மோடி அரசின் கிறுக்குத்தனமான முடிவுகளால் தேசமே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில், எனது முடிவை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று எந்த சங்கோஜமுமின்றி பேட்டியளிக்கிறார் மோடி.
500, 1000 நோட்டுக்கள் தடை செய்யப்படுவது, கறுப்புப் பணம் பதுக்கலுக்கும் கள்ள நோட்டு வியாபாரத்திற்கும் பங்கம் விளைவிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை.
ஆனால், இப்படியான சட்டத்தை கொண்டு வருவது அறிவுடைமையா? என்பது தான் நாம் முன்வைக்கும் கேள்வி.
கள்ள நோட்டு பெருகி விட்டால், அதை தடுப்பதற்குரிய வேறு வேறு திட்டங்களும் சட்ட விதிகளும் அரசியல் சாசனத்தில் இல்லையா?
கறுப்புப் பணம் பதுக்கலை வெளிக்கொண்டு வர ஆக்கப்பூர்வமான விதிமுறைகள் எதுவுமே இல்லையா?
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்கிற விபரம் இவர்களுக்கு தெரியுமாம்.. அது சுவிஸ் வங்கி தான் என்பது கூட தெரியுமாம்.. கறுப்புப் பணம் வைத்திருக்கும் பெரும் புள்ளிகள் என்று 100 பேர் கொண்டு பட்டியலை எல்லாம் தயாராக்கி நாட்டு மக்களின் காதுகளில் பூ சுற்ற தெரியுமாம்..
அதை மீட்க மட்டும் முடியாதோ?
கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியல் என்று சொல்லி மோடி பிரதமரான பிறகு ஓர் பட்டியலை வெளியிட்டார்களே, அந்த நபர்களை எல்லாம் விசாரித்து முடித்ததா இந்த அரசு? அவர்களை கைது செய்ததா?
கள்ள நோட்டுக்கள் வெளிநாடுகளில் அச்சாகி இந்தியாவுக்குள் நுழைகிறது, என்று வெட்கமில்லாமல் அறிவிப்பு செய்கிற இந்த மோடி அரசுக்கு அதை தடுப்பதற்கு துப்பில்லையா? சுங்கத் துறை என்ன செய்கிறது? விமான நிலைய பாதுகாப்பு என்ன செய்கிறது? உள்துறை என்ன செய்கிறது? புலனாய்வுத் துறை என்ன செய்கிறது?
தடுப்பதற்குரிய வழிகள் பல இருந்தும், கறுப்புப் பண முதலைகள் இன்னார் தான் என்று தெளிவாக இனம் காணப்பட்ட பின்னரும், அது குறித்து வாய் திறக்காத மோடி அரசு,
500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து, நான் கறுப்புப் பணத்தை மீட்கப் போகிறேன் என்று அறிவிப்பது, அவரின் திறமையையோ, வல்லமையையோ வெளிக்காட்டவில்லை.. மாறாக, அவரது கையாலாகா தன்மை தான் இங்கே வெளிப்பட்டிருக்கிறது.
வீட்டில் மூட்டைப் பூச்சி பெருகி விட்டால், அதை ஒழிப்பதற்குரிய ஆக்கப்பூர்வமான வழிகள் குறித்து சிந்திப்பவன் தான் அறிவாளியே தவிர, வீட்டையே தீயிட்டுக் கொளுத்தக் கூடியவன் அறிவாளி அல்ல.
வீட்டை கொளுத்தினால் மூட்டைப் பூச்சி சாகாதா? என்று எதிர் கேள்வி கேட்பவன் அறிவாளி அல்ல. அவன் முட்டாள்..!
வீட்டையே கொளுத்தி விட்ட பிறகு இனி மூட்டைப் பூச்சி வந்தால் என்ன வராவிட்டால் என்ன?
2 சதவிகித தொழிலதிபர்கள் செய்கிற தவறுக்கு மிச்சமிருக்கும் 98 சதவிகித அப்பாவி இந்தியர்களும் அல்லோலப்பட வேண்டுமா?
மோடியின் தன்னிச்சையான சர்வாதிகார போக்கின் மூலம், அன்றாடங்காய்ச்ச்சிகளையும், தினக்கூலிகளையும், தெருக்கோடியிலே வரிசையில் நிற்க வைக்கிற உரிமை அவருக்கு உண்டென்றால்,
அதே அன்றாடங்க்காய்ச்சிகளுக்கு இந்த நாட்டின் பிரதமர் மோடியை நோக்கி நாக்கை பிடுங்குகிற வகையில் கேள்வி கேட்கும் உரிமையும் உண்டு.
சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கியோரின் பட்டியல் என்று தயாரித்தீர்களே, அவற்றை மீட்க இதுவரை என்ன துரும்பை எடுத்துப் போட்டது மோடியின் அரசு?
அஞ்சுக்கும் பத்துக்கும் ஆலாய் பறக்கின்ற தினக்கூலியையும், சிறு குறு வியாபாரிகளையும் கறுப்புப் பணத்திற்காக ஒடுக்குகிற இந்த மோடி அரசு,
ஒட்டு மொத்த இந்தியாவிலேயே எண்ணி 10 பெரும் பண முதலைகளின் ஆண்டு வருமானத்தையும், அவர்களின் வருமான வரி பாக்கியையும் நேர்மையாக ஆராய்ந்தாலே இந்த தேசம் என்றைக்கோ அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி வல்லரசாகி இருக்குமே, செய்ததா?
