Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள்
Posted By:peer On 1/20/2017 12:36:02 AM

ஏறு தழுவுதலை ஏன் தடை செய்தார்கள்? ஏறு தழுவுதல் விளையாட்டா? ஏறு தழுவுதல் ஒரு காட்டுமிராண்டிதனமான செயலா? ஏறு தழுவுதலில் மாடு துன்புறுகிறதா?  மாடுகளுக்கு கண்களில் மிளகாய் பொடி தூவுகிறார்களா?  சாராயம் கொடுக்கப்படுகிறதா? மாட்டின் வாலை கடிக்கிறார்களாமே? காளைகளுக்கு கண்களில் எலுமிச்சைசாறு பிழிகிறார்களாமே ? மாடுகளின் கொம்புகளை சீவுதல் சரியா? மாட்டிற்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு?ஏறு தழுவுதல் தடை சர்வதேச சதியா ? தமிழ் நாட்டின் மாட்டு இனங்கள் அனைத்தும் அழிந்து போகுமா? வெளி நாட்டின் மாட்டு இனங்கள் உயர்ந்தவையா? வெளி நாட்டு மாட்டு பாலில் தீங்கு தரும் புரதம் உள்ளதா? விலங்கு நல ஆர்வலர்கள் உண்மையில் மாட்டின்மேல் அல்லது காளைகளின்மேல் பரிவு உள்ளவர்களா? அப்படி என்றால் கோழி அல்லது ஆடுகளின்மேல் அவர்களுக்கு ஏன் பரிவு இல்லை ? கோழியை அறுத்து சாப்பிடலாமா? ஆடுகளின்மேல் விலங்கு நல ஆர்வலர்களுக்கு ஏன் பரிவு இல்லை? மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய இடத்தில உள்ளதாக சொல்கிறார்களே ? ஏறு தழுவுதலுக்கு தடை, மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு ஏன் தடை இல்லை? மாடுகள் கொல்லப்படாமல் எப்படி இறைச்சி ஆகும்? மனிதர்கள் காயப்படுவார்கள் என்று சொல்லாமல் மாடுகள் துன்புறுகின்றன என்று சொல்லும் உள்அர்த்தம் என்ன? மாடுகளைவிட மனிதர்கள் தாழ்ந்த பிறவிகளா? டாஸ்மாக்கை மூட வழக்கு தொடுத்தால் அது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று சொல்லும் உச்ச நீதி மன்றம் ஏறு தழுவுதலை தமிழக அரசின் கொள்கை முடிவாக ஏற்றுகொள்ள முடியாதது ஏன்? குதிரை பந்தயம் பணக்காரர்களின் விளையாட்டு அதற்கு தடை இல்லை ஆனால் ஏறு தழுவுதல் ஏழைகளின் விளையாட்டு ஆகவே அது தடை என்கிறார்களே அது உண்மையா? யானைகள் கோவில்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றனவே, அது விலங்கு வதை இல்லையா? கேரளாவிலே ஆனயுட்டு என்று திருச்சூரில் நடக்கின்ற விழாவில் யானைகள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு பகல் முழுவதும் வெயிலில் நிற்கின்றனவே அதை தடை செய்யாதது ஏன்? தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று பீட்டா போன்ற விலங்குகள் நல அமைப்பு அழைக்கிறதாமே? அவர்களுக்கு தமிழர்கள்மேல் ஏன் கோபம்? இது இனவெறி இல்லையா?

சரி  இப்படி பல கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும் என்றால் நாம் இது குறித்து ஆராயாமல் சொல்வது கடினம். நமது பயணம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து தொடங்க வேண்டும்.

1. குகைகளிலும், காடுகளிலும்

மனிதன் குகைகளில் வாழ்ந்த காலங்களில் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்தான். ஒவ்வொரு குழுவுக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியோர்கள் என்று அனைத்து தரப்பினரும் இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் காடுகளில் உள்ள பழங்கள் மற்றும் வேட்டையாடும்போது கிடைக்கும் இறைச்சி உணவை உண்டும் வாழ்ந்தார்கள். இறைச்சிக்காக ஆடுகள், மாடுகள், மான்கள், பன்றிகள் மற்றும் பறவை இனங்களை கொன்று தின்று வந்தான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், காடுகளில் மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழ வில்லை. உணவைத்தேடி அலைதல் இன்றும் பல ஆப்ரிக்க தென் அமெரிக்க பழங்குடி இனமக்கள் செய்கிறார்கள். அது இன்றும் இழிவானதல்ல. அவ்வாறு அவர்கள் அலைவதால், சுமப்பது குறைகிறது. சிறிய அளவிலேயே அதுவும் மிகவும் தேவையான பொருட்களையே அவர்கள் தங்களுடன் எடுத்துசெல்கிறார்கள். இந்த பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் பொருட்களை எங்கும் விட்டுசெல்வதில்லை. அது இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை. இன்றும் மங்கோலியாவில், ஆப்ரிக்காவில், தென் அமரிக்காவில் மற்றும் அமேசான் காடுகளில் உள்ள சில பழங்குடி இனமக்கள் உணவு, நீர், பருவ கால நிலை இவற்றை அடிப்படையாக கொண்டு இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இடம் பெயருகிறார்கள். வட கிழக்கு ரஷ்யாவின் சைபீரிய பனிக்காடுகளில் வாழும் (ஆங்கிலத்தில் ரைன்டீர் என்றழைக்கபடும், கிஸ்துமஸ் தாத்தாவை வண்டியில் வைத்து இழுத்து செல்லும் மான்) மான் கூட்டங்கள் தண்ணீர், உணவு போன்றவற்றிக்காக மேய்ச்சல் நிலங்களை தேடி அலைகின்றன. அந்த மான்களை சில பழங்குடி இன மக்கள் வருடம் முழுவதும் பின்பற்றி செல்கிறார்கள். மான்களை தேவைப்படும் நேரத்தில் உணவாகவும், மான் தோலை உடையாகவும், கொம்புகளை நகைகளாகவும் செய்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். மான்களின் எலும்புகளை சிறு தையல் ஊசியாக பயன்படுத்துகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை வட கிழக்கு பருவக்காற்று அதன் மூலம் ஏற்படும் மழை தமிழகத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் வர சுமார் 90 நாட்களுக்கு இருக்கும். சில வருடங்களில் டிசம்பரிலும் மழை பெய்து கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் நாகப்பட்டினம் போன்ற டெல்ட மாவட்டங்களை வெள்ளக்காடாக மாற்றி விடுகிறது. வட கிழக்கு பருவ மழை காலங்களில் காடுகளும் சாலையின் ஓரங்களும் பச்சை பசேல் என கண்களுக்கு குளிர்ச்சியாய் இருப்பதை காண முடிகிறது. இதை உணர்ந்தே ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொன்னார்கள். அதாவது அடியில் விதைத்தால் மார்கழியில் அறுவடை செய்யலாம். ஐஆர் 20 ஐஆர் 8 போன்ற புதிய நெல் ராகங்கள் கண்டு அறியப்படும் முன்னர் தமிழகத்தில் நெல் ஆறு மாதங்கள் (ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி) விளைந்தது. அதனால்தான் இன்றும் கிராமங்களில் ஆறு மாதங்களில் விளைந்த நெல்லில் ஒரு வியாதியும் இல்லை தொண்ணூறு நாளில் விளைந்த நெல்லில் ஆயிரம் வியாதி என்று சொல்லும் மூதாட்டிகளை காணலாம். உணவு எங்கு பருவத்தில் எங்கு கிடைக்கும் என்று அவர்களின் முன்னோர்கள் சொன்னவற்றை செவிவழியாக கேட்டு தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி தருகிறார்கள். உணவு, நீர் கிடைக்கும் இடங்களை பாடல்கள் வாயிலாக தங்கள் குழந்தைகள் எளிதாக கற்றுகொள்ளும்படி செய்கிறார்கள். இதை ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் செய்வதை இன்றும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. வருடம் முழுவதும் ஒரு சிறு இன குழுவுக்கு உணவு கிடைப்பதை பருவ காலத்தை ஒட்டிய இடம்பெயர்தல் எளிதாக்குகிறது. இதைதான் இன்றும் வேடந்தாங்கல் ரஷிய நாட்டு பறவை இனங்கள் செய்கின்றன. அதாவது வட கிழக்கு  பருவ மழை பொழிவை நம்பி அவை (அதே காலத்தில் ரஸ்யாவில் பனி பொழிவும்  கடும் குளிரும் வாழ தகுதி இல்லாத சூழலை  ஏற்படுத்துவதால் ) வேடந்தாங்கல் வந்து இணை சேர்ந்து, கூடு கட்டி, முட்டை இட்டு, குஞ்சு பொரித்து  தன் இனத்தை விருத்தி செய்து, (கடும் குளிர் ரஸ்சியாவில் முடிந்ததும்) பெப்ரவரி மாதத்தில் அங்கு திரும்பி விடுகின்றன. வேடந்தாங்கலில் உங்களுக்கு நண்பர் இருந்தால் இதை நீங்கள் உறுதி படுத்தி கொள்ளலாம்.  மனிதன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வேளாண்மை பற்றி தெரிந்து கொண்டபோது அது உணவை தேடி அலைவதை தவிர்க்க உதவியது. நீர் நிலைகளை அண்மித்த பிரதேசங்களில் அவர்கள் உணவு பயிர்களை விளைவித்து அதை அறுவடை செய்து தனது உணவு தேவையையும், நீர் தேவையும் பூர்த்தி செய்து கொண்டான். இன்றும் பண்டைய சிந்து சமவெளி பண்பாடுகள் ஆறுகளின் கரைகளில் இருந்ததற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. ஆறுகளை பழங்கால நாகரீகங்களின் தொட்டில்கள் என்று தொல்பொருள் அகழ்வாய்வாளர்கள் அழைப்பதை படித்தும் கேட்டும் இருக்கலாம்.

2. நிலையான வாழ்க்கையும் வேளாண்மையும்

மனிதன் விலங்குகளை வேட்டையாடி சமைக்காமல் உண்டு வந்தான். அவ்வாறு ஒரு நாள் வேட்டையின்போது காட்டுத்தீயில் இறந்த ஒரு விலங்கின் உடலை உண்டபோது அது மிகவும் மிருதுவாக, உண்ண எதுவாக இருப்பதை உணர்ந்தபோது அதை நாளடைவில் தன்னுடைய ஒரு பழக்கமாக மாற்றிகொண்டான். மாட்டை பயன்படுத்துவதற்கு முன்னரே மனிதன் நெருப்பை பயன்படுத்த தொடங்கிவிட்டன என்பதை நீங்கள் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். உணவை தீயில் சுட்டு சாப்பிடும் பழக்கம் இன்றும் சில ஆப்ரிக்க மக்களிடையே இருப்பதை காண முடிகிறது. காட்டில் கிடைக்கும் சுள்ளிகளையும் காய்ந்த இலைகளையும் கொண்டு நெருப்பு மூட்டி அதில் உண்டான தீயில் கிடைக்கும் உணவை சுட்டு உண்பதை இன்றும் பல பழங்குடி இனமக்கள் செய்து வருகிறார்கள். எரிபொருள், பாத்திரங்கள் மற்றும் காய்கறிகள் இன்றி உணவை தயார் செய்யும் ஒரு கலையே இது.மாடுகள் காடுகளில் வாழ்ந்தன. அவை மந்தை மந்தையாக வாழ்ந்தன. இன்றும் ஆப்ரிக்க காடுகளில் உள்ள வன மாடுகள் அப்படி வாழ்வதை விலங்குகள் பற்றிய காணொளிகளில் காணலாம். மாடுகளை அதுவும் காட்டில் வாழும் விலங்குகளை தான் வாழ்ந்த சமூகத்துக்கும், அதன் மக்களுக்கும் பயன்பாட்டிற்கு கொண்டு நமது முன்னோர்களுக்கு நிறைய அனுபவம் தேவைப்பட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. மேலும் பல தலைமுறைகளுக்கு பின்னரே அதன் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு இருக்க வேண்டும். இதை ஒரே நாளில் அல்லது ஒரு தலைமுறைக்குள் கற்றுகொண்டது என்று யாரவது சொன்னால் உங்களால் ஏற்று கொள்ளகூடயதாக இருக்கிறதா? 

