Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 08
Posted By:Hajas On 10/6/2016 12:35:19 PM

 

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik

Episode 07: சக்திச்சொட்டுச் சிக்கல் (Quantum Entanglement): 

Episode 08: உண்மை 2 (ஒளியின் வேகம்):  

 

ஒளியின் வேகத்தை மிஞ்சிய எந்தவொன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் கிடையாது என்பது தான் ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது வாதம். இந்த வாதம் கூட முற்றிலும் மார்க்கத்துக்கு முரணானது. ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகம் கொண்ட பல அம்சங்கள் இந்தப் பேரண்டத்தில் இருக்கத் தான் செய்கின்றன என்பது தான் இஸ்லாம் கூறும் உண்மை.

ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன என்ற இந்த உண்மையைக் கூட மெய்ப்பிக்கும் விதமாகவே சக்திச்சொட்டுக் கோட்பாட்டின் கருத்துக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆகவே, இங்கும் மார்க்கத்துக்கு நெருக்கமான சரியான விஞ்ஞானமாக சக்திச்சொட்டுக் கோட்பாடுகள் தான் திகழ்கின்றன. பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் இதை விளங்கிக் கொள்ளலாம்:

ஆதாரம்:
பின்னர் இருமுறை (உன்) பார்வையை மீட்டி(வானத்தை)ப் பார்;
(உன்) பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடமே திரும்பும்.
(அல் குர்ஆன் – 67:4)

நாம் வாழும் இந்தப் பூமி சூரிய குடும்பத்தின் ஓர் அங்கம் என்பது நாம் அறிந்த விடயம். பூமியை விடப் பல்லாயிரம் மடங்கு விசாலமானது இந்த சூரிய குடும்பம். இது போன்ற இன்னும் பத்தாயிரம் கோடி சூரிய குடும்பங்களை உள்ளடக்கியது தான் “பால்வீதி” எனும் நமது காலெக்ஸி (Milky way Galaxy).

“பால்வீதி” எனும் நமது காலெக்ஸியைப் போல் இன்னும் இருபதாயிரம் கோடி கலெக்ஸிகள் இந்தப் பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்பது தான் சமகால விஞ்ஞானத்தின் அனுமானம். இதை வைத்து மட்டும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எத்தனை கோடானுகோடி ஒளியாண்டுகள் தூரத்துக்கு இந்தப் பிரபஞ்சம் வியாபித்திருக்கின்றது என்பதை நீங்களே உணரலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சம் மொத்தமும் முதலாவது வானத்துக்கு (அடிவானத்துக்கு) கீழே தான் இருக்கிறது என்று இஸ்லாம் கூறுகிறது. மேலும், இதையும் தாண்டி இன்னும் ஆறு வானங்கள் நமது கற்பனைக்கே எட்டாத தூரத்தில் இருப்பதாக வேறு இஸ்லாம் கூறுகிறது.

அதாவது பல்லாயிரம் கோடி ஒளியாண்டுகள் தூரம் பயணித்துப் பிரபஞ்சத்தின் எல்லையை அடைந்தாலும், அது முதலாவது வானத்தைத் தொட்டதாகக் கூட இருக்காது. அல்லாஹ்வின் சாம்ராஜ்ஜியத்தின் விசாலம் எத்தகையதென்பதை ஒரு முஃமின் புரிந்து கொள்வதற்கு இந்த ஓர் உண்மையே போதுமானதாக இருக்கும்.

ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் இதை இன்னும் கொஞ்சம் இலகுவாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். உதாரணத்துக்கு இன்று நாம் ஓர் அதிவேக வின்கலத்தில் ஏறிப் பிரபஞ்சத்தின் எல்லையை நோக்கி ஒளியின் வேகத்தில் (நொடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில்) பயணிக்க ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். பயணிக்கத் தொடங்கியது முதல், எந்த இடத்திலும் நிறுத்தாமல் நாம் பயனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நமது ஆயுட்காலம் மொத்தமும் அந்த வின்கலத்துக்குள்ளேயே கழியும் வரை பயனித்தாலும், நம் ஆயுட்காலத்துக்குள் பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியாது.

ஒரு வாதத்துக்கு, நாம் தனியாகப் பயணிக்காமல், குடும்பத்தோடு பயணிப்பதாக நினைத்துக் கொள்வோம். பயணம் செய்து கொண்டே நாம் அந்த வின்கலத்துக்கு உள்ளேயே உண்டு, உறங்கி, இனப்பெருக்கமும் செய்து கொண்டே இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கொஞ்ச தூரம் போவதற்குள் நமது ஆயுள் முடிந்து நாம் இறந்து விடுவோம்.

