோலையே வெங்காயத்தின் விதை என்று நம்பி விடுவதால், இவ்வாறான ஆய்வாளர்கள் பற்றி ஷைத்தானியர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. எனவே, இவ்வாறான ஆய்வாளர்களை இலுமினாட்டிகள் ஒருபோதும் அழிக்க நினைப்பதில்லை. மாறாக, தமது தரப்பிலிருந்தும் ஒருசில பொய்யான ஆய்வாளர்களை (Alex Jones போன்றவர்கள்) இந்த ஆய்வுசெய்யும் கூட்டத்தாருக்குள் ஊடுறுவ விடுவதன் மூலம், இருப்பவர்களை இன்னும் குழப்பி, ஆய்வுகளை எப்போதும் மேற்தோல் மட்டத்திலேயே தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

ஒருவகையில் இந்த முறை இப்லீஸுக்கு லாபமும் தான். ஏனெனில், சிந்திக்கும் மக்களின் கவனமெல்லாம் இந்த மேற்தோலிலேயே குறியாக இருக்க ஆரம்பித்து விட்டால், உள்ளே ஒளிந்திருக்கும் விதையின் இரகசியம் என்றும் பாதுகாக்கப்படும். எனவே, இந்த மேற்தோலை உரிக்கும் செயற்பாட்டை இன்னும் ஊக்குவிக்கும் முகமாக ஷைத்தானியர்கள் இன்னும் பல பொய்களையும் தமது தரப்பிலிருந்தும் உருவாக்கி, உண்மைகளோடு கலந்து இந்த மேற்தோலில் பரவ விட்டிருக்கிறார்கள். இதன் விளைவாகக் கடைசிவரை மக்கள் விதையைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இரண்டாவது இதழ்:
இப்லீஸைக் கடவுளாகக் கொண்ட இலுமினாட்டிகளின் ஷைத்தானிய மதம்:

இது தான் இரண்டாவது இதழ். முதலாவது மேற்தோலைச் சரியான அடிப்படையில் யாராவது உரித்தால், உள்ளே இருப்பது இன்னொரு மேற்தோல் தான்; விதை அல்ல என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள். இதன் விளைவாக இரண்டாவது இதழையும் உரிக்கவே இவ்வாறான ஆய்வாளர்கள் முயற்சிப்பார்கள். எனவே, இவ்வாறானவர்களிடமிருந்து வெங்காயத்தின் விதையைப் பாதுகாக்க வேண்டுமென்றால், இன்னோர் இதழ் இப்லீஸுக்கு அவசியமாகிறது. அந்த இதழ் தான் இந்த இரண்டாவது இதழ்.

அதாவது, இன்றைய ஆய்வாளர்களுள் ஒரு சாரார் கண்டறிந்து மக்களுக்குக் கூறும் உண்மை தான், மாசோனிகள், இலுமினாட்டிகள் போன்ற இரகசிய இயக்கத்தவர்களெல்லாம் இப்லீஸைக் கடவுளாகக் கொண்டு வணங்கக் கூடிய ஷைத்தானிய மதத்தைப் பின்பற்றுகிறார்கள் எனும் கருத்து. மேலும், அவர்கள் தஜ்ஜாலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்; தஜ்ஜாலின் ஒற்றைக் கண்ணைத் தான் இலுமினாட்டி சின்னத்தில் இருக்கும் ஒற்றைக் கண் உருவகப் படுத்திக் காட்டுகிறது எனும் கருத்து.

இந்தக் கருத்தில் கணிசமான அளவுக்கு உண்மையிருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. நானும் இந்தக் கருத்தில் அனேகமானதைச் சரிகாணக் கூடியவன் தான். ஆனால், இதில் ஆங்காங்கே சில சின்னச்சின்னப் பொய்களும் திட்டமிட்டு உண்மையோடு கலக்கப் பட்டிருக்கின்றன. இந்தச் சின்னச்சின்னப் பொய்கள் என்ன செய்திருக்கின்றனவென்றால், மொத்த உண்மையையுமே வேறொரு புறம் நோக்கித் திசைதிருப்பி வைத்திருக்கின்றன. அதாவது, ஓர் உண்மையை வேண்டுமென்றே இப்லீஸ் விட்டுக் கொடுப்பதன் மூலம், நடுவில் ஒளிந்திருக்கும் பேருண்மையைக் காப்பாற்றுவதற்காக ஆய்வு செய்வோரின் கவனத்தை வேறுபுறம் திசைதிருப்பவே இங்கு முயற்சித்திருக்கிறான். இதை இங்கு விலாவாரியாக அலசப் போனால், நமது ஆய்வு திசைதிரும்பிவிடும். எனவே, இந்த அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டு, அடுத்த இதழைப் பார்க்கலாம்.