தினம் தோறும் வேட்டைக்கு செல்வதை தவிர்க்க பல மாடுகளை ஒரே நாளில் பிடித்து வந்து தான் வாழும் இடங்களுக்கு அருகாமையில் ஒரு இடத்தில வைத்து, அதை வேண்டும்பொழுது கொன்று தின்று இருக்க வேண்டும். அதுவே மெல்ல மாறி மாடுகளை முறையாக அடைக்கும் மரங்களால் ஆன ஒரு தடுப்பை உருவாக்கி மாடுகளை அடைத்து வைத்து இருக்க வேண்டும். அதற்கு உணவையும் குடிக்க நீரையும் அவன் வாழும் நதிக்கரையிலே இருந்து பெற்று கொள்ள முடியும். இன்றும்கூட தமிழகத்தின் சில கிராமங்களில் உள்ள ஏழை மக்கள், தங்களின் மாடுகளுக்கு புண்ணாக்கு பருத்திகொட்டை மற்றும் தவிடு என்று பெரிய அளவில் செலவு செய்யாமல், தங்களின் ஊருக்கு அருகில் உள்ள தரிசு நிலங்களில் பகல் நேரங்களில் மேய்த்து வந்து இரவு நேரங்களில் பருக தண்ணீர் மட்டும் கொடுத்து அதை பராமரிக்கிறார்கள். மாடுகளுடன் பரிச்சயம் ஏற்பட்ட சில நூறு ஆண்டுகளுக்கு பின்னர் மாடுகளை வேளாண்மைக்கு பயன்படுத்த முடியும் என்றும் கற்றுகொண்டான் மனிதன். காரணம் நமது முன்னோர்கள் காலம்காலமாக செய்ததை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி இன மக்கள் முக்கிய குறிப்புகளை எளிய கதைகளாகவும், பாடல்களாகவும் பாடி அடுத்த தலைமுறை பயனடையும்படி செய்கிறார்கள். ஆஸ்திரேலிய பழங்குடி இன மக்கள் பேசும் மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது. ஆனாலும் அவர்கள் அங்கு பாலைவனங்களில் உள்ள நீர் நிலைகளை 10 வயது சிறுவர்களும் சிறுமியர்களும் அறிந்திருக்கிறார்கள் என்றால் அதில் வியப்பில்லைதானே.

3. மாடுகளும் இயல்புகளும்

இந்த இடத்தில நாம் ஒரு சில அடிப்படை அறிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும். காளை என்பது ஆண் உயிர் அணுக்களை உற்பத்தி செய்யும் விதைப்பைகளை கொண்ட ஒரு மாடு. ஆனால் அந்த விதை பைகளை நீக்கினால் அதுவே பொதி மாடு என்று ஆகிவிடும். காரணம் விதைபைகளில் உற்பத்தி ஆகும் டேஸ்ட்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன் அந்த மாட்டை ஆண் தன்மையை கொடுக்கிறது. முரட்டுத்தனம், பசுக்களை கண்டால் பின் செல்வது, மற்றொரு காளையை கண்டால் அந்த கலையை தன்னுடைய போட்டியாக கருதுவது மற்றும் அதனுடன் மோதிப்பார்ப்பது என்று தன்னை ஒரு தலைவன் என்று காட்டிகொள்வது அனைத்துமே ஒரு காளையின் குணங்கள். அடிப்படையில் ஒரு ஆண் கன்றுக்குட்டியாக இருந்தாலும் அந்த டேஸ்ட்டோஸ்டிரோன் சுரக்கும்போது மட்டுமே அது காளை ஆக மாறும். இது மனிதனுக்கும் பொருந்தும். மீசை முளைப்பது, தாடி வளர்வது மற்றும் ஆண் குறிகளை சுற்றிலும் முடி வளர்வதற்கும் இந்த டேஸ்ட்டோஸ்டிரோன் காரணமாகும். விதைப்பைகளை நீக்கிய மாடு மலட்டு தன்மையை அடையும் அது உடல் வலுவானதாக இருந்தாலும் அதற்கு காளையின் மூர்க்க குணங்கள் இருக்காது. மேலும் இலகுவாக அதை வேலைக்கும் பொதி சுமக்கவும் பயன்படுத்த முடியும். பொதிமாட்டுக்கு விதைப்பைகள் நீக்கபடுகிறதே ஒழிய அதன் ஆண் குறிகள் நீக்கபடுவது இல்லை. ஒரு பொதி மாடு ஒரு இனப்பெருக்க காலத்தில் உள்ள பெண் மாடு அல்லது பசுவை, புணரும் ஆர்வம் இல்லாத நிலையிலேயே தனது வாழ்நாள் முழுவதும் காணப்படும்.

ஒவ்வொரு மந்தைக்கும் சில ஆண் மாடுகள் பல பெண் மாடுகள் என்று இருக்கும். அதுதான் அவர்களின் இனப்பெருக்க முறை. ஒரு கன்றுக்குட்டி பிறக்கும்போது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கிறது. பருவ வயதை அல்லது இனப்பெருக்கத்திற்கு தயாராகும்போது அதை மாடு என்று பொதுவாக அழைக்கலாம். ஒரு பெண் மாடு கருவுற்று ஒரு கன்றை ஈன்றால் அந்த பெண்மாடு பசுவாகி விடுகிறது. ஒரு பெண் மாட்டை கருவுற செய்ய ஆண் மாடுகள் அனைத்தும் முயன்றாலும் அந்த உரிமையை அங்குள்ள காளை மட்டுமே பெற்று இருக்கிறது. அது எப்படி என்றால், காளை என்பது மற்ற ஆண்மாடுகளை பலத்த மோதல்களுக்கு பிறகு தோற்கடித்துவிட்டு அந்த பதவியை பெறுகிறது. மற்ற ஆண் மாடுகளை மட்டுமில்லாமல் காடுகளில் உள்ள சிங்கம் புலி சிறுத்தை மற்றும் கரடி போன்ற ஆபத்தான விலங்குகளிடம் இருந்து தன்னையும் காத்து தன்னை சார்ந்த பசுக்களையும், தன் கன்றுகளையும் காத்து அது அந்த கூடத்திற்கு தலைவன் என்று ஒவ்வொவொரு நிமிடமும் உறுதிபடுத்தி கொள்கிறது. அப்போது தன் குழுக்களில் உள்ள இனப்பெருக்க நிலையை அடைந்த பெண் மாடுகளையும், பசுக்களையும் கருவுற செய்யும் உரிமையை அது இயல்பாகவே பெற்றுவிடுகிறது.

4. காளை

காளை என்பது ஆல்பா என்று ஆங்கிலத்தில் சொல்லபடுகின்ற ஒரு தலைமை நிலை ஆகும். எந்த ஆண்மாடும் தான் சார்ந்த குழுவிலோ அல்லது மற்ற குழுவில் உள்ள காளையை தோற்கடித்து தானே காளையாக முயற்சிகளை தொடர்ந்து செய்யும். ஒரு கட்சி தலைவர் பதவிக்கு அல்லது பிரதமர் பதவிக்கு எப்படி எல்லோரும் முயல்கிறார்களோ அதுபோலத்தான் இதுவும். அப்படி காளை ஆனால்தான் ஒரு குழுவில் உள்ள இனப்பெருக்க நிலையை அடைந்த பெண் மாடுகளையும், பசுக்களையும் கருவுற செய்ய இயலும்.  அதன்மூலம் தன் மரபணுக்களை உடைய கன்றுகளை இந்த பூமியில் பரப்ப முடியும். ஆகவே தன் இனத்தை பெரும் எண்ணிக்கையில் விருத்தி செய்ய முடியும். ஒரு காளைக்கு ஒரு பசு என்று செய்ய முடியாதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மாடுகள் மந்தை மந்தையாய் வாழ்பவை. ஆண் கன்றுகுட்டிகளின்/பெண் கன்றுகுட்டிகளின் விகிதாசாரம் என்பது இயற்கையில் ஒரு விந்தை. அதை நாம் கட்டுபடுத்துவது இயலாதது. உங்களுக்கு, இப்போது காளை, பசு, மாடு இவற்றுக்கு பொருள் விளங்கும் என்று நம்புகிறேன்.

காளை தன் குழுவில் உள்ள இனப்பெருக்க நிலையை அடைந்த பெண் மாடுகளையும், பசுக்களையும் கருவுற செய்ய தனது நுகர்வு உறுப்புகளையே பயன்படுத்துகிறது. இனப்பெருக்க நிலையை அடைந்த பெண் மாடுகளும், பசுக்களும் ஈஸ்ட்ரோஜன் என்று அழைக்கப்படும் ஒருவிதமான ஹார்மோனை தனது சிறுநீரில் வெளியேற்றுகின்றன. பசுக்களின் சிறு நீரில் இந்த ஈஸ்ட்ரோஜன் காளையை ஈர்த்து இழுக்கும் ஒரு இயற்கை நிகழ்வு. ஒரு அழகான பெண்ணை பார்த்தல் ஒரு ஆடவன் எப்படி ஈர்க்கபடுகின்றானோ அதைப்போல இதுவும்.  அவற்றை காளை மூப்பும் பிடித்து இவை உறவுக்கு தகுதியானவை என்று உணர்ந்து அவற்றுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. காளைகள், இவ்வாறே இனப்பெருக்க நிலையை அடைந்த பெண் மாடுகளையும், பசுக்களையும் கருவுற  செய்கின்றன. பல மாதங்கள் கழித்து பசுக்கள் கன்றுக்குட்டிகளை ஈன்று எடுக்கின்றன. இதுதான் காடுகளில் நடக்கும் நிலை.எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒரு காளை கர்ப்பம் தரித்த ஒரு பசுவுடன் புணராது. மனிதர்களைபோல மாடுகள் கற்பழிப்பில் ஈடுபடுது இல்லை. உண்மை இதுதான். இதை நீங்கள் மாடு வளர்ப்பவர்களிடம் கேட்டு உறுதிபடுத்தி கொள்ளலாம்.

காளையுடன் சேர்ந்து கர்ப்பம் தரித்தவுடன் பசு ஒன்று அல்லது இரண்டு கன்றுகளை ஈனும். ரொம்ப சிம்பிளாக சொன்னால் ஆடு குட்டிபோடுதல், மனிதர்கள் குழந்தைகள் பெற்றுகொள்வதைபோல. அதையே மாடுகள் செய்தால் ஈன்று எடுத்தல் எடுத்தல் என்று அழைக்கிறார்கள்.”ஈன்றின் பெரிது உவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார். ”ஈன்றின் – பெற்றபொழுது என்று பொருளாகிறது. தனது கன்றுகள் தானாகவே புற்களை மேய்ந்து உண்ணும் காலம் வரையில் தாய்ப்பசு கன்றுகுட்டிக்கு பால் கொடுக்கும். அது மூன்று முதல் ஆறு மாதம் வரையில் பசுக்களை பொருத்து வேறுபடலாம். தாய்பசுக்கள் பால் கொடுக்கும் காலத்தில் அவைகள் காளையுடன் இணை சேராது. காரணம் அவைகளுக்கு அசிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கும் அது இயல்பாகவே ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரப்பதையும் அதன்மூலம் கரு உற்பத்தியையும் தடுத்து விடும். ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சிறு நீர் மூலம் வெளியேறினால்தான் அது இணைவதற்கு  தயார் என்ற சமிக்கைகளை வெளிப்படுத்தி அது காளைகளை பசுக்கள்பால் ஈர்க்கும். இப்போது புரிகிறதா பசுக்களை எல்லா நேரத்திலும் காளைகள் அந்த விசயத்தில் தொந்தரவு செய்வது இல்லை என்று.

5. ஒளித்து வைக்கப்படுகிறதா பால்?

சரி இந்த நேரத்தில் இன்னும் ஒரு கருத்தை உங்களுக்கு சொல்லுகிறேன். கிராமங்களில் உள்ள பசு வளர்க்கும் பலர் தங்கள் பசுக்கள் அது ஈன்ற கன்று குட்டிகளுக்காக பாலை ஒளித்து வைத்துகொள்ளும் என்று நம்புகிறார்கள். அது தவறு. கன்றுக்குட்டியை முதலில் தாய் மடியை ஊட்ட விடுவார்கள். சில நிமிடங்களில் அதை பிடித்து பசுவுக்கு முன்னர் கட்டிவிட்டு பசுவின் காம்புகளில் இருந்து பாலை கறந்து விடுவார்கள். பசு பால் சுரப்பதை நிறுத்தும் வல்லமை கொண்டது. அதாவது ஒரு மனிதன் இயந்திரம் மூலம் பால் கறக்க முயன்றாலும் பசு அதை தற்காலிகமாக தடுத்துவிடும். பிறகு மீண்டும் கன்று குட்டியை அவிழ்த்து விட்டவுடன் அது மீண்டும் தனது மடிக்கு (காம்புகளுக்கு) ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கன்று குட்டிக்கு பால் கிடைக்கும்படி செய்துவிடும். ஒரு மாட்டின் பால் அதன் ரத்தம் மூலமாகவே அல்லது ரத்த ஓட்டம் பசுவின் மடிக்கு செல்லும்போது பாலாக உற்பத்தி செய்யபடுகிறது. பசுவின் மடி என்பது ஒரு பெண்ணின் முலைகளுக்கு ஒப்பானது. கன்றுக்குட்டிகள் பசுவின் மடியை முட்டி குடிக்கும்போது அதனால் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் அதிகமாகி அது பால் சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. கன்றுக்குட்டியும் ஆர்வமாக முட்டி முட்டி குடிப்பதன் ரகசியம் இதுவே. கன்று குட்டி தாய் மடியை முட்டி முட்டி குடிக்கும் செயலை நீங்கள் செயற்கையாக செய்ய முயன்றால் பசுவிடம் உங்களுக்கு உதை நிச்சயம்.

