பாகம் 22
Herakleopolis-ன் கதையை முடிப்பதற்கு முன்னாடி அவன் தாக்கியது வடக்கிலிருந்த Memphis-யை. Herakleopolis படை உதவிக்காக மெம்பிசை அணுகிவிடக் கூடாது என்பதற்காக. இதை முடித்துவிட்டு நேராக அவன் போய் நின்றது Herakleopolis-ல். அவன் திட்டமிட்டிருந்த இறுதி அடி Herakleopolis நகரின் தலையில் இறங்கியது. Kheti அரச குடும்ப உறுப்பினர்கள் மேற்கிலும் கிழக்கிலும் இருந்த பாலைவனத்திற்கு ஓடியும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. Kheti அரச குடும்பத்தில் ஒருவர் மிச்சமில்லாமல் மறு உலகத்திற்கு அனுப்பப்பட்டார்கள். என்ன அதற்கு அவர்களுக்கு பிரமிடு மற்றும் மம்மி உடல் உதவி செய்யாமல் மென்டோதெப் படையினரின் ஆயுதங்களே உதவி செய்தன.
மென்டோதெப்பை எதிர்க்க வேறு எந்த மாநில அரசர்களுக்கும் பலம் கிடையாது என்பதால் அவனுக்கு அடங்கிப்போய்விட்டார்கள். மென்டோதெப் கி.மு. 2010-ல் தன்னை எகிப்தின் பாரோவாக அறிவித்தான். தனக்கான பாரோனிக் பெயராக Netjeri-hedjet என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டான். ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கழித்து எகிப்திய மண்ணில் மீண்டும் பாரோ சகாப்தம் தொடங்கியது. முதல் பாரோ செய்த அதே காரியத்தை சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இரண்டாம் முறையாக மென்டோதெப் செய்தான். அதனால் இவனை reunifier என்று குறிப்பிடுகிறார்கள். இவன் காலத்திலிருந்தே எகிப்தின் Middle Kingdom (கி.மு. 2010 – 1630) தொடங்குகிறது. பதினொராவது வம்சத்தின் இடைக் காலத்தையும் தொடங்கிவைத்தவன் இவனே.
இவன் காலத்திற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் பிரமிடு கலையும் இலக்கியும் தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டிருந்தது. எல்லாம் திறமையில்லாத பாரோக்களின் கைவண்ணம்தான். இந்த காலகட்டங்களிலேயே மம்மியை வைக்கும் sarcophagus-களின் மேல் மறு வாழ்விற்கான பாடல்களும் மந்திரங்களும் எழுதப்படும் வழக்கம் தோன்றியது. காரணம் பிரமிடுகள் கட்ட முடியாத காரணத்தால் பிரமிடுகளின் சுவற்றிலும் கல்லறை கோயில்களின் சுவற்றிலும் எழுதப்பட வேண்டிய மந்திரங்கள் சவப்பெட்டிகளின் (sarcophagus) வெளிப்பக்கத்தில் எழுதும்படியாகிப்போனது. இந்த காலகட்டங்களிலேயே சவப் பெட்டி வடக்குத் தெற்காக வைக்கப்பட்டு சவப் பெட்டிக்குள் வைக்கப்படும் மம்மியின் முகம் கிழக்கு திசையைப் பார்க்கும்படி திருப்பிவிடும் வழக்கமும் தோன்றியது. காரணம் எகிப்தியர்கள் சூரிய உதயம் பூமிக்கு உயிரை கொண்டுவருகிறது என்று நம்பியதால் இறந்தவரின் மம்மி சவப் பெட்டிக்குள் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை பார்ப்பதின் மூலம் உயிர்தெழும் (resurrection) என்று நம்பினார்கள். அதற்கு வசதியாக சவப் பெட்டியின் கிழக்கு பக்கத்தில் இரண்டு கண்களை வரைந்தும் வைக்கத் தொடங்கினார்கள். அந்த கண்களின் வழியாக மம்மி சூரிய உதயத்தை பார்க்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
(புகைப்படத்திலிருப்பது விவசாய தொழிலை சித்தரிக்கும் பிரமிடு ஒவியம். 4500 வருடங்களுக்கு முற்பட்டது)
பிரமிடுகளின் சுவற்றிலும் கல்லறை கோயில்களின் சுவற்றிலும் விவசாயம் செய்வது, மீன் பிடிப்பது, உணவு சமைப்பது, காய்கறி நறுக்குவது, பழங்களை பறிப்பது, கால்நடைகளை வளர்ப்பதுப் போன்ற ஓவியங்களை மிகப் பழங்காலம் தொட்டே எகிப்தியர்கள் வரைந்து வைப்பது வழக்கம். விவசாயத்தின் மூலமும், மீன் பிடிப்பதன் மூலமும் கால்நடைகளை வளர்ப்பதன் மூலமும் கிடைக்கும் உணவுகள் இந்த ஓவியங்களின் வழியாக சவப் பெட்டிக்குள் இருக்கும் மம்மிக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுத் தேவைகளை நிறைவேற்றும் என்பது அவர்களின் நம்பிக்கை. பிரமிடுகளே இல்லை பிறகு எங்கிருந்து இந்த ஓவியங்களை வரைவது. திறமையான ஓவியர்கள் வேலை இல்லாத காரணத்தால் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டதால் இந்த காலகட்டத்தில் கல்லறைகளில் இத்தகைய ஓவியங்களை வரைய ஆட்கள் கிடைப்பது அரிதிலும் அரிதாகிப்போனது.