மூன்றாவது இதழ்:
HAARP / மனித ஜீனோம் செயல்திட்டம் / தடுப்பூசிகளில் கலந்திருக்கும் பாரமான உலோகங்கள் (Mercury, Aluminum... போன்றவை) / மரபணு மாற்றப்பட்ட உணவுப் பண்டங்கள் (GMO Food).

இது உள்ளிருக்கும் இன்னோர் இதழ். இதன் அடிப்படை நோக்கம், மனித DNA ஐ மாற்றியமைப்பதன் மூலம் மொத்த மனித சமூகத்தையும் ரிமோட் கண்ட்ரோலில் பொம்மைகளை இயக்குவதைப் போல் சிந்தைக்கட்டுப்பாடு (Mind Control) செய்து, தமது பிடிக்குள் அடக்கி வைத்திருப்பது தான் இலுமினாட்டிகளின் இறுதி லட்சியம் எனும் கருத்தை ஆய்வு செய்வோர் நிலைபாடாகக் கொள்ள வேண்டும் என்பது தான்.

உண்மயில் இதிலும் பல உண்மைகள் நிச்சயமாக இருக்கின்றன. அதே நேரம் சில பொய்களும் இதில் கலந்திருப்பதன் மூலம் அனேகமான ஆய்வாளர்களின் ஆய்வுகள் வேறு திசைகளில் திருப்பப்படுகின்றன.

நான்காவது இதழ்:
பறக்கும் தட்டுக்களும், வேற்றுக்கிரகவாசிகளும்.

இது வெங்காயத்தின் அடுத்த பக்கத்திலிருக்கும் இன்னோர் இதழ். அதாவது, ஹிட்லரின் நாசி ஜேர்மனியில் மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட பறக்கும் தட்டுக்களையும், அவற்றின் அடிப்படையில் பிற்காலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் வடிவமைத்த பறக்கும் தட்டுக்களையும் பற்றிய ஆய்வுகள் எனும் அடிப்படையிலேயே இந்த இதழ் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

இந்த இதழில் உண்மைகளை விடப் பொய்களே அதிகம். இதன் மூலம் ஷைத்தானியர்கள் எதிர்பார்ப்பது ஒன்றேயொன்று தான். பறக்கும் தட்டுக்கள் குறித்து ஆய்வு செய்வோர் யாராக இருந்தாலும், ஆய்வின் இறுதியில், “இந்தப் பறக்கும் தட்டுக்களெல்லாம் இலுமினாட்டிகளின் ஏமாற்றும் தந்திரங்கள். வேற்றுக்கிரகவாசிகள் என்று யாரும் உண்மையில் இல்லை. மாறாக இந்தப் பறக்கும் தட்டுக்களில் வருபவர்கள் மனிதர்கள் மட்டுமே. இவை மனிதர்களின் தயாரிப்புகள் மட்டுமே” என்ற தீர்மாணத்தைத் தான் ஆய்வாளர்கள் எடுக்க வேண்டும் என்பது தான் இந்த இதழுக்கான நோக்கம்.

ஐந்தாவது இதழ்:
பறக்கும் தட்டுக்களில் வருபவர்களில் ஒரு சாரார் மனிதர்களாக இருந்தாலும், இன்னொரு சாரார் உண்மையான வேற்றுக்கிரகவாசிகள். அவர்கள் தொலைதூரக் கிரகங்களிலிருந்து இங்கு வந்து செல்கிறார்கள்.