அதை செய்ய துப்பு கெட்ட இந்த அரசு, நம் வயிற்றில் அடிக்கிறது.
அம்பானி, அதானிகளின் ஆண்டு வருமானம் எவ்வளவு? அதில் எத்தனை சதவிகிதம் அவர் வரியாக கட்டுகிறார்? மோடிக்கு ஜால்ரா அடிக்கும் சினிமா கூத்தாடிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டுகிற வருமான வரி எத்தனை?
வெள்ளை அறிக்கை தருமா மோடி அரசு?
அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாதவனாக என்னை தள்ளுகின்ற இந்த கையாலாகா மோடி அரசு, இந்த அறிக்கையை எனக்கு தெளிவுபடுத்த வேண்டாமா?
ஒரு ஜனநாயக நாட்டின் அரசு, ஒட்டு மொத்த தேசத்தையும் குலுங்கச் செய்கிற வகையிலான சட்டமொன்றை கொண்டு வரும் போது, அது குறித்த விரிவான செயல் திட்டத்தை முதலில் கொண்டு வந்து, மக்களிடம் விளக்கி, அதன் பிறகல்லவா சட்ட ஆணை பிறப்பிக்க வேண்டும்?
500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தால், கருப்புப் பணம் எப்படியெல்லாம் ஒழியும்?
அதன் வரைவிலக்கணம் என்ன? என்ன செயல்திட்டம் அதற்கு வகுக்கப்பட்டிருக்கிறது?? அதை மோடி அரசு தெளிவுபடுத்தியதா? நாட்டு மக்களிடம் கருத்து கேட்டதா? குறைந்த பட்சம், நாட்டு மக்களிடம் விளக்கமாவது அளித்ததா?
500, 1000 த்தை ஒழித்துக் கட்டி விட்டு, அனைவருக்கும் 2000 ரூ. நோட்டை கொடுக்கிறார்களாம்.
காறி உமிழத் தான் தோன்றுகிறது இந்த கயவர்களின் செயலை நினைத்து.
தேசத்தின் ஒட்டு மொத்த பணத்தில் 87 சதவிகிதத்தை 500 உம் 1000 உம் தான் ஆக்கிரமித்திருக்கிறது.
மீதமுள்ள 13% தான் 1 ரூபாய், 2 ரூபாய், 5, 10, 20, 50, 100 ரூபாய்கள்.
87% பொருளாதாரத்தை குப்பையில் போட சொல்லி விட்டு, மிச்சமிருக்கும் 13 சதவிகிதத்தை வைத்துக் கொண்டு, புதிதாய் கிடைக்கும் 2000 ரூபாய்க்கு சில்லரை மாற்ற முடியுமா?
அதை விட உச்சகட்ட வேடிக்கை, இந்த 2000 ரூபாய் நோட்டுக்களின் அளவு, இப்போது வங்கிகள் செயல்படுத்தும் ஏடி எம்மில் பொருந்தாதாம். அதனால், 2000 ரூபாய் நோட்டுக்கள் பொருந்துப் போகிற அளவிற்கு அனைத்து ஏடி எம்களும் மாற்றியமைக்கப்படுகிறதாம்.
ஆள்வோர் கூமுட்டைகளாக இருந்தால், அதன் பலனை சாமானியர்களான நாம் தான் அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கூறுகெட்டத்தனமாக செயல்படும் ஒரு பிரதமர் இந்த தேசத்தின் அவமான சின்னமாக அல்லவா திகழ்கிறார்? இது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று அப்பட்டமாக தெரியவில்லையா?
கறுப்புப் பணத்தை லட்சக்கணக்கான கோடிகளாக பதுக்கி வைத்திருக்கும் எந்த முட்டாளும், அதை பணமாக பதுக்கி வைக்க மாட்டான். ஒவ்வொரு கறுப்புப் பணமும் வீடாகவும், நிலமாகவும், தோட்டங்களாகவும், வணிக வளாகங்களாகவும் தான் இருக்கின்றன எனும் போது, யாரை ஏமாற்ற இந்த நாடகம்?
இதனால் கறுப்புப் பணம் ஒழியும் என்று மோடி சொல்வது உண்மையென்றால், ஒவ்வொரு வங்கியின் முன்னால் குப்பனும் சுப்பனும் தன்னிடமிருக்கும் 500, 1000 த்தை மாற்றுவதற்காக கால் கடுக்க நிற்கிறானே, அந்த வரிசையில் அம்பானி வந்து நிற்கிறானா? அந்த வரிசையில், அமிதாப் பச்சனோ ஷாருக்கானோ, ரஜினிகாந்தோ நிற்கிறானா?
மக்களைப் பற்றி துளியளவும் கவலை கொள்ளாத சர்வாதிகார போக்கையே மோடியின் பாஜக அரசு ஆரம்பம் முதல் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதுவே போதுமான சான்று..!
என் திட்டத்தை ஒட்டு மொத்த நாட்டு மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று வெட்கமில்லாமல் சொல்கிற மோடிக்கு நாம் பகிரங்க சவாலை முன்வைக்கிறோம்.
பிரதமர் பதவியை மோடி அவர்கள் ராஜினாமா செய்து விட்டு, மத்திய பாஜக அரசை கலைக்கட்டும். எந்த தாமதமுமில்லாமல், அடுத்த 3 நாட்களில் பொதுத் தேர்தலை கொண்டு வருவோம்.
நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா? என்பதை அந்த தேர்தல் முடிவு சொல்லும்..
மோடியே....தயாரா?
|