🗣 " நாமும் நமது பாரம்பரிய சொல் வழக்குகளும்!
மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமானது மொழிகள்.
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது, ஒரு இனத்தின் வளர்ச்சி. ஒரு மொழியின் ஆதிக்கம் என்பது, ஒரு இனத்தின் ஆதிக்கம்.
இன்று உலகின் எல்லா பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆங்கில மொழியின் வளர்ச்சி, அதைக் கற்றுக் கொள்வது மட்டுமே முழுமையான அறிவின் அடையாளம் என்ற ஓர் மாயைத் தோற்றத்தை அனைவரிடத்திலும் ஏற்ப்படுத்திவிட்டது.
இந்த ஆங்கில மோகத்தின் ஆதிக்கம், பல சமூகங்கள் மறும் பகுதிகளின் பாரம்பரியமிக்க கலாச்சார மரபுச் சொற்களை மடியச் செய்துவிட்டது.
சென்னைத் தமிழும், நெல்லைத் தமிழும் கூட தன் தனித்துவத்தை இழந்து வருகிறது.
இந்த வரிசையில் ஏர்வாடி முஸ்லிம்களின் பிரத்தியேக அடையாளச் சொறகள் பலதும் புழக்கத்தில் இருந்து மறைந்து வருவது நிதர்சனமாகும்.
ஆங்கில வழிக் கல்வியைக் கற்று வந்த நமது ஊரின் நவீன மம்மிகள் பலர் நமது பண்பாட்டுச் சொற்களை தங்கள் குழந்தைகளின் நாவுகள் உச்சரிப்பதை கவுரவக் குறைவாகவும், அநாகரீகமாகவும் கருதுகிறார்கள்.
#எல_மாடன் பயாஸு இங்க வாயம்ல" -என்று தன் நண்பணை அழைக்கும் மகனைப் பார்த்து, இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று கண்டித்த மனைவியிடம், ஏன் இதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேட்ட போது.... முகத்தைச் சுளித்தவாறு... "ச்ச்சீ இது என்ன நல்லாவா இருக்கு" என அவள் சொன்ன பதிலில்.... நம் பாரம்பரிய மரபுச் சொல்வழக்கின் நிகழ்கால நிலையை உணர முடிந்தது.
நமது பாரம்பரிய கலாச்சார மரபுகளை எல்லாம் நம் வாயாலேயே அநாகரீகம் என்று சொல்ல வைத்து விட்டது ஆங்கில மோகம்.
உடன் பிறந்த சகோதரனை #காக்கா என சொல்லாதே! அண்ணன் என்று சொல் எனவும், ராத்தா அல்லது தாத்தா என்று அழைக்கப்படும் உடன் பிறந்த சகோதரியை அக்கா என்று அழை எனவும் நிர்பந்தித்து தங்கள் பிள்ளைகளின் இயல்பான மரபுச் சொற்களை மாற்றியமைக்கும் பெற்றோர்கள் அதிகரித்து விட்டார்கள்.
நெல்லை மாவட்டத்தின் ஓர் அங்கமான நமது ஊரின் பேச்சு வழக்கு நெல்லைத் தமிழின் முழுச் சாயலில் இருந்தாலும், நமக்கு மட்டுமே உரித்தான பிரத்தியேக சொல்லாடல்கள் பல புழக்கத்தில் இருக்கிறது.
ஏர்வாடியில் கூட பகுதி ரீதியான சில மாறுபட்ட சொல்லாடல்களை காணமுடியும்.
#அவன்வொ_வந்தான்வோ_சொன்னான்வொ_செஞ்ஞான்வோ_போயிட்டான்வோ என்று சொன்னால் அது லெப்பைவளவு பகுதி.
இதையே....
#அவன்ளு_வந்தான்ளு_சொன்னான்ளு_செஞ்ஞான்ளு_போயிட்டான்ளு என்று சொன்னால் அது மற்ற பகுதிகள்...
வாப்பா, ம்மா, அப்பா, கன்னா அல்லது கன்மா, காக்கா, தாத்தா அல்லது ராத்தா, சாச்சி, மச்சி, வாப்மா, வாப்ச்சா, மூமா, ம்மம்மா போன்ற உறவுகளைக் குறிக்கும் சொற்களும்,
கோபத்தின் போது எதிராளியை நோக்கி பயன்படுத்திய மாடன், பேயன், மூத்தவல, மாடாகுழி மாடன், வெள்ளக் கோழி போன்ற அறுவறுப்புக்கு அப்பாற்பட்ட சொல்லாடல்களும் கால மாற்றத்தால் மறைந்து கொண்டே வருகிறது.
பசியாற, ஆனம், பச்சடி, புளியானம், தெருவூடு, கூடம், அங்கனம், அறவூடு, அடுப்படி, மேட, சாரம், துண்டு, கைத்துண்டு போன்ற உணவு, உடை, உறைவிடம் போன்ற விஷயங்களில் நாம் பயன்படுத்தி வந்த மரபுச் சொற்கள் இன்னும் சில வருடங்களில் முற்றிலும் கூட மறைந்து போகலாம்.
எவ்வளவு படித்தாலும், எவ்வளவு உயர்ந்தாலும், உலகின் எந்த மூலை முடுக்குளில் வசித்தாலும், எப்பேற்பட்ட கலாச்சாரத்தோடு கலந்து வாழ்ந்தாலும் தங்கள் தனிப்பட்ட கலாச்சார மரபுச் சொற்களை மறக்காத, விட்டுக் கொடுக்காத காயல்பட்டிணம், கீழக்கரை போன்ற ஊர்வாழ் முஸ்லிம்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.
மொழி ஒன்றாக இருப்பினும் சொல் வழக்குகள் மாறுபட்டிருப்பது இறைவன் ஏற்படுத்திய ஓர் அழகிய அத்தாட்சி.
சொல்வழக்குகள் நமது அடையாளத்தின் முக்கியமான ஓர் அங்கம்.
அருள்மறைக் குர்ஆன் கூட ஏழு விதமான அரபுச் சொல் வழக்கில் அருளப்பட்டுள்ளது என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதில் நமக்கு பல படிப்பினைகள் உண்டு.
நமது பாரம்பரிய சொல்வழக்குகளில் நமது பிளைகள் பேசட்டும். அது நமக்கான இழிவல்ல. நம் அடையாளம். நம் தனித்துவம்.
நம் பாரம்பரியக் கலாச்சாரம் பேணி... நம் தனித்துவத்தையும், அடையாளத்தையும் தக்க வைப்போம்.
இன்ஷாஅல்லாஹ்! தொடரும்.
Salahudeen refai |