மாட்டை மலடாக்குவது  எப்படி என்று உங்களுக்கு தெரியுமா? அதன் விதைப்பைகளை குறடு போன்ற ஆயுதங்களால் உடைக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு இதை செய்தால் அவன் உயிர் போகவும்  வாய்ப்பு உள்ளது. அதை தயவு செய்து கனவில் கூட நினைத்து பார்க்காதீர்கள். பன்றிகளுக்கு விதர் எடுப்பது என்று கேள்வி பட்டு இருக்கிறீர்களா? அதாவது சிறு பன்றிக்குட்டிகளை பிடித்து அதன் விதைப்பைகளை கத்தி வைத்து எடுத்து விடுவார்கள். அப்படி செய்தால்தான் அது எடை கூடி கறிக்கு உதவும். எல்லா ஆண் கன்று குட்டிகளையும் மலடாக்காமல் சிலவற்றை அதன் குணங்களின் அடிப்படையில் காளையாகவும் பொதிமாடாகவும் இனம் பிரித்து பயன்படுத்த நேர்ந்தது.  ஒரு மாட்டு மந்தையில் முப்பது பசுக்கள் உள்ளது என்று வைத்துகொள்வோம். அந்த பசுக்கள் அனைத்தும் கன்றுகளை ஈன்றால் அது அனைத்தும் ஆண் பாதி பெண் பாதி என்று இருப்பதில்லை. பெண் கன்றுகள் 20 ஆண் கன்றுகள் 10 என்றும் ஈன்று எடுக்கின்றன. அதுதான் இயற்கையின் விளையாட்டு. அதாவது மாடுகள் ஆடுகள் பன்றிகள் மற்றும் யானைகள் போன்ற பாலூட்டிகளில் இந்த விகிதாசாரம் சொல்லும் உண்மை என்னவென்றால் ஆண் இனப்பெருக்கம் செய்தால் போதும் என்று இயற்கை நினைப்பதாகவே பல அறிவியல் அறிஞர்களும் கூறுகிறார்கள்.  பெண் சிலந்திகளில் சில தன்னை கர்ப்பம் ஆக்கும் ஆண் சிலந்தியை அந்த விஷயம் முடிந்தவுடன் டின்னருக்கு வைத்து சாப்பிட்டுவிடும். உங்கள் மனைவி இட்லியால் அடித்தால் அதோடு விட்டாளே என்று சந்தோசப்பட்டு கொள்ளுங்கள்.

ஆகவேதான் இன்றும் சில கிராமங்களில் முப்பது பசுக்களுக்கு ஒரு காளை என்ற ரீதியில் வைத்து இருந்தால் போதும் என்ற நடை முறையை வைத்து உள்ளார்கள். அதாவது முப்பது அல்லது நாற்பது பசுக்களை ஒரு காளை கர்ப்பம் தரிக்க போதுமானது என்று முடிவுக்கு வந்து இருக்க வேண்டும். இன்றும் தமிழக கிராமங்களில் இந்த கணக்கு உள்ளதை நீங்கள் மாடு வளர்ப்போரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.  இது தமிழகம் என்றில்லை ஆந்திரா மற்றும் கர்நாடக மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள பல நாடுகளிலும் பின்பற்றப்படும் ஒரு அனுபவ முறை. முன்னோர்களின் அறிவுரையின் அடிப்படையிலேயே இன்றும் அந்த விகிதாசார கணக்கீடு இருக்கிறது. மனிதன் விதைபை நீக்கிய மலடாக்கபட்ட பொதிமாடுகளை உழவு தொழில், பாரம் இழுத்தல் போன்ற பணிகளுக்கும் பல நேரங்களில் அதையே உணவாகவும் பயன்படுத்தி கொண்டான். சில நேரங்களில் மேய்ச்சல் நிலங்களை அதன் புற்களை கட்டுக்குள் வைக்கவும் பயன்படுத்திகொண்டான்.  மாடுகளை மந்தையாய் ஒவ்வொரு நாளும் ஒரு இடத்திற்கு அதிகாலையில் ஒட்டி சென்று இரவு கவிழ்வதற்குள் மீண்டும் தன் சமூகம் உள்ள இருப்பிடத்திற்கே ஓட்டி செல்லவும் மாற்றி கொண்டான். அப்படி போகும்போது சிங்கம் புலி போன்ற மிருகங்களிடம் இருந்து  இருந்து காப்படி கொள்ள அவன் கம்புகள், சில நேரம்களில் வில் அம்புகள், கோடரி, நாய் என்று தன் பாதுகாப்பு மற்றும் தன் மாடுகளின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த உத்திகளையும் ஏற்படுத்தி கொண்டான்.

ஒவ்வொரு மந்தைக்கும் ஒரு மனிதன் துணை இல்லாத காலங்களிலும் அந்த மந்தையில் உள்ள பசுக்களை அதன் கன்றுகளை காளையானது காத்து வந்தது. அது மட்டுமில்லாது காட்டு விலங்குகளான சிங்கம் புலி ஆகிய விலங்குகளிடம் இருந்தும் காப்பாற்றி தனது இனத்தை தொடர்ந்து விருத்தி செய்யும் கடமையை ஒரு காளை செய்தது. வன விலங்குகளின் ஆபத்து 24 மணிநேரமும் 365 நாட்களுக்கும் இருக்கும். குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகிலேயே சிங்கம் மற்றும் புலி ஆகியன மறைந்து இருந்து தாக்கும். அந்த சூழ்நிலைகளில் ஒரு காளை தப்பித்து உயிர் வாழ்ந்து தன் இனத்தை பெருக்க வேண்டும். அடேங்கப்பா என்று பெருமூச்சு விட வேண்டாம். காலங்கள் மாற மாற மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே சிங்கம் புலி போன்ற விலங்குகளின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. தேனி மற்றும் கம்பம் போன்ற பகுதிகளில் இன்றும் மக்கள் கழுதைபுலிக்கு பயந்தே தங்கள் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்கிறார்கள். நரிகள் கூட இன்றும் சத்தியமங்கலத்தை ஒட்டிய காட்டுப்பகுதிகளில் இருக்கிறது என்று அங்கிருக்கும் மக்கள் சொல்கிறார்கள். சிலர் நேரில் பார்த்ததாக சத்தியம் கூட செய்கிறார்கள். உண்மை எதுவென்று தெரியவில்லை.

6. காளை வளர்ப்பு

தமிழகத்தின் உட்புற பகுதிகளில் அந்த பயம் இல்லை. அதாவது வீடுகளில் கட்டி தீவனம் இடப்படும் காளைக்கு எந்த ஒரு பயமும் இல்லை. அது 24 மணி நேரமும் வேப்பமரம் அல்லது நல்ல கொட்டகை நிழலில் வளர்கிறது. நல்ல நீர் கொடுக்கப்படுகிறது . பருத்திகொட்டை புண்ணாக்கு மற்றும் தவிடு என்று நல்ல உணவு கொடுக்கப்படுகிறது . காளை பொதி மாட்டை விட அதிகம் உண்ணும் குணம் கொண்டது. காளைக்கு விதைப்பைகள் உள்ளன அவை ஆண் தன்மைக்கு காரணமான டேஸ்ட்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோனை சுரக்கின்றன. அது கொலஸ்ட்ரோல் என்னும் கொழுப்புதன்மை உள்ள வேதிபோருளில் இருந்தே சுரக்கிறது. ஆகவே நல்ல உணவு மிகவும் அவசியம். சிலர் கேரட் முள்ளங்கி மற்றும் கீரை வகைகள் கூட கொடுத்து வளர்க்கிறார்கள். இன்னும் சிலர் தனி கொட்டகை அமைத்தும் மருத்துவரை கொண்டு அவ்வப்போது தடுப்பூசி போட்டும் மருந்து மாத்திரைகள் கொடுத்ததும், ரத்த பரிசோதனை செய்து என்று ஒரு இளவரசனை போல வளர்க்கிறார்கள். சாராசரியாக ஒரு நாள் காளை வளர்ப்புக்கு சுமார் 500 ரூபாய் இருந்தாலே போதும். சுமார் ஐந்து ஏக்கர் தரிசு நிலம் அதில் விளையும் புல் என்று வளர்த்து விடலாம். ஆனால் அதற்கு மேல் வசதி உள்ளவர்கள் இதை பல நூறு ரூபாய் செலவு செய்து அதை மற்றவர்கள் வாய்பிளக்கும் அளவுக்கு செய்து விடுகிறார்கள்.

இப்படி பாராட்டி சீராட்டி வளர்க்கும் காளை ஒரு ஆபத்து என்றால் எப்படி சமாளிக்கும்? சிங்கம் புலி போன்ற வன விலங்குகளின் ஆபத்துதான் இல்லையே பிறகு அதை பற்றி கவலைப்படுவானேன் என்று நீங்கள் கேட்பது விளங்குகிறது. அந்த மாதிரி நம்ம காவல் துறையும் நினைத்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைத்து பாருங்கள். காவல்துறையினர் தொப்பை கனத்து போகும் அளவுக்கு அதாவது நிறைமாத கர்ப்பிணியை போல இருக்கிறார்கள். அவர்கள் குருவி சுடும் அந்த கால துப்பாக்கிகளை வைத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த கால தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாகிகளை வைத்து உள்ளார்கள். எந்த திருடனையும் 4 கிலோமீட்டர் ஓடி பிடிக்கும் அளவுக்கு நமது காவல் துறையினருக்கு உடல் தகுதி இல்லை. வருடத்தில் ஒரு நாள் கூட நம்ம காவல்துறையினர் உடற்பயிற்சியில் ஈடுபடுவது இல்லை. உங்க ஊர் ஏட்டு அய்யாவிடம் கேட்டுப்பாருங்கள் கடைசியாக எப்போது ரெண்டு கிலோமீட்டர் நிற்காமல் ஓடினீர்கள் என்று? கம்பி என்னும் வாய்ப்பு உங்களுக்கு நிச்சயம். வருடம் முழுவதும் பள்ளிகூடத்தில் மாணவர்கள் படித்தாலும், திறமை மிகுந்த ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுத்தாலும் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழுஆண்டு தேர்வு வைப்பதைப்போல காளைகளின் திறமையை பரிசோதிப்பதே ஏறு தழுவுதல். ராணுவத்தினர் துப்பாக்கியை பரிசோதிப்பதுபோலதான் இதுவும். வருடத்திருக்கு ஒரு முறை பள்ளிகூட மாவட்ட கல்வி அதிகாரி ஆசிரியர்களை பரிசோதிப்பது தவறா? இல்லை என்றால் ஏறு தழுவுதலும் தவறில்லைதானே?

7. அழுத்தம் தேவையே

இதை உணர்ந்த கிராம மக்கள் வருடத்தில் ஒரு நாளாவது இந்த காளைகளுக்கு ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உணர்ந்து இருக்க வேண்டும். அதெப்படி செய்வது? மீண்டும் காட்டில் ஒரு 48 மணிநேரம் விட்டுவிட்டு மாடே நீயாக உயுருடன் திரும்பி வா, அப்படி வந்தால்தான் உன்னை காளை என்று ஒத்து கொள்வோம் என்று என்றால் சரியாகுமா? அதெப்பிடி பாராட்டி சீராட்டி வளர்த்த காளையை காட்டில் கொண்டுபோய் விடுவது என்று குழப்பக இருக்கிறது. சரி காட்டில் இருக்கும் நாலு புலிக்கு கடிதம் எழுதி ஏபுலியே புலியே நீ உன் நண்பர்களை அழைத்துக்கொண்டு நம்ம அலங்காநல்லூருக்கு வந்து எங்கள் காளையின் துணிவை பரிசோதிக்க வேண்டும் என்றால் சரியாகுமா? மாணவர்களுக்கு தேர்வு வைக்கிறார்கள். படித்ததை மனதில் நிறுத்தி மீண்டும் அதை படித்தவாறே எழுதுகிறார்களா என்று பரிசோதனை நடக்கிறது. அந்த ஒரு அழுத்தம் கூட இல்லாமல் போனால் எப்படி எல்லா மாணவர்களுக்கும் நூற்றுக்கு நூறு கொடுக்க முடியுமா? வேலை வாய்ப்புகள் என்று வரும்போது எல்லோரும் நூற்றுக்கு நூறு என்றால் எப்படி இருக்கும். 4000 கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். நினைத்து பாருங்கள் கேட்கவே கொடுமையாக இருக்கிறது.