நம்மைத் தொடர்ந்து நமது சந்ததிகள் தலைமுறை தலைமுறையாக இந்தப் பயணத்தை விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால்... ஒரு தலைமுறையல்ல; இரு தலைமுறைகளல்ல; பல கோடி தலைமுறைகளைத் தாண்டிய நமது சந்ததிகள் தாம் இறுதியில் பிரபஞ்சத்தின் எல்லையைச் சென்று அடைவார்கள்.

அப்படியே அவர்கள் எல்லையை அடைந்தாலும், அது முதலாவது வானத்தைத் தொட்டதாகக் கூட ஆகாது. பிறகு அங்கிருந்து முதலாம் வானத்தை நோக்கி இன்னும் எத்தனை கோடி தலைமுறைகளின் தூரம் பயணிக்க வேண்டுமென்பது யாருக்குமே தெரியாது. மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆற்றலின் எல்லையென்பது எவ்வளவு அற்பமானது என்பதை இதன் மூலம் சிந்திப்போர் புரிந்து கொள்வர்.

சுருங்கக் கூறினால், எந்தவொரு மனிதனாலும், என்ன தான் தலையைக் குத்தி நின்றாலும் முதல் வானத்தைப் பார்க்கக் கூட முடியாது. முதல் வானத்தைச் சென்றடையும் அளவுக்கு நமது பார்வைக்குப் போதிய சக்தியோ, வேகமோ கிடையாது. ஏனெனில், நமது பார்வை, மற்றும் கருவிகள் போன்ற அனைத்தின் ஆற்றலுமே ஒளியின் வேகத்துக்கு உட்பட்டவை தாம்; அதைத் தாண்டியவை அல்ல.

நமது ஆயுட்காலத்துக்குள் முதல் வானத்தைப் பார்க்கவோ / அடையவோ வேண்டுமென்றால், அதற்கு ஒளியின் வேகத்தையும், சக்தியையும் விடப் பல மடங்கு அதிக வேகமும், ஆற்றலும் தேவை. இதனால் தான், இந்த அதிநவீன விஞ்ஞான யுகத்தில் கூட, இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையைத் தாண்டிய எதையுமே பார்க்கக் கூட முடியாத அளவுக்கு மனிதன் அற்பமானவனாகவே இருக்கிறான்.

ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றமான ஒரு சூழ்நிலை தான் வானவர்கள், மற்றும் ஜின்கள் போன்ற மறைவான படைப்பினங்களின் பரிமாணத்தில் நிலவுகின்றது. ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகத்தில் பயணம் செய்யும் வல்லமை வானவர்கள், ஜின்கள் போன்ற படைப்பினங்களுக்கு இருக்கின்றது. இதனால் தான், எங்களைப் போலல்லாது இவர்களால் வானத்தின் எல்லையை அடைய முடிகிறது.

இந்தப் பேருண்மையைத் தான் அல்லாஹ் மேற்கண்ட குர்ஆன் வசனத்தில், “உன் பார்வை சிறுமையடைந்து உன்னிடமே திரும்பும்” என்று மனிதனைப் பார்த்துக் கூறிக் காட்டுகிறான்.

இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளும் மறைமுகமான பேருண்மை என்ன?

ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகமும், ஆற்றலும் கொண்ட பல மறைவான அம்சங்கள் இந்த உலகில் இருக்கின்றன என்பது தான் அந்தப் பேருண்மை. குவாண்ட்டம் கோட்பாடு மறைமுகமாக உணர்த்தும் இதே உண்மையைத் தான் இஸ்லாம் கூட உணர்த்துகிறது என்பது கூட இங்கு புரிகிறது. இதன் மூலம், இந்த விஞ்ஞானம் தான் மார்க்கத்துக்கு நெருக்கமான சரியான விஞ்ஞானம் என்பதுவும் மீண்டும் ஒருமுறை இங்கு நிரூபனமாகிறது.

மேலும், ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது சார்பியல் கோட்பாடு போன்ற போலியான நாத்திக விஞ்ஞானத்துக்கும் இதன் மூலம் அல்லாஹ் சாவு மணியடிக்கிறான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மை 3 (ஜோடிக் கட்டமைப்பு):

துகள்களின் ஜோடிக் கட்டமைப்பை விளக்கும் “சக்திச் சொட்டுச் சிக்கல்” (Quantum Entanglement) எனும் கோட்பாட்டுக்கு நெருக்கமாகவே இஸ்லாத்தின் நிலைபாடுகள் கூட இருப்பதைப் பார்க்க முடிகிறது. பின்வரும் குர்ஆன் வசனம் இதை உறுதிப்படுத்துகிறது:

ஆதாரம்:
“நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.” – (51:49)

இங்கு அல்லாஹ் “நீங்கள் சிந்திப்பதற்காக” என்று கூறுகிறான். அதாவது சிந்திப்பவர்களுக்குத் தான் இந்த ஜோடிக் கட்டமைப்பு எவ்வளவு ஆழத்துக்கு அவன் படைப்புகளில் ஊடுறுவியிருக்கிறதென்பது விளங்கும். உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிடுகிறேன்:

தேன் சேகரிக்கச் செல்லும் சில தேனீக்கள், பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டிய தொலைதூரங்களுக்குச் சென்று தேனைச் சேகரித்துக் கொண்டு, கொஞ்சம் கூட வழி தவறாமல் திரும்பவும் தமது கூட்டுக்கு வந்து சேர்கின்றன.