இந்த சங்கடத்தை சரிக்கட்ட இந்த காலகட்ட எகிப்தியர்கள் செய்த காரியம் இன்றைக்கு நமக்கு மிகச் சிறந்த காலக் கண்ணாடியாக பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. விவசாயம், மீன் பிடிக்கும், கால்நடை வளர்க்கும், உணவுத் தயாரிக்கும் பொம்மைகளை செய்து கல்லறைகளில் வைத்துவிட்டார்கள். இந்த பொம்மைகளிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் விலைமதிப்பில்லாதவைகள். அன்றைய மனிதர்களின் உடை அமைப்பு, விவசாய கருவிகள், மீன் படி கருவிகள், உணவுத் தயாரிப்பு பொருட்களின் அமைப்புகள், படகுகளின் அமைப்புகள் என்று இவைகளிலிருந்து நாம் பெறும் தகவல்களை அடுக்கிக்கொண்டேப் போகலாம்.
எகிப்தின் கலை மற்றும் இலக்கிய சிறப்புகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்தான் மென்டோதெப். பிரமிடுகள் மீண்டும் அதன் பழைய பிரம்மாண்டத்தை பெறத் தொடங்கின. நாம் இதுவரை மஸ்டபாக்களின் தோற்றத்தைப் பார்த்துவிட்டோம் ஆனால் பிரமிடுகளின் பிறப்பை பார்க்கவில்லைதானே. பிரமிடை முதன் முதலில் கட்டியப் பாரோ யார்? இதற்கான பதிலை நாம் பார்த்திருக்கிறோம் அது பாரோ Djoser. இது நடந்தது மூன்றாம் வம்சத்தின் தொடக்க காலத்தில். அதாவது Early Dynastic Period காலகட்டத்தில் கி.மு. 2650-களில்.
அடுத்த தொடரிலும்......
பாகம் 23
எகிப்தின் முதல் பிரமிடுக் குறித்து தெரிந்துக்கொள்ள பாரோ மென்டோதெப் காலத்திலிருந்து 600 ஆண்டுகள் முன்னோக்கி செல்லவேண்டும். வாருங்கள் The Land of the Dead என்று அழைக்கப்படும் எகிப்தின் மேற்கு கரை பாலைவனம் வழியாக பொடி நடையாக நடந்து எகிப்தின் முதல் பிரமிடை தேடிச் சொல்வோம். நாம் போய் சேரவேண்டிய இடத்தின் பெயர் Saqqara. இந்த இடம் எகிப்தின் வடக்குப் பகுதியில் இருக்கிறது அதாவது Lower Egypt-ல். மென்டோதெப்-க்கு விடை கொடுத்துவிடுவோம். அவன் அவனுடைய கல்லறை கோயிலுக்கு போக வழி விட்டுவிடுங்கள். Saqqara-விற்கான பயண தூரம் கொஞ்சம் அதிகம்தான் இருந்தாலும் என்ன. வழித் துணைக்கு நம்மிடம் எகிப்திய சுவாரசிய கதைகளுக்கு பஞ்சமா என்ன!
முதல் பாரோ நார்மர் காலத்திற்கு முன்பிலிருந்தே எகிப்தின் Upper Egypt பகுதியில் இருந்த Abdju பாலைவனப் பகுதி அரசர்களின் necropolis-ஆக இருந்திருக்கிறது. Necropolis என்றால் மிகப் பெரிய கல்லறைத் தோட்டம் என்றுப் பொருள். பழங்கால எகிப்திய அரசர்கள் தங்களின் மஸ்டபாக்கள் இந்த இடத்திலேயே கட்டப்படவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த இடத்திற்கு ஒரு புனித தன்மை வந்து ஒட்டிக்கொண்டது. இந்த விருப்பத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. நார்மரும் தன்னக்கான மஸ்டபாவையும் கல்லறைக் கோயிலையும் இந்த இடத்திலேயேக் கட்டிக்கொண்டான். இதை அவன் பெருமையாகவும் கருதியிருக்கிறான்.