இதே நிலையில் ஒரு கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் எனது காளைதான் சிறந்தது என்று போட்டி போட்டால் அதை பசுக்களை வைத்து வளர்ப்பவர்கள் குழம்பி போவார்கள். நாம் முன்னரே கூறியதைப்போல ஒரு காளை முப்பது பசுக்களுக்கு இணை சேரும் உடல் திறன் உடையது. கர்ப்பம் தரிக்கும் ஹார்மோனை வெளியேற்றும் பசுவிடம் மட்டுமே காளை இணை சேரும். ஒரு பசு பருவம் அல்லது இனப்பெருக்க நிலையில் அதாவது காளையுடன் சேரும்போது கர்ப்பமாகும் வாய்ப்பு ஒரு வாரத்திற்கு தான் நீடிக்கும். பெண் உயிரணு பசுவின் சினைப்பையில் 7 நாட்களுக்குமேல் இருக்காது. அதற்கு பதிலாக புதிய கருமுட்டை குறிப்பிட்ட சுழற்சி அடிப்படையில் கருப்பையில் இருந்து சினைப்பைக்கு வந்து சேரும். கிராமங்களில் காளை வளர்ப்போர் ஒரே நாளில் இரண்டு பசுக்களுக்கு தங்கள் காளை அந்த சேவை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். காரணம் காளையின் விதைப்பைகளில் உற்பத்தி ஆகும் விந்தணுக்கள் முதிர 48 மணிநரம் ஆகும். ஆகவே திங்கள், வியாழன் என்று வாரத்தில் இரு கிழமைகள் மட்டுமே அந்த காளையை சேவை செய்ய அனுமதிப்பார்கள். அப்படி அல்லாமல் ஒரே நாளில் இரு முறை ஒரு காளையை அந்த சேவை செய்ய விடுவது முதிராத விந்தணுக்களை காளை, அந்த சேவையின்மூலம் பசுவின் சினைப்பைக்குள் செலுத்தும். அது குறைப்பாடு உடைய கன்றுகளை, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த கன்றுகளை உருவாக்கி விடும். இப்போது புரிகிறதா? பெண்கள் மாதவிடாய் சுழற்சியை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்தானே? 28 நாட்களில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு உதிரபோக்கு இருக்கும். அந்த காலத்தில் பெண்கள் வீட்டுக்கு விலக்கு என்று கூறி வீட்டில் ஒரு மூலையில் படுத்து கிடப்பார்கள். அதுபோல மாடுகளில் கிடையாது. மாதவிடாய் என்பது மனிதனில் மட்டுமே. பசுக்களில் மாதவிடாய்க்கு பதிலாக மேடச்ட்ராஸ் என்று அழைக்கப்படும் ஒரு நிலை உள்ளது. அதை பெண்களுக்கு ஒத்த மாதவிடாய் நாட்களுடன் ஒப்பிடுவது சரியல்ல.

8. கொங்கமாடில்லாதவன் கொங்கனேயல்ல

அதிகம் நோய் தாக்குதல் இல்லமால் வாழும். வெயில் மழை வறட்சி என்று தாக்கு பிடிக்கும். உழைப்பது, குடும்பதேவைக்கு, பசுவை சினையாக்க, என்று பல விதங்களிலும் காங்கேயம் இனம் சிறப்பானது. இன்னும் சொல்லபோனால் புலியகுளம், காங்கேயம் காளைகள் 8 அடி உயர வேலியையும் தாண்டி, பருவத்தில் உள்ள பசுவை சினையாக்கிவிடும். அவ்வளவு கில்லாடி அந்த விசயத்தில்.  காங்கேயம் காளை இனத்தின் ஆயுட்காலம் 10-15 ஆண்டுகள். பசுக்கள் சினைக்காலம் என்பது 200-250 நாட்கள். அடடே இதுகூட மனிதனைப்போல உள்ளதே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பசுவும் பாலூட்டி இனம்தானே. ஒரு பசு தான் ஈன்ற கன்றுகுட்டிக்கு 4-7 மாதம் வரையில் பால் கொடுக்கும். 18-24 மாதங்களில் ஒரு பெண் கன்றுக்குட்டி காளையுடன் இணை சேர வயதளவில் தயாராக இருந்தாலும் உடலளவிலும் தயாராக இல்லை என்றால் அதை சினையாக விடமாட்டார்கள். மூன்று வயதை சராசரியாக எடுத்துகொண்டாலும் ஒரு பெண் கன்றுக்குட்டி பருவம் அடைந்து முதல் கன்றை ஈன்று, அதற்கு 3-6 மாதம் பாலும் கொடுத்து, 2 மாதங்கள்  ஓய்வு எடுத்து மீண்டும் சினையாகி என்று 7 கன்றுகளை ஈன்றால் அதற்கு 12 வயதாகி விடும்.  காங்கேயம் போன்ற தமிழ் நாட்டு பசுக்கள் 7-10 கன்றுகளை தந்து ஆயுட்காலத்தில் ஈன்று எடுத்தால் அது நல்ல பசு. அதற்குமேல் கன்றுகளை ஈனுவது அதை வளர்க்கும் விவசாயியின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நாள் ஒன்றுக்கு 3-5 லிட்டர் பால் வரை கருக்கும் இயல்பு கொண்டவை காங்கேயம் பசுக்கள். பசுவின் பால் அதன் கன்றுக்கு, மனிதன் அதை (?திருடி) குடிப்பது  என்னை பொறுத்தவரை தவறே. வெளிநாட்டு பசுக்களை பற்றி உயர்வாக பேசுவோர் சொல்வது நம்ம உள்ளூர் மாட்டு இனமும் அதன் பசுக்களும் அதிகம் பால் கறக்காதே என்று. ஜெர்சி பசு பத்து லிட்டர் கறக்குமே. சில வெளிநாட்டு இன பசுக்கள் இருபது லிட்டர் பால் கறக்குமே என்று சிலாகிக்கிறார்கள். உண்மையில் நமது நாட்டு இன மாடுகள் பல வேலையையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. சமீப காலங்களில் அ2 அ1 பால் புரதம் பற்றி பல ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது. இதைப்பற்றி விரிவாக எழுத இருக்கிறேன்.

9. குக்கிராம வாழ்க்கை

ஐந்து ஏக்கர் உள்ள விவசாயி ஒரு நாய் கட்டாயம் வைத்து இருப்பார் , சில கோழிகளையும்  வளர்ப்பார் மற்றும் ஒரு பூனை இருக்கும். நாய் வீட்டை காப்பதற்கு. பூனை வீட்டில் உள்ள எலிகளை பிடித்து சாப்பிட, கோழிகள் ஆடி, தீபாவளி, காணும் பொங்கல் மற்றும் உறவினர் வந்தால் அடித்து சாப்பிட என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி அல்லது கடமை இருக்கும். வெள்ளாடுகள் இரண்டு அல்லது ஒன்று வைத்து இருப்பார்கள். சிலர் 10 செம்மறி ஆடுகள் கூட வைத்து இருப்பார்கள். இப்படி இருந்தாலே அவனை பணக்காரன் என்று ஊரில் பாதிப்பேர் பொறமைப்படுவர்கள். அந்த நாய்க்கு உணவு அந்த வீடு உரிமையாளர்கள் சாப்பிடும்போது கொஞ்சம் போடுவார்கள் அல்லது கறி சோறு சமைத்தால் எலும்பை மட்டும் போடுவார்கள். அதற்கே அந்த நாய் உயிரையும் கொடுக்கும் நன்றியுடன் இருக்கும். பூனைக்கு கொஞ்சம் மோர் கொடுப்பார்கள் அவ்வப்போது கொஞ்சம் சாதம் கிடைக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் கருவாடு கிடைக்கும். கோழிகளுக்கு நாள்தோறும் அதன் கொடப்பில் இருந்து விடுவித்து ஒரு கை ரேசன் அரிசி அல்லது செட்டியார் கடை குரனை அரிசி கிடைக்கும். பகல் முழுவதும் அந்த கோழி வீட்டை சுற்றி மண்ணை கிளறி கிடைப்பதை கொத்தி கொத்தி தின்னும். அதுவே அதற்கு சொர்க்கம். கிராமத்தில் வசதி படைத்தோர், வருட தொடக்கத்தில், நவ தானியங்களையும் சம அளவில் எடுத்து அதை கலந்து ஒரு கோணிப்பையில் வைத்து கொள்வார்கள். அதை தாங்கள் வளர்க்கும் கோழிகளுக்கு உணவாக தினமும் காலையில் கொடுப்பார்கள். இது அரிதாக நடக்கும் நிகழ்வு.

காலையில் தினமும் பால் கறந்தவுடன் பசுக்களை காட்டில் கொண்டு விட்டுவரவேண்டியது மீண்டும் அன்றைய பொழுது சாயும் முன்னர் ஓட்டி வந்து பால் கறந்து விட்டு அந்த பசுக்களை மாட்டு தொழுவத்தில் கட்டிவிடுவது என்று வாழ்க்கை உருண்டோடும். வருடம் முழுவதும் பால் கிடைக்கும்படி அந்த மாடுகளை சினையாக்கி விடுவது அந்த விவசாயியின் திறமை. காலையில் கன்றுகுட்டி ஊட்டியதுபோக இரண்டு லிட்டர் பால் மாலையில் இரண்டு லிட்டர் பால் கிடைத்தால் அது பெரிய விஷயம். அதில் காலை மாலை என்று அரை லிட்டர் பால் வைத்து கொண்டு மீதி பாலில் தண்ணீர் கலந்து (ஒரு நாளுக்கு நான்கு லிட்டர் பாலை) விற்பனைக்கு கொடுத்தால் அது அவருக்கு நல்ல நாள். வீட்டு பெண்கள் அந்த பாலை காய்ச்சி தயிர் ஆக்கி விடுவார்கள். சிலர் வெண்ணை எடுப்பார்கள் சிலர் அப்படியே குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் தயிராகவே உணவுக்கு கொடுப்பார்கள். வெண்ணை எடுப்பவர்களுக்கு நிறைய பால் வேண்டும். ஐந்து ஏக்கர் வைத்து இருப்பவர்கள் செட்டியார் கடையில் விலைக்கு நெய் வாங்கி கொள்வார்கள். அங்கேயே தங்கள் பயிர் செய்யும் காய்கறிகளை விற்று மளிகை சாமான்களும் வாங்கி கொள்வார்கள். இதுக்கே இழுபறியாகி சிலர் கடன் வாங்கி காலம் தள்ளுவார்கள். தீபாவளிக்கு வாங்கிய கடனை பொங்கலுக்குள் அடைப்பார்கள், பொங்கலுக்கு வாங்கிய கடனை ஆடி நோன்புக்குள் அடைப்பார்கள், ஆடி நோன்புக்கு வாங்கிய கடனை தீபாவளிக்குள் அடைப்பார்கள். இதுதான் வாழ்க்கை. பால் என்ற ஒன்றை மட்டுமே எதிர்பார்த்து பசுக்களை வளர்ப்பது கிராம மக்களின் வாழ்க்கைமுறை அல்ல. பசுக்களில் இருந்து கிடைக்கும் சாணியை உரமாக பயன்படுத்துவார்கள். கன்றுக்குட்டி குடித்தது போக மீதமுள்ள பாலை கறந்து விற்பார்கள். கன்றுக்குட்டியை 14-20 மாதங்கள் வளர்த்து நல்ல விலைக்கு விற்பார்கள். பசுக்களை தங்கள் புன்செய் நிலையத்தை மேயவிட்டு அந்த நிலத்தில் புற்களை மட்டுப்படுத்தி கொள்வார்கள். இப்படி மாடு வளர்ப்பது என்பது கிராம மக்களின் வாழ்வியல் சார்ந்த ஒரு முறை.