மேலும், கண்டம் விட்டுக் கண்டம் நோக்கிப் பறந்து செல்லும் பல பறவையினங்கள், ஆண்டுதோறும் தவறாமல் ஓரிடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னோர் இடத்துக்கு அச்சுப் பிசகாமல், கொஞ்சம் கூட வழி தவறாமல் வந்து சேரும். அதே போல் திரும்பவும் பழைய இடத்துக்கு வழிதவறாமல் திரும்பிச் செல்லும்.

இவ்வாறான ஜீவராசிகள் இவ்வளவு நுணுக்கமாக எப்படி வழிகளை அறிந்து கொள்கிறது என்பதை சென்ற நூற்றாண்டுகளில் ஆய்வு செய்த பல விஞ்ஞானிகள், இறுதியில் ஓரளவுக்கு உண்மையைக் கண்டுபிடித்தார்கள். அதாவது இந்தப் பூமியின் மின்காந்தப் புலனை (Electromagnetic field) அடிப்படையாகக் கொண்டு தான் இவ்வாறான ஜீவராசிகள் தமது பயணப் பாதைகளைத் துல்லியமாக வகுத்துக் கொள்கின்றன என்ற உண்மை தான் அது.

இருந்தாலும், இவ்வளவையும் கண்டறிந்த அன்றைய விஞ்ஞானத்தால், அது எப்படி? என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டறிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், சமகாலத்தில் வாழக்கூடிய சில விஞ்ஞானிகள், குவாண்ட்டம் கோட்பாடுகளின் அடிப்படையில் சில பறவையினங்களை ஆய்வு செய்த போது தான் உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்து வியந்து போனார்கள். இவ்வாறான ஜீவராசிகளின் புலன்கள் இயங்குவது “சக்திச்சொட்டுச் சிக்கல்” எனும் ஜோடிக் கட்டமைப்புத் தத்துவத்தின் அடிப்படையில் தான் என்ற உண்மை தான் அது.

அதாவது, பறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அவற்றின் பார்வைப் புலனுக்கும் பூமியின் மின்காந்தப் புலத்துக்கும் இடையில் தொடர்ச்சியான சக்திச்சொட்டுச் சிக்கல் தொடர்பு நிலவிக் கொண்டேயிருக்கின்றது. இந்தச் சக்திச்சொட்டுச் சிக்கல் உறவு மூலமே ஒவ்வொரு கணப் பொழுதிலும் தான் பயணிக்கும் பாதை சரியானதா? தவறானதா என்பதை அவற்றால் துல்லியமாகக் கண்டறிந்து கொள்ள முடிகிறது.

இதன் விளைவாக எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கூட்டை விட்டுச் சென்றாலும், சரியான பயணப் பாதையைத் துல்லியமாகக் கண்டறிந்து, வழி தவறாமல் இவ்வாறான பறவைகள் வீடு வந்து சேர்கின்றன என்பது தான் இதுவரை மனிதன் புரிந்து கொள்ளத் தவறிய உண்மை.

இதே போல், திருடனின் சட்டையை ஒரு தரம் முகர்ந்து பார்த்து விட்டு, அவன் எவ்வளவு தூரத்தில் ஒளிந்திருந்தாலும், அவனைச் சரியாக மோப்பம் பிடித்து, போலீஸ் நாய்கள் அடையாளம் கண்டு கொள்வது போன்ற செயற்பாடுகள் கூட இவ்வாறான சக்திச்சொட்டுக் சிக்கல் பொறிமுறை மூலம் தான் நடைபெறுகிறது.

இந்த உண்மையைக் கூட சக்திச்சொட்டுக் கோட்பாடுகள் தாம் சரியாக அடையாளம் கண்டுகொண்டன. மேற்குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கூறும் கருத்துக்களுக்கு முற்றிலும் உடன்பட்ட அமைப்பில் தான் குவாண்ட்டம் பொறியியலின் இந்தக் கோட்பாடு கூட இருக்கிறது என்பது இங்கு நமக்குப் புலப்படுகிறது.