அவனுக்குப் பின் வந்த ஏழு பாரோக்களும் தங்களின் மஸ்டபாக்களை இந்த நிலத்திலேயே கட்டிக்கொண்டார்கள். ஏறத்தாழ 1000 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த பாரம்பரியத்திற்கு முடிவு கட்டப்பட்டது இரண்டாம் வம்சத்தின் (Second Dynasty – Early Dynastic Period) ஆட்சி கால முடிவில். இந்த முடிவுக்கட்டலுக்குப் பிறகே மூன்றாம் வம்சத்தின் (Third Dynasty) காலக் கட்டம் தொடங்குகிறது. இதை செய்தவன் பாரோ Hetepsekhemwy, மூன்றாம் வம்சத்தின் முதல் பாரோ. இது நடைப்பெற்றது கி.மு. 2750-கள் வாக்கில். Abdju-வில் நிலப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட கடைசி பாரோ இவனுடைய தந்தை பாரோ Qaa.
பாரோ Hetepsekhemwy தனக்கான மஸ்டபாவையும் கல்லறைக் கோயிலையும் கட்டத் தேர்ந்தெடுத்த நிலம் Saqqara. பொதுவாக பழங்கால எகிப்தியர்கள் பாரம்பரியத்தை மீறி நடக்க கூடியவர்கள் கிடையாது. பழம் பாரம்பரியத்தை அப்படியே பின் தொடர்வதை தங்களின் பெருமைகளில் ஒன்றாக கருதக் கூடியவர்கள். அப்படியிருக்கையில் என்ன காரணத்திற்காக பாரம்பரியத்தை மீறும் இந்த முடிவை பாரோ Hetepsekhemwy எடுத்தான் என்பதற்கான எழுத்துப் பூர்வ ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆராய்ச்சியாளர்கள் அரசியல் காரணங்களுக்காக அவன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். Saqqara-வில் கட்டப்பட்ட முதல் மஸ்டபா அனேகமாக இவனுடையதாகத்தான் இருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.
(புகைப்படத்திலிருப்பது பாரோ Hetepsekhemwy மஸ்டபாவின் முகப்பு. இன்றையிலிருந்து 4750 வருடங்களுக்கு முற்பட்டது)
தன்னுடைய மஸ்டபாவிற்கான ஒரு புதிய இடத்தை தேர்ந்தெடுத்து புதுமை செய்ததைதுப்போல மஸ்டபா கட்டிக் கலையிலும் பல புதுமையான மாறுதல்களை அறிமுகப்படுத்திய முதல் பாரோவும் இவனே. மஸ்டபாக்களின் கீழே இருக்கும் கல்லறை அறைகளை (burial champers) சுட்ட செம்மன் செங்கற்களால் கட்டாமல் பாறைகளில் செதுக்கி அதற்கு மேல் சுட்ட செங்கற்களைக் கொண்ட மஸ்டபாவை கட்டியெழுப்பினார்கள் இவன் காலத்திய கட்டிட வல்லுனர்கள். அதேப் போல கல்லறை அறைகளின் அமைப்பிலும் புதுமைகளை நுழைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு வரை கல்லறை அறைகள் என்பது இப்படித்தான் இருக்கும். ஒரு பெரிய அறை அதில் பாரோவின் சவப்பெட்டி (sarcophagus) வைக்கப்படும். அதை சுற்றிலும் சிறிய சிறிய அறைகள் கட்டப்படும் அவைகளின் உணவுப் பொருட்களும் மற்ற ஆடம்பரப் பொருட்களும் வைக்கப்படும்.
இந்த அமைப்பை கைவிட்டுவிட்டு கல்லறை அறையை கிட்டத்தட்ட அரண்மனை அறைகள் போன்ற அமைப்பிலேயே பாறையில் குடைந்துவிட்டார்கள் அவன் காலத்திய வல்லுனர்கள். கல்லறை அறை என்பது பாரோவின் மம்மிக்கான சாப்பிடும் குடிக்கும் அறையாக மட்டும் இருப்பதில் Hetepsekhemwy விருப்பம் இல்லை. தான் வாழும் அரண்மனைப் போன்றே தன்னுடைய மம்மியின் கல்லறை அறைகளும் இருக்கவேண்டும் என்று பெரிதாக விரும்பினான். அவன் விருப்பதை செயல்படுத்திக்காட்டினார்கள் அவன் காலத்திய கட்டிடக் கலைஞர்கள். இவனுக்கு அடுத்த வந்த பாரோக்களும் இதே கட்டிடக் கலையை தங்களுடைய மஸ்டபாக்களிலும் தொடர்ந்தார்கள்.
இதோ Saqqara வந்துவிட்டது நண்பர்களே. பயணக் கலைப்பேத் தெரியாமல் வந்து சேர்ந்துவிட்டோம் பாருங்கள். சரி சரி வாருங்கள் பாரோக்களின் ஆயிரமாயிரம் ஆண்டுகாலா நித்திரையை கலைத்துவிடாமல் இன்றைய பிரமிடுகளின் தந்தையாக கருதப்படும் அந்த முதல் பிரமிடைத் தேடிச் செல்வோம்.
அடுத்த தொடரிலும்......