மாடுகள் போடும் சாணியை குப்பை குழிக்குள் போட்டு வைத்து ஆனி மாதத்தில் வெட்டி எடுத்து வெயிலில் உலர்த்தி ஆடி மாதத்தில் விதைக்கும் முன்னர் உரமாக பயன்படுத்துவார்கள். அந்த சாணியே இவர்கள் விளைவிக்கும் கடலை, மிளகாய், மற்றும் சில பயறு வகைகளுக்கு நல்ல இயற்கை உரமாக இருக்கும். சிலர் ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விடுவார்கள். அதை வருடம் முழுவதும் உணவுக்கு நம்பி இருப்பார்கள். இப்படி இருக்கும் விவசாயி தன் பக்கத்துக்கு தோட்டதுக்காரன் நிலம் விற்பனைக்கு வரும்போது அதை வாங்குகிறார் என்று வைத்து கொள்ளுங்கள். அதற்கு அவரின் மாமனார் வட்டியில்லாமல் பணம் கொடுக்கிறார். காரணம் அவரின் பெண் நன்றாக இருக்க வேண்டுமே. தன் மருமகன் பணக்காரன் என்றால் அதில் அவருக்கு பெருமைதானே. தற்போது இவரிடம் இருபது ஏக்கர் நிலம் இருக்கிறது. இது அந்த விவசாயியின் மனதில் சிறு வயதில் இருந்தே மூடி வைத்திருந்த ஆசை ஒன்று மெல்ல முளை விடும். ஆயிரம் பட்டம் பூச்சிகள் அடிவயிற்றில் பறக்கும், அந்த ஆசையை, கனவை, இலட்சியத்தை, எண்ணத்தை இரவு உணவின்போது மெல்ல அவரின் மனைவியிடம் கூறுவார். அதற்கு பெரும்பாலும் புன்னகைதான் பதிலாய் வரும். சில பெண்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இருவரும் குழந்தைகள் தூங்கியபின் அல்லது பகல் பொழுதில் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். வீட்டின் தலைவர் தன் தந்தை, தாய், மாமனார், மாமியார் மற்றும் மைத்துனர் இவர்களிடம் என்றில்லாமல் தனது நட்பு வட்டாரத்திலும் அதை பற்றி கலந்தாலோசிப்பார். அவர்களின் ஆலோசனைப்படி மணப்பறை மாட்டு சந்தைக்கு வியாபாரியுடன் சென்று நல்ல புலியகுளம் அல்லது காங்கேயம் காளையை இரண்டு அல்லது மூன்று வயது கன்றாக வாங்கி வருவார். வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும் வரை தாகம், பசி என்று எதையும் பொருட்படுத்த மாட்டார். அப்படி ஒரு வெறியில் இருப்பார்கள். காளை கன்று வந்தவுடன் வீட்டில் அக்கம் பக்கத்துக்குகாரர்களின் பொறமை கலந்த குத்தல் பேச்சு பற்றி எல்லாம் கவலைப்படாமல் குதுகலித்து போவார்கள். அந்த வீட்டில் ஒரு புது வித உற்சாகம் கரை புரண்டு ஓடும். ஆரத்தி எடுக்க பொட்டு வைக்க சூடம் சாம்பிராணி காட்ட புது கயிறு புது கொட்டகை அன்று வீடே அல்லோகலோபட்டு போகும். அது அவர்களுக்கு அடுத்தடுத்து வரும் பொங்கலில் தங்கள் வீட்டில் இருந்தும் ஒரு காளை மஞ்சு விரட்டுக்கு தயார் என்று ஆணாய் இருந்தால் மீசையை முறுக்கிவிட்டுகொள்ள, பெண்ணை இருந்தால் அடுத்த வீடு பெண்களிடம் பெருமை பேச என்று மனங்கள் சந்தோஷ பட்டு போகும்.

10. பூச்சிக்காளை அல்லது கோவில் காளை

தன்வீட்டு காளையை, தான்வாழும் கிராமத்தின் பூச்சிக்காளையாக்கி பார்ப்பதுதான் காளை வளர்க்கும் பலரின் மிகப்பெரிய கனவு. பூச்சிக்காளை அல்லது கோவில் காளை ஆக்குவதால் என்ன நன்மை என்றால் அந்த வருடத்தின் பூச்சிக்காளை அல்லது கோவில்காளை அந்த கிராமத்தின் அனைத்து பசுக்களையும் சினையாக்கும் உரிமையை பெற்றுவிடுகிறது. இதை எங்கேயோ படித்ததுபோல இருக்கிறதா? காடுகளில் மந்தையாய் வாழ்ந்த பசுக்களை எப்படி ஒரு காளை உரிமை கொண்டாடியதோ அதைப்போல. அதாவது தங்கள் வீட்டு காளை, பூச்சிக்காளை அல்லது கோவில்காளை என்ற பட்டதை வென்று அதன் மூலம் பிறக்கும் கன்றுகள் எல்லாம் விருத்தியானால் அதை ஒரு பெரிய பெருமையாகவும் கடவுள் கொடுத்த ஒரு வரமாகவும் கிராம மக்கள் நம்புகிறார்கள். பூச்சிக்காளை அல்லது கோவில்காளை பட்டம் வாய்த்த காளையை வைத்திருப்பது, தன்னை ஊரில் மிகவும் பிரபலமாக்க உதவும். மேலும் தன் வீட்டுக்காளை, பூச்சிக்காளை அல்லது கோவில்காளை ஆகிவிட்டால் அதை வீட்டில் கட்டி வைக்கவோ அல்லது தீனி போடவோ தேவை இல்லை. அது அந்த ஊரில் உள்ள எந்த ஒருவரது காட்டிலும் அல்லது தோட்டத்திலும் மேயலாம். அதை அந்த ஊரில் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். காரணம் அது தெய்வ காளை அதற்கு தீங்கு நினைத்தால், தீங்கு நினைத்த அந்த குடும்பத்துக்கு ஆகாது என்று நம்பிக்கை.  மேலும் அந்த வருடம் நல்ல மழை பெய்து பயிர்கள் நன்கு விளைந்தால் அந்த பூச்சிக்காளை அல்லது கோவில்காளை உரிமையாளர் கடவுள் அருள் உள்ளவர் என்றும் மக்கள் அவருக்கு மரியாதையை காட்டுவார்கள். ஊரில் பொங்கல் வைத்தால் பூச்சிக்காளை அல்லது கோவில்காளைக்கு படையல் செய்வார்கள். இப்படி பூச்சிக்காளை அல்லது கோவில்காளை உரிமையாளர் ஊருக்குள் கெத்தாக வலம் வருவார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டிய நாளில் இந்த பூச்சிக்காளை அல்லது கோவில் காளை எது என்று ஒரு போட்டி இருக்கும் அதாவது எந்த காளை யாராலும் அடக்க முடியாமல் தன் கொம்புகளுக்கு இடையில் உள்ள பட்டு துணியை யாரையும் அவிழ்க்கவிடாமல் குறிப்பிட்ட நேரம் வரை மைதானத்துக்குள் நின்று விளையாடி வெற்றி பெறுகிறதோ அது பூச்சிக்காளை அல்லது கோவில் காளை என்று அறிவிக்கப்படும். இது ஒரு விதம். சில ஊர்களில் குறிப்பாக அலங்காநல்லூரில் வாடிவாசல் (இரண்டு பெரிய கற்களை கதவுபோல நட்டு வைத்து இருப்பார்கள் குதிரை பந்தயத்தில் கேட் திறப்பதைப்போல) வழியாக வெளிஏறும் காளையை அதன் திமிலை பிடித்துக்கொண்டு (அந்த காளை மூன்று சுற்று சுற்றும் வரை அல்லது 100 மீட்டார் தொலைவில் இருக்கும் எல்லைவரை) செல்பவர் அந்த காளையின் உரிமையாளர் கொடுக்கும் பரிசை பெற்று கொள்ளலாம். அதிகபட்சம் ஒரு பவுன் நகை இருக்கும். பெரும்பாலும் 1001 ரூபாய் பரிசு அல்லது இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பரிசு என்று கொடுப்பார்கள். இந்த விளையாட்டு அந்த பரிசுக்காக அல்ல என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கும் போட்டிகளில் மைதானத்துக்குள் நின்று விளையாடும் காளையை மக்கள் குறிப்பாக மாட்டு தரகர்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். இதில் உள்ள முக்கிய விஷயம் அப்படி சிறப்பான காளைகளை அடுத்த பொங்கலுக்கு யார் அடக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு மிகவும் பெரியதாக பேசப்படும்.  அந்த காளையை அடுத்த பொங்கலுக்கு அடக்குகிறேன் பார் என்று முறுக்கிகொண்டும் கருவிக்கொண்டும் திரியும் காளையர்கள் நிறையபேர். இப்படி பொங்கல் என்றாலே எந்த காளையை யார் அடக்குகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஊருக்குள் பலரையும் பேச வைத்துவிடும். ஊரில் உள்ள சில பெரிசுகள் அந்த காலத்துலேயே பல காளைகளை நான் அடக்கி இருக்கிறேன். அலங்காநல்லூர் மண் ஏன் பெயர் சொல்லும் கேட்டுப்பார் என்று சொல்லும் அளவுக்கு ஒரு உற்சாகம் கரை புரண்டு ஓடும். காளைகள் தங்களை மனிதர்கள் கொல்வார்கள் என்றெல்லாம் பயப்படுவதில்லை. காளைக்கு தெரியும் நாம் விளையாடப்போகிறோம் என்று, ஆகவே அது மிரட்சியுடன் காணபட்டாலும், மூக்கணாங்கயிறு  அறுக்கபட்டதும் வாடிவாசல் வழியாக வெளியேறி அது விளையாடும் அழகே தனி. அதை கான் கண்கள் கோடி வேண்டும். அதை இளம் கன்றாக இருக்கும்போதே இப்படி பழக்கி வைத்து இருப்பார்கள்.  அலங்காநல்லூர், பாலமேடு போன்ற ஊர்களுக்கு சென்று வரும் காளைகள் பலரையும் தூக்கி பந்தாடி வந்தால் அதற்கு சுற்றுபட்டி பதினெட்டு கிராமத்திலும் மவுசு கூடிவிடும். எங்க வீட்டு காளைதான் பத்து பேர் குடலை பதம் பார்த்தது என்று பெருமையாக கூறிக்கொள்ளுவார்கள். அப்படிப்பட்ட காளைகளை மாடு விற்கும் தரகர்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். அவர்கள் அந்த காளைகளின் உரிமையாளர்கள், அது இருக்கும் ஊர், அந்த காளைகள் வளரும் விதம் என்று அனைத்து செய்திகளையும் தெரிந்து வைத்துகொண்டு தங்களுக்கு வேண்டியவர்களின் பசுக்களுக்கு இணை சேர உதவுவார்கள்.

11. ஒருநாள் அந்த திருநாள்

இந்த கூட்டமும், சத்தமும், காளையர்களின் பாய்ச்சலும் காளைகளுக்கு தங்கள் மூதாதையர்கள் காடுகளில் வாழ்ந்தபோது சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து ஏற்பட்ட ஒரு அச்ச உணர்வை சில மணி நேரங்களுக்கு தோற்றுவிக்கிறது. இது ஒருவித அழுத்தத்தை அந்த காளைகளுக்கு ஏற்படுத்துகிறது. அது நல்லதுதான் என்று அறிவியல் அறிஞர்கள் ஒப்புகொள்கிரார்க்ள. இயற்கை தேர்வு என்று சார்லஸ் டார்வின் என்ற மேலை நாட்டு அறிஞர் கூறியதை நமது முன்னோர்கள் இந்த மஞ்சு விரட்டு மூலம் ஏற்படுத்தி வைத்து உள்ளார்கள். அப்படி செயற்கையாக உருவாக்கப்படும் சூழலில், எல்லா காளைகளும் ஒரே விதத்தில் எதிர்வினை ஆற்றுவதில்லை. அதில்தான் சுவாரஸ்யமே இருக்கிறது. வாடிவாசல் வழியாக வெளியேறும் எல்லா காளைகளும் அங்கிருக்கும் மக்களை கண்டு பயந்து ஓடி விடாது. சில காளைகள் மட்டும் பயப்படாமல் நின்று விளையாடும். மண்ணை குத்தி, என்னருகே வந்துபார் உன்னை குத்தி கிழிக்கிறேன் என்று தலையை ஆட்டி அதன் கொம்புகளை காட்டி அச்சுறுத்தும். சில காளைகள் அதன் வாலை பிடிக்க நினைப்போரை பின்னங்கால்களால் உதைக்கும். அப்படி ஒரு வீரத்தை காட்டும் காளைகளை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு தங்கள் பசுக்களை முடிந்தால் அதனுடன் இணை சேர்த்து அதன்மூலம் பிறக்கும் ஆண் கன்றுகளை அதிக விலைக்கு விற்கவோ அல்லது தாங்களே வளர்த்து காளையாக்கவோ முயல்வார்கள். இதுதான் இதன் தத்துவம்.

