👉 நமது கலாச்சாரமே நம் அடையாளம்! 👉 நமது அடையாளமே நம் வரலாறு!
"பாதுகாக்கப்பட வேண்டிய நம் கலாச்சாரப் பண்பாட்டுப் பழக்க வழக்க மரபுகள்"
மனித இனத்தின் உருவாக்கத்தை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே தோற்றுவித்த இறைவன், மனிதர்களின் அடையாளத்திற்காக வேண்டி அவர்களை பல கோத்திரங்களாகவும், கிளைகளாவும் வகைப் பிரித்துள்ளான்.
மனிதர்ககிடையே தோன்றும் இனம், நிறம், மொழி போன்ற வேறுபாடுகள் வெறும் அடையாளங்கள் தானே தவிர, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் அல்ல.
உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்பதெல்லாம் இறையச்சம் எனும் அளவுகோலைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
இதுவே இறை வேதமான திருக் குர்ஆனின் தீர்க்கமான பிரகடனம்.
⏩ "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர், உங்களைப் பல கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் இறையச்சடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன். (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (49:13)
உலகம் முழுவதும் பரந்து விரிந்துக் கிடக்கும் மனித இனம், நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் பகுதிக்கு பகுதி பல்வேறு மாறுபட்ட தங்கள் பிரத்தியோகக் கலாச்சாரப் பண்பாட்டு மரபுகளைக் கொண்டே அடையாளப்படுத்தப்படுகிறது.
உணவு, உடை, சொல் வழக்கு போன்றவற்றில் இஸ்லாமிய அடிப்படைக்கு முரணில்லாத எந்த ஒரு கலாச்சாரப் பெறுமானம் கொண்டப் பண்பாட்டு மரபுகளையும் இஸ்லாம் தடை செய்யவில்லை.
இந்த வகையில்.... நமது #நெல்லை_ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சாரப் பண்பாட்டு மரபுகளைக் குறித்து அலசுகிறது இச்சிறியத் தொடர்.
நமது தனித்துவமிக்க கலாச்சாரப் பண்பாடுகளே நமது அடையாளங்கள். காலச் சுழற்ச்சியிலும், நவீனம், நாகரீகம் என்ற பெயரிலும் சிறுகச் சிறுக மறைந்து வரும் நமது கலாச்சார மரபுகளின் வீழ்ச்சி என்பது நமது பிரத்தியோக அடையாளம் மற்றும் வரலாற்றின் வீழ்ச்சியாகும். இது வராற்று ரீதியான உண்மையும் கூட.
இன்றைய இளம் தலைமுறையில் பலரிடம் நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்கள், சொல் வழக்குகள், உறவின் முறைகள், விளையாட்டு மற்றும் வீர தீரக் கலைகள், கட்டுப்பாடுகள் போன்றவைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவது மறுக்க முடிதாதது.
அவற்றைப் பற்றிய ஓர் நினைவூட்டலுக்கான சிறு முயற்ச்சியே இது.
எனது சிந்தனையில், நினைவில் உள்ளவற்றையே இத்தொடரில் பதிவிடுகிறேன்.
எனக்குத் தெரியாதவைகள் அல்லது மறந்தவைகள் ஏராளம் இருக்கலாம். அவற்றைத் தெரிந்தவர்கள் உரிமையோடு எடுத்துரைக்கலாம்.
ஒரு பகுதி அல்லது ஒரு சமூக கலாச்சாரத்தின் முதல் அடையாளம்: மொழியும் சொல் வழக்கும் தான் ஏர்வாடி முஸ்லிம்களின் சொல் வழக்குகளோடு இதன் அடுத்த தொடரைத் தொடர்வோம்.
இன்ஷாஅல்லாஹ்...! |