சென்னையில் எல்லா பொருட்களும் விலை அதிகமாக இருக்கும் என்பது பொதுவான மனநிலை. உண்மைதான். மக்கள் தொகை அதிகரிப்பையும், பொருளாதார சூழலின் நிலைமையையும் கருத்தில் கொண்டு, விலை நிர்ணயிக்கப்படுகின்றது. இப்படிப்பட்டவர்களுக்கு சென்னையின் முக்கியமான ஒரு உணவுக் களஞ்சியமாக திகழ்வது ரோட்டோர தட்டுக் கடைகள்.
இட்லியில் இருந்து தொடங்கி, சப்பாத்தி, ஆம்லெட், தோசை என்று இயன்ற அளவு மக்களுக்கு செய்து கொடுக்கின்றனர் இந்தக் கடைவாசிகள். காலையில் ஏழு மணிக்கு துவங்கி இரவு ஒரு மணி வரை கூட செயல்படும் இந்த கடைகளில் ஐ.டி. கம்பெனி ஊழியர்கள் முதல் அடித்தட்டு தொழிலாளர்கள் வரை சாப்பிடுகின்றனர். குறைவான விலையில் வயிறு நிறையும் அளவுக்கு சாப்பிட முடியும் என்பதால் தட்டுக் கடைகளில் எப்பொழுதும் கூட்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் நின்று சாப்பிட்டு விட்டுத்தான் செல்கின்றனர் மக்கள். இந்தக் கடைகளுக்கான முதலீடு குறைவுதான் என்றாலும், கடையை நடத்துவது கஷ்டமான ஒன்றுதான்.
தட்டுக்கடையில் பல வருடங்களாக சாப்பிடுவதாக கூறிய ஒருவரிடம் பேசியபோது, “நான் இந்தப் பகுதியில் கடந்த மூன்று வருடமாக வேலை செய்து வருகின்றேன். என்னதான் பணம் சம்பாதித்தாலும் அதை தக்க வைத்துக் கொள்ள, இதுபோன்ற உணவகங்களே நமக்கு பேருதவியாக இருக்கின்றன. போதிய வருமானமில்லாதவர்களுக்கு இந்தமாதிரி கடைகள்தான் மாதா மாதம் சொந்த ஊருக்கு பணம் அனுப்ப உதவியாக இருக்கின்றது.
இல்லையென்றால், சம்பாதிப்பதில் முக்கால் பங்கு உணவுக்கே போய்விடும். குறைவான விலையில், நிறைவாக சாப்பிட முடிகின்றது. நான் அலுவலகத்திற்கு டிபன் பாக்ஸில் வைத்து வாங்கிச் செல்லக்கூடிய நேரங்களும் இருக்கின்றன. அதேசமயம் இவற்றில் தரமான கடைகள் எது என்பதை பார்த்து நாம் உண்ணவேண்டும். சென்னையின் வரப்பிரசாதம் தட்டுக்கடைகள்” என்றார் மகிழ்ச்சியான குரலில்.
ஒரு கல்லூரி மாணவனிடம் பேசும்பொழுது, “சென்னையில் இருக்கக்கூடிய பெரிய உணவகங்களுக்கு மத்தியில், இந்தக் தட்டுக் கடைகள் என்னைப் போன்ற மாணவர்களுக்கு, குறைந்த விலையில் சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மற்ற கடைகளில் விலை அதிகமாக இருப்பதால், நான் தட்டுக் கடைகளில் சென்று சாப்பிடுகிறேன். எங்களுக்கு வீட்டில் இருந்து வரக்கூடிய பணம் பெரும்பாலும் உணவுக்குத்தான் செல்கின்றது. தட்டுக் கடைகளில் சாப்பிடும்பொழுது, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடிகின்றது" என்றார்.
இதுபோன்று, தட்டுக் கடைகளைப்பற்றிய நல்ல அபிப்ராயங்கள் இருக்கின்ற அதே வேளையில் நமக்கான கடமை, இவைகளில் தரமான தட்டுக் கடைகளை அடையாளப்படுத்தி உண்பது.
தட்டுக்கடை நடத்தக்கூடியவர்கள் பல்வேறு மனிதர்களை தினந்தோறும் சந்திக்கின்றனர். பல்வேறு நெருக்கடிகளுக்கும் உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வந்து பிரச்னை செய்யக் கூடியவர்களும் இருக்கின்றனர். சாப்பிட்டுவிட்டு கடன் வைத்து செல்பவர்களும் இருக்கின்றனர். இதையெல்லாம், எதிர்கொண்டுதான் அவர்கள் தங்களுடைய கடைகளை நடத்துகின்றனர்.
- சலீம்