இன்றும் ஆண் மயில்கள் அனைத்தும் தோகை விரித்து ஆடினாலும் எந்த ஆண் மயிலின் தோகை அழகாக பெரியதாக இருக்கிறதோ அந்த ஆண் மயிலுடன் இணை சேரவே பெண் மயில் விரும்பும். அதுதானே  இயற்கை. அதை நீங்கள் எப்படி சரி என்கிறீர்களோ அதைப்போல ஒரு வீரம் நிறைந்த காளையை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற தமிழக மக்களின் முன்னோர்கள் கூறியதை எப்படி தவறு என்று நீங்கள் எப்படி கூற முடியும்? இந்திய ராணுவத்திற்கு நல்ல பலசாலியா தைரியசாலியா என்றெல்லாம் பரிசோதித்து எடுக்கிறார்களே அது மாதிரிதான் இதுவும். ஒரு வீரியம் நிறைந்த காளையின் விந்தணு மூலம் நல்ல கன்றுகள் பிறக்கும் என்பது அறிவியல் அன்றி வேறில்லை. அலங்காநல்லூரில் காளையர்களே சிங்கங்களாகவும் புலிகளாகவும் சில மணி நேரங்களுக்கு ஒரு செயற்கை சூழலை உருவாக்குகிறார்கள். அதன்மூலம் 364 நாட்கள் அதை சாணி எடுத்து மருந்து கொடுத்து குடும்பத்தில் ஒருவனாக காப்பாற்றும் ஒருவனுக்கு அதனுடன் ஒரு நாள் விளையாட தடைபோடுவது எந்த விதத்தில் நியாயம்?  ஒரு நன்கு வளர்ந்த காளையின் கொம்புகள் அச்சத்தை தரும் ஆனாலும் அதையும் மீறி அதன் திமிலை பிடித்து அதை தழுவி, அதை அடக்கி ஒரு காளையர் என்ற பெருமைக்காக பலரும்  ஏங்கி தவிக்கும் ஒரு தீவிர சாகச விளையாட்டுதான் இந்த மஞ்சு விரட்டு எனப்படும் ஏறு தழுவுதல் என்றால் மிகையில்லை. உங்கள் வீட்டு பெண்ணை ஒரு நல்ல ஆண் மகனுக்குத்தானே மணம் முடித்து கொடுப்பீர்கள்? அல்லது உங்கள் வீட்டு ஆண்கள் பலசாலி திறமை வாய்ந்தவர் என்றால் அதற்கு ஊரில் நல்ல பெண் கொடுக்க முன் வருவது இயல்புதானே. அது எப்படி தவறாகும்? யோசித்து பார்க்கையில் இது ஒரு அற்புதமான பரிணாம வளர்ச்சியின் அடிப்படியில் அமைந்த, சாகசங்கள் நிறைந்த விளையாட்டு.

12. எண்ணிக்கை குறையும்

மஞ்சு விரட்டு போன்ற விளையாட்டுக்கள் காளை வளர்ப்பதை எப்படி குறைக்கும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  ஒரு ஊரில் கார் பந்தயம் இல்லை என்றால் நீங்கள் எதற்கு வேகமாக செல்லும் கார்களை வாங்கி அதை பராமரிக்க வேண்டும்? கிணறு இல்லாமல் உள்ள நிலத்திற்கு யாராவது பாம்பு செட்டு வாங்குவார்களா ? அப்படி வாங்கினால்தான் அதை எங்கு வைப்பார்கள்? அப்படிதான் ஜல்லிக்கட்டு இல்லையென்றால் காளைகள் எண்ணிக்கை ஒரு சில வருடங்களில் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக காளைகள் வளர்க்கப்படும் அதுவும் வீரியம் குறைந்ததாகிவிடும். பணம் படைத்தவர்கள் அல்லது பத்துக்கும்மேல் பசுக்களின் எண்ணிக்கை கொனடவர்கள் மட்டுமே காளைகள் வைத்து இருப்பார்கள். அவர்களிடம் உங்கள் பசுக்களை ஓட்டிச்செல்ல வேண்டும். ஒரு வாகனத்தின் உதவியுடன் கொண்டு சென்று அழைத்து வர வேண்டும். பலர் நகரங்களுக்கு குடி பெயரும் இந்த காலத்தில் ஒத்தை பசுவை வைத்து இருப்போர் உள்ளூரில் அந்த சேவை செய்ய காளை இல்லையென்றால் அதை விற்றுவிடும் வாய்ப்பு அதிகம். காளை சேர்ப்பது என்பது மிகவும் சிக்கல் நிறைந்த ஒரு விஷயம். ஒரே முயற்சியில் பசு சினையாகிவிட்டால் அது ஒரு பெரிய சக்சஸ். ஒரு கரு சுழற்சியில், 5-7 நாட்கள் மட்டுமே கருவானது சினைப்பையில் தங்கியிருக்கும். அந்த நாட்களில் சரியாக காளையிடம் ஒட்டி செல்ல வேண்டும். அதை முன்கூட்டியே திட்டமிட்டு காளை வளர்ப்போரிடம் தகவல் சொல்லி என்று பல தடைகள் தாமதங்கள் என்று தாவு தீர்ந்துவிடும். அதனால்தான் முன்னரே கூறினேன் 10 கன்றுகளுக்குமேல் ஈன்றாள் அந்த பசு அதிர்ஷ்டம் நிறைந்தது. அதை இறக்கும் வரை வைத்து இறந்தபின் அதன் உடலை அது மேய்ந்த நிலத்திலேயே புதைப்பார்கள். பார்த்தீர்களா இதில் எவ்வளவு விஷயம் உள்ளதென்று?

ஊரில் பசுக்களை வைத்து இருப்போர் அதை தங்கள் வயல்களில் அல்லது புன்செய் நிலங்களில் மேய விட்டு இருப்பார்கள். அப்போது கோவில் காளை எந்த கட்டுப்படும் இல்லாமல் ஊர் சுற்றி கொண்டு இருக்கும். அது எங்கெல்லாம் பசுக்கள் இணை சேர தயார் என்று அந்த பசுக்கள் வெளியேற்றும் சிறுநீரில் இருந்து மோப்பம் பிடித்து அந்த பசுவை தேடி பிடித்து அந்த சேவையை இலவசமாக செய்துவிட்டு சென்று விடும். கோவில் காளைகள் பசுக்களுக்கு அந்த சேவை செய்வதில் பலே கில்லாடி. ஊரில் திருமணம் ஆகாமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு ஆண் மகனை அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் பூச்சிகாளை என்று கிண்டல் பேசுவது சகஜம். கோவில் காளை இல்லையென்றால் ஒத்தை பசுவை வைத்து இருப்போர் தங்கள் பசுக்களுக்கு அந்த சேவை செய்ய காளைக்கு பணம் கொடுக்க வேண்டும். வாகன செலவு, காளை சேவைக்கு பணம், ஒரு நாள் வேலை என்று எல்லாம் செய்து பசு சினைபிடிக்கவில்லைஎன்றால் அதை மீண்டும் செய்ய வேண்டும். நினைத்து பாருங்கள் ஒத்தை பசுவை வைத்து இருப்போரின் எண்ணிக்கை என்பது சில லட்சங்களை தொடும். அது எல்லாம் ஒரு சில வருடங்களில் காணாமல் போகும். விளைவு 4 பசுக்கள் அல்லது அதற்குமேல் வைத்து இருப்போர்மட்டுமே இந்த கோவில் காளை இல்லாத சூழலை எதிர்கொள்ள முடியும். செலவு என்று வரும்போது பலர் நகரத்தில் கிடைக்கும் வேலை, நிலத்தை பிளாட் போட்டு விற்பதன்மூலம் வரும் பணத்திற்கு ஆசைப்பட்டு மூட்டை முடிச்சுகளுடன் இடம் பெயர்வார்கள். இதைப்பற்றி மேலும் விரிவாக எழுதுகிறேன். ஆக ஐந்து வருடங்களில் காங்கேயம், பர்கூர், புலியகுளம், உம்பளாசேரி மற்றும் மலை மாடுகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும்.

மஞ்சு விரட்டு இல்லையென்றால் கோவில் காளை இல்லை. கோவில் காளை முறை இல்லையென்றால் தங்கள் வீட்டிலிருந்தும் ஒரு காளையையும், கோவில் காளை ஆக்கவேண்டும் என்று முயற்சி செய்வோர் யாரும் முயல மாட்டார்கள். அதில் ஏன் நேரத்தையும் காசையும் செலவு செய்ய வேண்டும். பெரிய பணக்காரர்கள் செய்யும் செலவை காளைக்கு நம்மால் செய்ய முடியாது என்று ஒதுங்கி கொள்வார்கள். பத்து காளைகள் வளர வேண்டிய இடத்தில் இரண்டு காளைகள் மட்டுமே வளர்க்கப்படும். காளை வளர்ப்பு லாபகரமானதில்லை. காளையிடம் இருந்து பால் கறக்க முடியாது. காளை வளர்க்க ஆகும் செலவில் இன்னும் இரண்டு பசுக்களை வைத்து வளர்த்தால் பால் நிறைய கிடைக்கும் என்று கணக்கு போடுவார்களே தவிர யாரும் காளை வளர்க்க மாட்டார்கள். இதுதான் இதில் உள்ள சிக்கல். சிலர் வேடிக்கையாக உழவுக்கு பயன்படுத்தலாமே, பாரம் இழுக்க பயன்படுத்தலாமே என்று அறிவுரை கூறுகிறார்கள். காளையை உழவுக்கோ அல்லது பாரம் இழுக்கவோ பயன்படுத்த முடியாது. காரணம் அதன் குணம் அப்படி. அது பசுக்களை சினையாக்கதான் சரிபட்டு வரும். உழவுக்கோ, பாரம் இழுக்கவோ அல்லது வேறு வேலைகளுக்கோ விதைப்பைகள் நீக்கப்பட்ட பொதி மாடுதான் பயன்படும். இன்று பெரும்பாலும் இயந்திரங்களே உழவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாரம் இழுக்கவும் லாரிகள் டெம்போக்கள் என்று பொதி மாடுகளின் பணியையும் இயந்திரங்கள் செய்வதால் அதன் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஒரு முறை மாடுகள் பாரம் இழுப்பதை பார்த்தல் அந்த மாடுகளுக்கு விதைப்பைகள் உள்ளனவா என்று பாருங்கள். இல்லையென்றால் பாரம் இழுக்கும் பொதி மாடுகளின் உரிமையாளரை பாரம் இழுக்கும் வேலைக்கு காளைகளை பயன்படுத்த முடியுமா என்று கேளுங்கள்?

13. யாருக்கு லாபம்?

பன்னாட்டு நிறுவனகளுக்கு இதில் லாபம். எப்படி என்றால்? இந்தியாவில் பால் வியாபாரம் என்பது பல லட்சம் கோடிகளை அள்ளி கொடுக்கும் ஒரு அட்சய பாத்திரம். நமது மாடுகள் தினமும் 5 லிட்டார் கறந்தால் அதுவே ஒரு பெரிய சாதனை. ஆனால் வெளிநாட்டு ஜெர்சி பசுக்கள் இருபது லிட்டர் பாலை சர்வ சாதாரணமாக கறக்கும். ஆனால் இதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. காரணம் அந்த பசுக்கள் தீவனம் நிறைய உண்ணும். அதுவும் நமது காடுகளில் உள்ள கொலுக்கட்டைப்புல், அல்லது வைக்கோல் என்று திங்காது. அதை கொடுத்தால் பாலின் அளவு குறையும். அவ்வப்போது அதற்கு மருந்து மட்டும் தடுப்பு ஊசிகள் போட வேண்டும். புன்செய் நிலத்தில் உள்ளூர் மாடுகளைப்போல நான்கு திசையும் சென்று மேயாமல் ஒரே இடத்தில் நின்று மேயும் பழக்கமுடையவை.  அதை செயற்கை கருத்தரிப்பு செய்ய நீங்கள் வெளிநாட்டு விந்தணுக்களைதான் நம்பி இருக்க வேண்டி இருக்கும். அதற்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். கடைசியில் குஜராத்தில் உள்ளதுபோல சிறு மற்றும் குறு விவசாயிகளை பசு வளர்ப்பது லாபம் இல்லை என்று சொல்லி அவர்கள் நிலங்களை பெரிய தனியார் பன்னாட்டு கம்பனிகளிடம் ஒப்படைப்பதுதான் இதில் உள்ள சூழ்ச்சி. அவர்கள் ஜெர்சி போன்ற மேலை நாடு பசுக்களை கொண்டுவந்து இந்தியாவில் பண்ணை வைத்து பால் வியாபாரம் செய்வார்கள். அந்த பசுக்களுக்கு தீனி இந்தியாவில் இருந்து வாங்காமல் அவர்கள் நாட்டு விவசாயிகளிடம் இருந்து வாங்குவார்கள். இப்படி நமது பணம் முழுவதும் ஐரோப்பாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ செல்லும்.