நான்காவது இதழை உரிக்கும் போது ஆய்வாளர்களுக்குக் கிடைக்கும் ஐந்தாவது இதழ் தான் இது. இந்த இதழ் மூலம் எதிர்பார்க்கப் படுவது ஒன்றேயொன்று தான். அதாவது, அத்தனை இதழ்களையும் உரித்துக் கொண்டு ஓர் ஆய்வாளன் வெங்காயத்தின் உள் நோக்கி வந்தாலும், இந்த இதழோடு அவனது ஆய்வுகள் நின்று விட வேண்டும். இதற்கு மேல் யாரும் வெங்காயத்தை உரித்து விடக் கூடாது என்பது தான் ஷைத்தானியர்களின் எதிர்பார்ப்பு.

எனவே, பல உண்மைகளை விட்டுக் கொடுத்து, ஷைத்தானியர்கள் தமது பேருண்மையைக் காப்பதற்காக வடிவமைத்திருக்கும் முக்கியமான இதழ் தான் இது. இந்த இதழ் வரை ஆய்ரு செய்வோரை ஷைத்தானியர்களோ, இலுமினாட்டிகளோ பெரிதாகக் கண்டுகொள்வதில்லை; அவ்வப்போது கொஞ்சம் தொல்லை கொடுப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள்.

ஆனால், இந்த இதழையும் உரித்துக் கொண்டு வெங்காயத்தின் உள்நோக்கி யார் செல்கிறாரோ, அவரது உயிருக்கு மிக நிச்சயமாக அச்சுறுத்தல் உண்டு. இலுமினாட்டி சார்ந்த இன்றைய உலக சதிவலைகள் பற்றி ஆய்வு செய்தோரில், விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில ஆய்வாளர்களே இந்த ஐந்தாவது இதழையும் தாண்டி உண்மைகளைக் கண்டறிய முயற்சித்ததுண்டு. ஆனால், அவ்வாறு முயற்சித்த அனைவருமே ஒருவர் விடாமல் அழிக்கப் பட்டார்கள். சிலர் நேரடியாகவே கொல்லப் பட்டார்கள். மேலும் சிலர் மர்மமான முறைகளில் மரணித்தார்கள். மற்றும் சிலர் சிறைப்பிடிக்கப்பட்டு, இரகசியமாகக் கொல்லப் பட்ட பின்னர், அவர்களது உருவத்தையொத்த போலி ஆசாமிகள் அவர்கள் பெயரில் சமூகத்தில் உலவவிடப் பட்டார்கள்.

இவ்வாறான ஆய்வாளர்களுக்கு உதாரணமாக Fritz Springmeier, William Cooper, Dr. Karla Turner போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களெல்லாம், வெங்காயத்தின் இந்த ஐந்தாவது இதழையும் தாண்டி ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள். எனவே, இவர்கள் அனைவருமே குரூரமான முறைகளில் பழிவாங்கப் பட்டு, அழிக்க பட்டார்கள்.

ஆறாவது இதழ்:
மேலே குறிப்பிடப்பட்டது போன்ற ஆய்வாளர்கள் ஐந்தாவது இதழை உரிக்கும் போது, உள்ளே இருக்கும் அடுத்த இதழ் தான் இது. இந்த இதழ் வெங்காயத்தின் விதைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதனால், இதில் பல உண்மைகளைக் காணலாம்.

இந்த இதழை அடையும் போது ஆய்வாளர்களுக்கு லேசாக ஓர் உண்மை புலப்பட ஆரம்பிக்கும். அந்த உண்மை இது தான்:

வேற்றுக்கிரகவாசிகள் என்போர் உண்மையில் வேற்றுக்கிரகங்களிலிருந்து வரவில்லை; மாறாக இந்தப் பூமியிலேயே இவர்கள் வாழ்கிறார்கள். இந்த வேற்றுக்கிரகவாசிகள் சொல்வது எதுவுமே உண்மயில்லை. இவர்கள் கைதேர்ந்த பித்தலாட்டக் காரர்கள்; உலகமகா நடிகர்கள்; மகா பொய்யர்கள். மனிதர்களுக்கு நல்லது செய்வதாகக் கூறிக்கொண்டு வரக்கூடிய இவர்கள் உண்மையில் இங்கு நல்ல நோக்கத்தோடு வரவில்லை; ஏதோ உள்நோக்கம் வைத்தே இவர்கள் வருகிறார்கள். மேலும், பல்வேறு இனத்தவர்களாக இந்த வேற்றுக்கிரகவாசிகள் தோற்றமளித்தாலும், உண்மையில் இவர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த பல பிரிவினர்கள். மனிதர்களுக்கு எதிராக இவர்கள் சதி செய்கிறார்கள். வேற்றுக்கிரகவாசி என்பது இவர்களது சுயரூபம் அல்ல; வேஷம் மட்டுமே.