உண்மை 4 (உயிருள்ள பிரபஞ்சம்):

குவாண்ட்டம் கோட்பாடுகளின் பிரகாரம் உணர்த்தப்படும் இன்னொரு மறைமுகமான உண்மை தான், இந்தப் பிரபஞ்சம் என்பது உயிரற்ற, உணர்வற்ற வெறும் சடப்பொருட்களின் கூட்டுச் சேர்க்கையால் ஆன ஓர் அம்சம் அல்லவென்பது.

அதாவது இப்பிரபஞ்சத்திலிருக்கும் ஒவ்வொரு துகளுக்குள்ளும் உயிரோட்டமான ஏதோவொரு சக்தி வியாபித்திருக்கிறது. நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் போன்றோருடைய கருத்துக்கள் கூறுவது போல், இந்தப் பிரபஞ்சத்தில் உயிரற்ற “சடப்பொருட்கள்” என்று எதுவுமே இல்லை.

ஒவ்வொரு துகளுக்கும் அதன் மட்டத்திற்கு ஏற்ப ஏதோவொரு சிந்திக்கும் திறன் இருக்கின்றது. இதனால் தான் “சக்திச்சொட்டுச் சிக்கல்” எனும் நிகழ்வே சாத்தியப்படுகிறது. அதாவது, ஒரு ஜோடித் துகள்களில், ஒரு துகளுக்கு ஒரு மாற்றம் நிகழும் போது அதன் ஜோடித் துகள் அதைப் பிரதிபலிக்கும் விதமாக அதுவாகவே எதிர்மாற்றத்தைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கிறது. உயிரோட்டமுள்ள ஏதோவொரு சிந்திக்கும் திறன் இல்லாமல் இவ்வாறான நிகழ்வுகளெல்லாம் ஒருபோதும் சாத்தியப்படாது.

மேலும், குவாண்டம் பொறியியலின் “நிச்சயமற்ற தன்மை” எனும் சித்தாந்தம் கூட இந்த உண்மையைத் தான் காட்டுகிறது. அதாவது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு சக்திச்சொட்டும், அதை நிர்வகிக்கும் ஒரு பரம்பொருளிடம் அனுமதி கேட்டுவிட்டு, அனுமதி கிடைத்த பிறகே அது அடைய வேண்டிய நிலையை அடைகிறது எனும் உள்ளார்ந்த அர்த்தமே இதில் கூட மேலோங்கி நிற்கிறது.

குவாண்ட்டம் கோட்பாடுகளின் இந்த நிலைபாடுகளை சரிகாணும் அடிப்படையில் தான் மார்க்க மூலாதாரங்கள் கூட அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பின்வரும் குர்ஆன் வசனம் இதை அழகாக உறுதிப்படுத்துகிறது:

ஆதாரம்:
“வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன.
அவன் அரசன்; தூயவன்; மிகைத்தவன்; ஞானமிக்கவன்.” - (62:1)

இந்த வசனம் மட்டுமல்ல; இன்னும் ஏராளமான குர்ஆன், மற்றும் ஹதீஸ் வசனங்கள் இந்த உண்மையை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன. பொதுவாக இஸ்லாம் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் உயிருள்ளதாகவே குறிப்பிடுகின்றது. உயிரற்ற “சடப்பொருட்களாக” எதையுமே இஸ்லாம் குறிப்பிடவில்லை.

வானங்கள், மற்றும் பூமி ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படுவதாகவும், ஒரு சமயம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இந்தப் பூமியானது, ஒரு கெட்ட மனிதனுடைய சடலத்தை உள்வாங்க மறுத்ததாகவும், ஒரு சமயம் திடீரென்று அதிரத் தொடங்கிய உஹது மலை கூட, நபி (ஸல்) அவர்கள் “உன் மேல் ஒரு நபி இருக்கிறேன்; அசையாதே” என்று கட்டளை பிறப்பித்த உடனேயே, தான் அதிர்வதை நிறுத்திக் கொண்டதாகவும், கல் மண் உட்பட அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு செவிசாய்ப்பதாகவும் ஏராளமான சான்றுகள் குர்ஆன், மற்றும் ஹதீஸ் பதிவுகளில் காணக்கிடைக்கின்றன.

இவை அனைத்தும் உணர்த்தும் உண்மை என்ன?

நியூட்டன், மற்றும் ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது சித்தாந்தகள் கூறுவது போல், இந்தப் பிரபஞ்சத்தில் உயிரற்ற சடப்பொருள் (சடம் + பொருள்) என்று எதுவுமே இல்லை. மாறாக, உயிரோட்டமான ஒரு பிரபஞ்சமாகவே அல்லாஹ் இந்த அகிலத்தைப் படைத்திருக்கிறான். இந்தப் பேருண்மையைத் தான் மேற்கூறப்பட்ட மார்க்க ஆதாரங்கள் மறுக்க முடியாதவாறு பறைசாற்றுகின்றன.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

 Episode 09: உண்மை 5 (சக்தியாலான பிரபஞ்சம்):  




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..