தற்போது இந்தியாவில் செயற்கை உரங்களை பயன்படுத்துவது அதிகம் ஆனால் அது பலரையும் இயற்கை உரத்துக்கு மாற்றி வருகிறது அல்லது இயற்கை உரத்தை பற்றி தேட வைத்து உள்ளது. அதற்கு பல காரணங்கள். ஒன்று செயற்கை உரங்கள் புற்று நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்துபவை. இரண்டு அவற்றை உற்பத்தி செய்யும் கம்பெனிகளே புற்று நோய்க்கான மருந்தையும் உற்பத்தி செய்கின்றன. இணையத்தில் தேடி பார்க்கவும். பேயர் (Bayer) என்ற கம்பெனிதான் உலக அளவில் அதிகம் பூச்சிகொல்லிகளை உற்பத்தி செய்கிறது அதே கம்பெனிதான் சர்க்கரை வியாதிக்கான மருந்தையும் உற்பத்தி செய்கிறது.உலக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்யும் முதல் பத்து முன்னணி நிறுவனங்களே புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்க்கான மருந்து தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளன என்று சொன்னால் உங்களுக்கு நினைவில் வருவது? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது என்பது இதுதானோ? சரி விசயத்துக்கு வருவோம். ஜல்லிக்கட்டு குறைந்தால் காளைகள் எண்ணிக்கை குறையும், அது நாட்டு மாடுகள் எண்ணிகையை குறைக்கும். இயற்கை விவசாயம் குறையும்.  சிறு நில குறு நில விவசாயம் குறையும். படிப்படியாக பன்னாட்டு கம்பெனிகளுக்கு அந்த நிலங்கள் தாரை வார்க்கப்படும். அவர்கள் செயற்கை உரங்களை கொண்டு உணவை தயாரிப்பார்கள். அதை தின்று புற்று நோய் வந்து சாகவேண்டியதுதான். இதை பற்றி தெரிந்தும் இந்த கம்பெனிகளை தடை செய்துது ஏன் என்ற எண்ணம் உங்களுக்கு வருவது இயற்கை அனால் அதில் நிறைய விஷயங்கள் உள்ளன. அதற்கு நீங்கள் கார்ப்பரட் வேளாண்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

14. கார்பரேட் விவசாயம்

சீனாவில் கார்பரேட் விவசாயம் மிகவும் பிரபலம். அதாவது சீனாவில் உள்ள அரசு அதிகாரிகள் (அங்கு ஒரே கட்சியான கம்யுனிஸ்டுகளின் ஆட்சிதான், அதில் இருக்கும் குண்டர்கள்தான் அதிகாரிகள்) கிராமங்களுக்கு செல்வார்கள். அங்குள்ள மக்களை எல்லோரையும் அருகில் உள்ள புதிதாக உருவான அடுக்குமாடி குடியிருப்புக்கு பலவந்தாமாக லாரிகளிலும், வேன்களிலும் கடத்தி  கிராமங்களை காலி செய்வார்கள். அந்த கிராமத்தையும் அதனை ஒட்டிய வேளாண் நிலங்களையும் பெரிய இயந்திர கலப்பைகளை கொண்டும் ஜேசிபி போன்ற பெரிய இயந்திரங்களை கொண்டும் ஒரு ஹெக்டேர் நிலத்தை சமன் செய்வார்கள். பழைய வீடுகள் கட்டிடங்கள் மற்றும் கோவில்கள் என்று எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். பிறகு கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தனியார் கம்பனிகளை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பார்கள். அவர்கள் சிறு விமானம் மூலம் கெமிக்கல் உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் என்று அனைத்தையும் ஆகாய மார்க்கமாக தெளிப்பார்கள். மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட விதைகளை பயிர் செய்வார்கள். பூச்சிகள் சாப்பிடாமல் இருக்க பலமுறை மருந்து தெளிக்கப்படும். பிறகு ராட்சத இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும். அது தரம் பிரிக்கப்பட்டு 24 மணி நேர சூப்பர்மார்கட் கடைகளில் கிடைக்கும். இதுபோன்ற விவசாயம் தானியங்களின் உற்பத்தியை அதிகப்படுத்துமே தவிர பல்லுயிர் ஓம்புதல் என்ற இயற்கை விதியின் அடிப்படையில் அமைந்த நமது வேளாண்மையை முற்றிலும் சிதைத்துவிடும். மக்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி கோதுமை மற்றும் இதர தானியங்களை உண்டு 20 வயதில் சர்க்கரை நோய்க்கு ஆளாகி 40 வயதில் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி மடிந்து போவார்கள்.

இதை தடுக்க முடியாத என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நமது அரசியல்வாதிகளுக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லை. ஆகவே இவர்களுக்கு எந்தவித உலக அறிவோ அறிவியல் பற்றி, பொருளாதாரம் பற்றி, சுற்றுப்புற சூழல் பற்றி அல்லது காற்று, நீர், நில மாசு பற்றிஎல்லாம் கவலை இல்லை. இன்னோவா காரில் சென்றால் அது அவர்களுக்கு வெற்றி. அதை மக்கள் பார்த்து பயப்பட வேண்டும். இதற்கு பெயர் அரசியல். கவுண்டமணி ஒரு படத்தில் ஓட்டை விற்றுவிட்டு இப்போது சட்டம் பேசுகிறீர்களா என்று கேட்பார் அதுபோல இவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கே எந்த புரிதல் இல்லாதபோது இவர்களை குறைசொல்வதில் என்ன பயன்? கடந்த 40 ஆண்டுகளில் இரண்டு திராவிட கட்சிகளும் ஒரு தொகுதியில் எந்த ஜாதியினர் அதிகம் உள்ளார்களோ அந்த ஜாதியில் ஒருவரை வேட்பாளராக தேர்ந்தெடுத்து நிறுத்தி மக்களை முட்டாள் ஆக்கிவிட்டார்கள். ஒரு தொகுதியின் மக்கள் தொகை, வேலையற்றோர் சதவீதம், குடிநீர், சாலை வசதி, கல்வியின் நிலை என்று எந்த அறிவும் இல்லாதவனாய் இருந்தாலும், அவன் நம்ம சாதிக்கற பய என்று மக்களும் ஓட்டை போட்டு நாட்டை குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள். ஜல்லிக்கட்டை இவர்களின் ஜாதி , மதம், இவ்வளவு ஏன் இவர்கள் கும்பிட்ட தெய்வம் கூட காப்பாற்றவில்லை? என்ன காரணம்? ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சிந்தித்தார்களா?

15. சர்வதேச சதி?

பலரும் ஏறு தழுவுதல் தடையை தமிழர்களுக்கு மற்றும் தமிழ் பண்பாட்டின் மீதான சர்வதேச சதி என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள் ஆனால் அதில் உண்மை இல்லை. உங்களுக்கு புரியும்படி விளக்குகிறேன். இதில் உங்களுக்கு அரசியல் அறிவும் அதன் புரிதலும் அவசியம். அதற்கு முன் உங்களை பார்த்து கேட்கிறேன்: சுந்தர் பிச்சை யார்? அந்த பதிலில்தான் பல விஷயங்கள் இருக்கிறது. அமேரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் மக்கள் ஆட்சி என்று சொல்கிறார்கள். அதை நீங்கள் நம்புகிறீர்களா?

உதாரணத்துக்கு ஆஸ்திரேலியாவை பார்ப்போம். அங்கு எட்டு வருடங்கள் இருந்தவன் என்ற முறையில் அங்குள்ள அரசியலை விளக்குகிறேன். ஆஸ்திரேலியாவில் நிலக்கரி, இரும்பு, யுரேனியம், மற்றும் காப்பர் போன்ற கனிம சுரங்கங்கள் அதிகம். அந்த சுரங்கங்களின் அதிபர்கள் நடத்தும் நிறுவனங்கள் சில பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகளையும் நடத்துகின்றன. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சுரங்க அதிபர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். அரசோ அல்லது அதிகாரிகளோ தாங்கள் நடத்தும் தொழிலுக்கு வரி அதிகம் விதித்தாலோ அல்லது தாங்கள் செய்யும் வரி ஏய்ப்பை கண்டுகொண்டாலோ அம்புட்டுதான். சுரங்க அதிபர்களின் பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து மக்களை பிரதமர் ஒரு மட்டமான மனிதர் என்று நம்பும்படி செய்துவிடுவார்கள். நல்ல உதாரணம் ஜூலியா கில்லர்ட் பிரதமர் ஆனதும் பிறகு அவர் வீழ்ந்ததும். ஜூலியாவுக்கு முன்னர்
கெவின் ரட் பிரதமாராக இருந்தார். ஒரு பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர் ஆஸ்திரேலிய சுரங்கங்கள் மீது 30% அதிகமாக வரிவிதிக்கலாம் என்று ஆய்வு கட்டுரையை சமர்பித்தார். கெவின் ரட் அதை கண்டு உணர்ச்சிவசப்பட்டு வரியை ஏத்திவிட்டார். அவ்வளவுதான் சில மாதங்களில் ஜூலியா கில்லார்டை தூண்டிவிட்டு கெவின் ரட்டை கவிழ்த்து விட்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் மாடுகளை (முற்றிலும் இறைச்சிக்காக) வேலி அமைத்து வளர்க்கிறார்கள். ஒவ்வொரு பத்து அல்லது இருபது சதுர கிலோ மீட்டர் எரியவுக்கும் காற்றுமூலம் இயங்ககூடிய ஆழ்துளை கிணற்றை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அதில் வெளியேறும் நீரை ஒரு குளம்போல தேக்கி வைப்பார்கள். மாடுகள், கங்காரு போன்ற வன விலங்குகள், பறவைகள் என்று அனைத்தும் அதன்மூலம் தனக்கு தேவையான தண்ணீரை எடுத்துகொள்ளும். எப்படிப்பட்ட வேட்கையிலும் அதன் தண்ணீர் அளவு குறையாது. இப்படி செயற்கை தீவனங்கள் கொடுத்து வளர்க்காமல் மாடுகள் ஆஸ்திரேலியாவின் விரிந்து பரந்த நிலப்பரப்பில் தன்னைக இரையை தேடி உண்டு நன்கு வளர்க்கப்படும். அந்த மாடுகளை இனப்பெருக்கம் செய்ய விடமாட்டார்கள். கன்றுக்குடிகளாய் இருக்கும்போதே அவைகள் மலடாக்கபட்டு காடுகளில் விடப்படும். அந்த காடுகளும் வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். ஆஸ்திரேலியாவில் சிங்கம் புலி போன்ற மாடுகளை உண்ணும் விலங்குகள் கிடையாது. இந்த மாடுகள் அனைத்தும் கறிக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்படுபவை. இவைகளை ஏன் காடுகளில் வேலி அமைத்து பாதுகாக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு நாட்டுகோழி கறி பிடிக்குமா இல்லை பிராய்லர் கோழிக்கறி பிடிக்குமா? சரி இந்த மாடுகளில் காடுகளில் வளர்பவை சுற்றி வர மேய்ந்து வளர்வதால் அவற்றின் தசைகளுக்கு இடையில் கொழுப்பு சேரும். ஆனால் பண்ணைகளில் ஒரே இடத்தில் நிறுத்தி வளர்க்கும் மாடுகளின் தசைகளுக்கு இடையில் கொழுப்பு சேராது. இது என்ன பெரிய விஷயம் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. பொதுவாக நம்ம ஊர் மாதிரி, ஆடு, கோழியை மசாலா ஊத்தி குழம்பு வைத்து வெள்ளைக்காரர்கள் சாப்பிடுவதில்லை. மாறாக, அவர்கள் அதை கை அகல துண்டுகளாக ஆக்கி அவற்றை என்னை விடாமல் உப்பு மிளகு மட்டும் சேர்த்து வாணலியில் விட்டு இருபுறமும் வறுக்காமல் மிதமான இளம்சூட்டில் எடுத்து சாப்பிடுவார்கள். நன்றாக யோசியுங்கள் அவ்வாறு வானொலியில் சூடு ஏற்றப்படும்போது, தசைகளுக்கு நடுவே உள்ள கொழுப்பு கரைந்து அந்த கறிக்கு ஒருவித அலாதியான ருசியை கொடுக்கிறது. ஆகவேதான் அவர்கள் காங்கேயம் காளைகளை பிரேசில் போன்ற நாடுகளுக்கு திருட்டுத்தனமாக எடுத்து சென்று அங்கு உள்ள அமேசான் காடுகளில் இயற்கையான சூழலில் வளர்த்து அதை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் அடைகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவு செய்யப்பட ஒரு கம்பெனி, பிரேசிலில் ஒரு கிளையை திறப்பார்கள். அதன் பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரேசிலுக்கு செல்வார்கள் அந்நாட்டு வேளாண்மைத்துறையில் 4000 கோடி முதலீடு என்று அறிவிப்பார்கள். உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள கம்பெனியின் பிரேசில் கிளையில் அதை முதலீடு செய்வார்கள். பிறகு அங்குள்ள அமேசான் காடுகளில் 20 சதுர கிலோமீட்டர் நிலத்தை வேலி அமைத்து அதில் மலடாக்கப்பட்ட இளம் கன்றுகளை விடுவார்கள்உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துவார்கள். இதுதான் அவர்கள் போடும் தூண்டில். மிஞ்சிபோனால் சில ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் அதுவும் மாடு மேய்ப்பது. தாராளமாக சம்பளம் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும் சம்பளத்தை அவர்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்வார்கள். ஆனால் பிரேசிலின் இயற்கை வளங்களை மொட்டையடித்துவிட்டு சூறையாடிவிடுவார்கள். காடுகள் அழிந்தால் இயற்கை வளம் குறையும். இயற்களை வளம் குறைந்தால் என்ன ஆகும் என்று நான் உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை. சில வருடங்களில் இளம் கன்றுகள் அனைத்தும் நன்கு வளர்ந்தபின் அவை அனைத்தும் அங்கேயே வெட்டப்பட்டு பெரிய கப்பல்கள் மூலம், ஐரோப்பிய மக்களுக்கு உணவுக்காக அங்குள்ள சுப்பர்மார்க்கெட்டுகளில் விற்கப்படும். அமேசான் காடுகள் அழிவது பற்றியோ அதை காப்பற்றுவதுபற்றியோ அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இப்படி பல ஆயிரம் மாடுகள் தினமும் அமேசான் காடுகளை உண்டால் அது எந்தவித தாக்கத்தை இந்த பூமிபந்தின்மீது ஏற்படுத்தும் என்று நினைத்து பாருங்கள்.