இது தான், மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்ற ஆய்வாளர்கள் இந்த இதழில் கண்டறிந்து கொண்ட உண்மை. ஆனால், இந்த உண்மைகளைக் கண்டறிந்து கொண்ட இந்த ஆய்வாளர்களால், இத வேற்றுக்கிரக வேஷங்களுக்கு உள்ளே ஒளிந்திருப்போரின் சுயரூபம் என்னவென்பதையும், அவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதையும் சரியாக இனங்கண்டுகொள்ள முடியவில்லை. அதாவது, அடுத்த இதழை இவர்களால் முழுமையாக அடைய முடியவில்லை. ஒருவேளை இவர்கள் இன்னும் கொஞ்சகாலம் உயிரோடிருந்தால், அதையும் அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதுவரை இவர்களுக்கு அவகாசம் வழங்கப் படவில்லை. அதுவரை இவர்கள் உயிரோடிருப்பது தமது திட்டங்களுக்குப் பேராபத்து என்பதால், இவர்களின் கதைகள் இந்தக் கட்டத்தோடு முடிக்கப் பட்டன.

ஏழாவது இதழ்:
இது தான் விதையோடு ஒட்டியிருக்கும் கடைசி இதழ். ஒருவேளை இதையும் தாண்டி இன்னும் ஓரிரு இதழ்கள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். அது குறித்து ஊர்ஜிதமாகச் சொல்லும் அளவுக்கு எனது ஆய்வுகளுக்குச் சக்தியில்லை. அது குறித்து அல்லாஹ்வே அறிந்தவன். ஆனால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட எனது ஆய்வுகளின் பிரகாரம், இது தான் கடைசி இதழ் என்பதே எனது நிலைபாடு.

இந்த இதழை உரிக்கும் போது, வெங்காயத்தின் நடுவிலிருக்கும் விதையைப் போல், உள்ளிருக்கும் இப்லீஸின் திட்டம் தெரிய ஆரம்பிக்கிறது. உண்மையில், இந்த வேற்றுக்கிரக வேஷங்களுக்குள் ஒளிந்திருப்பது ஷைத்தானிய ஜின்கள் மட்டுமே. இவர்கள் இவ்வாறு வருவது இப்லீஸின் ஏதோ ஒரு பாரிய திட்டத்தைக் கட்டம் கட்டமாக உலகில் அமுல்படுத்துவதற்கு மட்டுமே. அந்தத் திட்டத்தின் முழுமையான வடிவம் நமக்குத் தெரியாது. ஆனால், அது மனித இனத்தை ஈருலகிலும் கருவருக்கும் ஒரு திட்டம் என்பதில் மட்டும் எள்ளளவும் சந்தேகமில்லை. இது தான் பேருண்மை. இந்த உண்மையை உணர்த்துவது தான் இந்தத் தொடரின் அடிப்படை நோக்கம்.

பேருண்மை பற்றிய விளக்கங்கள் இப்போதைக்கு இவ்வளவும் போதுமென்று கருதுகிறேன். இன்னும் பல அம்சங்களைத் தொடரின் பிற்பகுதியில் நோக்கலாம். இப்போது மீண்டும் நாம் விட்ட இடத்துக்கு வருவோம். அதாவது, Nordic வேற்றுக்கிரகவாசிகள் குறித்த இன்னும் சில செய்திகள் சொல்ல வேண்டியது மிச்சமிருக்கின்றன. அவற்றையும் பார்த்து விட்டு, அடுத்த பகுதிக்குச் செல்லலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 49: (Nordic Aliens தொடர்ச்சி 03)




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..