அமெரிக்காவுக்கு வருவோம். அங்கு நடப்பது அதிபர் ஆட்சி. கூகிள், முகநூல், மைக்ரோசாப்ட் மற்றும் பல முன்னணி தனியார் நிறுவனகள் வலுவாக இருக்கின்றன. இதைப்போல பல தனியார் கம்பெனிகள் மெல்ல கார்பரேட் விவசாயத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளன. அவர்கள் அந்நாட்டு அதிபர்களிடம் லாபி செய்வார்கள். அதாவது இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பதம் போடுங்கள் அதுவும் வியாபார ஒப்பந்தங்கள் போடுங்கள் என்று சொல்லுவார்கள். அந்த ஒப்பதந்தில் அந்நாட்டு அதிபர் அவர்கள் நாடு (பிரான்சோ அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ அல்லது கனடாவோ) இந்திய விவசாய துறையில் 5000 கோடிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீடு என்று அறிவிப்பார்கள். நாமும் அடேங்கப்பா நம்ம பிரதமர் ரொம்ப கெட்டிக்காரர் என்று வாய்பிளந்து நின்று கேட்டுக்கொண்டு இருப்போம்.  இரண்டு நாட்டு தலைவர்களும் கோப்புகளில் கையெழுத்து போடுவது, தேசியக்கொடி தலைகீழாக பறப்பது தெரியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது செல்பி எடுப்பது என்று காட்சிகள் அரங்கேறும். நம்ம ஊர் டிவி சானல்களும் அதை மணிக்கு ஒருதரம் என்று ஒரு வாரத்துக்கு காட்டுவார்கள். குஜராத்தில் கார்பரேட் விவசாயம் காலுன்றிவிட்டதை இணயத்தில் தேடிபார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நம்ம பிரதமருக்கு இது தெரியாதா? அட அவருக்கு நன்றாக தெரியும். ஆனால் அவருக்கு, அவர் சார்ந்த கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் நானும் நீங்களுமா பணம் கொடுக்கிறோம்? யார் இந்த கட்சிகளுக்கு பணம் கொடுக்கிறார்கள்? சாட்சாத் அந்த கார்பரேட் கம்பெனிகள்தான். கட்சி நிதி என்ற பெயரில் அவர்கள் பணத்தை நாய்களுக்கு எலும்பு துண்டு போடுவதைப்போல போடுவார்கள். பிறகு நாய் என்றால் வாலையாட்டி குரைத்துத்தான் ஆகவேண்டும். குரைக்காவிட்டால் நாயை மாற்றிவிடுவார்கள். விஷயம் ரொம்ப சிம்பிள். அதே போலதான் இந்த பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் கம்பெனியை விரிவுபடுத்த பல தந்திரங்களை செய்கிறார்கள்.

சுந்தர் பிச்சைக்கு வருவோம். அவரை நீங்கள் தமிழர் என்று எண்ணி அவரிடம் பேசினால் அது உங்கள் தவறு. அவர் கூகுளின் தலைமை அதிகாரி. அவர் அந்த நிலைக்கு வருவதற்கு அவரின் உழைப்பே காரணம். அந்த உழைப்பு என்பது கூகிளின் உயர்வை பற்றியே இருக்கும். அதற்காகவே அவர் எந்த அளவுக்கும் வில்லாக வளைவார். கூகிளை மற்ற கம்பெனிகளைவிட முன்னுக்கு கொண்டுவர அவர பல தில்லுமுல்லு வேலைகளை செய்வார். அது சட்டத்துக்கு உட்பட்டதும் தேவைப்பட்டால் சட்டத்துக்கு அப்பாற்பட்டும்கூட இருக்கும். அதுதான் அவரை அந்த பொறுப்பில் உயர்த்தி வைத்து உள்ளது. தமிழாவது அமிழ்தாவது. சுந்தர் பிச்சைக்கு தெரிந்ததெல்லாம் கூகிள் கூகிள் கூகிளைதவிர வேறு ஒன்றும் இல்லை. அவர் அமெரிக்காவைவிட கூகிளுக்குதான் விசுவாசமாக இருப்பார். இந்த விசுவாசத்தை யார் காட்டினாலும் அவர்கள் கூகிளின் அடுத்த தலைமை அதிகாரி. இப்போது புரிகிறதா? அதற்கு பெயர்தான் கேபிடலிசம், அதனுங்கோ முதலாளித்துவம்.

16. PETAவுக்கு சொல்லுங்கள் டாட்டா

இந்த அமைப்பினர் உண்மையில் பன்னாட்டு கம்பெனிகளின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள். எப்படி தெரியுமா? இந்த பன்னாட்டு கம்பெனிகள் ஐரோப்பா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள பால் பண்ணைகளை ஏன் இவர்கள் எதிர்த்து போராடுவதில்லை? . உண்மையில் அங்கு பால் உற்பத்தி செய்யப்படும் விதமே மிகவும் கொடுமையானது  . எப்படி என்று கேட்கிறீர்களா? எந்த பசுக்கள் அல்லது பசு இனங்கள் அதிகம் பால் கறக்கிறதோ அதை இந்த பால் பண்ணைகள் 1970-80 அடையாளம் கண்டு கொண்டார்கள். அதைதொடர்ந்து அவர்கள் ஒரு பெரிய பால் பண்ணையை நிறுவுவார்கள். அதற்கு பெஸ்ட் மில்க் என்று ஒரு பெயர் வைப்பார்கள். அதை ஒரு நிறுவனமாக பதிவு செய்வார்கள். அதற்கு சில ஏக்கர் நிலங்களை சொந்தமாக வாங்கி போடுவார்கள். பிறகு ஒரு கால்நடை மருத்துவர், சில ஊழியர்கள் என்று செட்டப்பாக எல்லாமே கொண்டு வருவார்கள். பசுக்களை தனியாகவும் காளைகளை தனியாகவும் வளர்ப்பார்கள். குளிர்சாதன் அறைகள், 24 மணிநேரமும் மருத்துவர் கவனிப்பு, சத்தான தீவனங்கள், மருந்துகள், தடுப்பு ஊசிகள் என்று மக்கள் வாயடைத்து போகும் அளவுக்கு வசதிகளை செய்வார்கள். காளைகள், பசுக்களை இயற்கையாக சினையாக்க விடமாட்டார்கள். காளைகளின் ஆண்குறிகளில் இருந்து ஆண் விந்தணுக்களை இயந்திரம் மூலம் செயற்கை உற்சாகமூட்டி சிறு பாட்டில்களில் எடுத்து உறை நிலையில் வைத்து விடுவார்கள். எந்த பசுவை சினையாக்க வேண்டுமோ அதை உறை நிலையில் இருந்து  விந்தணுக்களை 25-30 டிகிரிக்கு கொண்டு வந்து, ஒரு ஊசி மூலம் பசுவின் யோனியில் சேர்ப்பார்கள். அதற்கு முன்னர் பசுவிற்கு ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஊசி போட்டு அதை செயற்கையாக சினையாக்க தயாராக்குவார்கள். பிறகு அந்த பசு சினையாக்கப்பட்டு, அது கன்று போடும் வரை ஊசிகள் மருந்துகள் என்று அதை ஒரு வழி செய்துவிடுவார்கள். பசு கன்று ஈன்றதும், அதை 24 மணி நேரத்தில் தாய்ப்பசுவிடம் இருந்து கதறக்கதற பிரித்து ஆண் கன்றாக இருந்தால் இறைச்சிக்கும், பெண் கன்றாக இருந்தால் வளர்ப்புக்கும் (எதிர்காலத்தில் பசுக்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டுமே) அனுப்பி விடுவார்கள். கன்றுக்குட்டியை சாப்பிடுவார்களா? ஆமாங்க அது மாட்டுக்கறியைவிட விலை அதிகம். அதை VEAL என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

அடுத்த 365 நாட்களுக்கும் மாடுகளின் மடியில் பால் கறக்கும் இயந்திரங்களை கொண்டு பாலை அட்டைப்பூசிகள் உறிஞ்சுவதைவிட மோசமாக உறிஞ்சி தள்ளி விடுவார்கள். அந்த மாடுகள் ஒரே இடத்தில நின்றபடி மேய்ந்து கொண்டே இருக்கும். தண்ணீர் குடிக்கும். அதை பால் உற்பத்தி செய்யும் ஒரு தானியங்கி இயந்திரமாக பார்ப்பார்களே தவிர மாடுகளாக பார்க்கமாட்டார்கள். மேலும் அந்த பசுக்களுக்கு ஒக்சிடோசின் என்றார் ஹார்மோனை கொடுத்து கரைக்கப்படும் பாலின் அளவு குறையாமல் பார்த்துகொள்வார்கள். இப்படி இயந்திரங்களின்மூலம் பால் கறக்கப்படுவதால், அந்த பசுக்களின் காம்புகள் பல நேரங்களில் புண்ணாகி போகும். அப்படி ஆனாலும் பால் கறப்பதை நிறுத்த மாட்டார்கள். புண்பட்ட காம்புகளில் இருந்து வரும் சீல் பாலில் இருந்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பதப்படுத்தி விறபனைக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த சீல் செல்கள் பாலில் இருப்பதை அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அரசாங்கமே அனுமதிக்கிறது. எப்படி என்கிறீர்களா? அங்கேயும் அரசியல்வாதிகளின் தேர்தலுக்கு பெரிய பால் கம்பெனிகளே செலவு செய்கின்றன. போன்ற விலங்குகள் நல அமைப்புகள் போராடமாட்டார்களா? அங்கேதான் இருக்கிறது ஒரு நரி தந்திரம். எப்படி என்றால் இந்த PETA அமைப்பே இதுபோன்ற பன்னாட்டு நிறுவங்களின் கைக்கூலிகளே. பெரிய பால் உற்பத்தி செய்யும் கம்பெனிகள், மாட்டு இறைச்சியை விற்கும் கம்பெனிகள் போன்ற அமைப்புகளின் நன்கொடையில் PETA செயல்படுகின்றன. எப்படி என்றால் இந்த பால் கம்பெனிகளும் இறைச்சி கம்பெனிகளும் PETA போன்ற விலங்குகள் நல அமைப்புகளின் வங்கி கணக்குகளில் நன்கொடை என்ற பெயரில் பல லட்சம் டாலர்களை வருடத்திற்கு வருடம் செலுத்தி கொண்டே இருப்பார்கள். அதை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அந்த பெரிய பால் கம்பெனிகளும் இறைச்சி விற்பனை அதிபர்களும் இந்த நன்கொடையை கணக்கில் காட்டி அரசாங்கத்திடம் இருந்து வருமான வரிவிலக்கும் பெற்று விடுவார்கள். ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பார்கள். இதை பற்றியெல்லாம் தெரியாத சில அப்பாவி மக்கள் அவ்வப்போது கொடுக்கும் சிறு தொகை என்று PETA போன்ற அமைப்புகளுக்கு கொண்டாட்டம். அவர்கள் பெரிய நடிகைகள், நடிகர்கள் என்று அனைவரையும் அம்மணமாக நிறுத்தி புகைப்படம் எடுத்து அவர்கள் அசைவத்தை கையில் தொடுவதில்லை என்று விருதும் கொடுப்பார்கள். பூனையில் சைவம் கிடையாது என்ற வைரமுத்துவின் வரிகளை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.  உண்மையில் எந்த நடிகரும் சைவம் கிடையாது. அவர்கள் அனைவரும் காசை கொடுத்தால் உங்களை கூட சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுவார்கள். காசு பணம் துட்டு மணி மணி….காசு பணம் துட்டு மணி மணி…..




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..