பாகம் 13
இந்த மூன்று நகரங்களுக்கும் இடையில் அதிகார சண்டைகள் தொடர்ந்து நடந்திருக்கிறது. இது பல நூறு ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறது. இத்தகைய சண்டையில் ஈடுபட்ட அரசர்கள் குறித்தும் இதில் எந்த நகரத்தின் கை ஓங்கியிருந்தது என்பதைக் குறித்தம் எழுத்து ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவைகள் நிச்சயம் எதிர்காலத் தொல் பொருள் ஆராய்ச்சியில் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் Nekhen நகரப் பகுதியில் நடைப்பெற்ற தொல் பொருள் ஆய்வின் போது ஆராய்ச்சியாளர்கள் கல்லால் செதுக்கப்பட்ட பட்டையம் ஒன்றை கண்டுப்பிடித்தார்கள். எகிப்திய தொல் பொருள் ஆய்வு வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தால் முந்தைய மிக மிகப் பழமையான தொல் பொருள் இதுதான். இதன் காலம் இன்றையிலிருந்து 5000 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.
இந்த கல் பட்டையத்தில் செதுக்கப்பட்டிருக்கும் சங்கதிகளே மேலே நாம் பார்த்த மூன்று நகரங்களுக்கும் இடையில் நடைப்பெற்ற ஓயாத சண்டையில் இறுதி வெற்றிப் பெற்றது எந்த நகரம் என்றும் அந்த வெற்றியை சாதித்தவன் யார் என்பதையும் அடையாளம் காட்டிய முதல் வரலாற்று ஆதாரம். இந்த பட்டையத்தில் வாட்ட சாட்டமாக நிற்கும் ஒரு உருவம் தன்னுடைய இடது கையில் தரையில் விழுந்து கிடக்கும் ஒருவனின் தலை முடியை கொத்தாக இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்கிறது. அந்த உருவம் தன்னுடைய வலது கையில் ஒரு தடியை பிடித்தபடி கீழே விழுந்து கிடப்பவனின் தலையில் ஒங்கி அடிக்கத் தயாராக இருப்பதுபோல ஒங்கியிருக்கிறது.
கீழே விழுந்து கிடக்கும் உருவம் எத்தகைய எதிர்பும் இன்றி சக்திகள் அனைத்தையும் இழந்துவிட்டதைப் போல துவண்டுப்போய் கிடக்கிறது. அந்த உருவத்திற்கும் கீழே மேலும் இரண்டு உருங்கள் துவண்டு விழுந்துக் கிடக்கின்றன. கல் பட்டையத்தின் இடதுபுறம் ஒரு சிறிய உருவம் ஒரு கையில் தண்ணீர் குவலையையும் மறு கையில் பாத அணிகளையும் பிடித்துக்கொண்டு நிற்கிறது. வலது புறம் மனித கரங்கள் உடைய ஒரு கழுகு துண்டாக்கப்பட்ட மனித தலை ஒன்றை கயிறில் கட்டி இழுத்துக்கொண்டிருக்கிறது. இது கல் பட்டையத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளை விளக்க அதிக சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு மிகத் தெளிவான காட்சி அமைப்பு.
போரில் வெற்றிப் பெற்ற ஒருவன் அவனிடம் தோற்று கீழே விழுந்து கிடப்பவனின் தலை முடியை இழுத்துப்பிடித்து அவன் மண்டையை தடியால் அடித்து நொறுக்கப்போகிறான். ஏற்கனவே இரண்டு பேரை அவன் அப்படி செய்திருக்கிறான் என்பதும் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. ஆக இந்த பட்டையத்தில் இருப்பவன் நிச்சயம் ஒரு அரசனாகத்தான் இருக்கவேண்டும். ஆம் அப்படியேத்தான். மேலும் அந்தப் பட்டையம் Narmer என்கிறப் பெயரையும் கொடுத்தது. இந்த பெயரே ஆராய்ச்சியாளர்கள் இந்த பட்டையம் எந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கிறது என்பதை அடையாளம் காண உதவியாக அமைந்தது.
இந்த இடத்தில் நாம் Manetho என்பவரைக் குறித்த அறிந்துக்கொள்ள வேண்டும். இவர் எகிப்திய பூசாரிகளில் ஒருவர். இவர் வாழ்ந்தது இன்றையிலிருந்து சுமார் 2300 வருடங்களுக்கு முன்பு. இவர் சுமார் கி.மு. 300 ஆண்டு வாக்கில் ஒரு அற்புதமான காரியத்தை செய்தார். அது எகிப்திய நாகரீகம் குறித்த செய்திகளைத் தொகுத்து ஒரு வரலாற்று புத்தகம் எழுதியது. இவர் பூசாரி என்பதால் எகிப்தின் கோயில்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரமாயிரம் பப்பைரஸ் சுருள்களை எந்தவித அனுமதியும் தடையும் இல்லாமல் பார்க்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்.
எகிப்திய கோயில்களில் குவிந்து கிடக்கும் சுருள்களை சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்காமல் பாரோக்கள் குறித்த ஒரு வரலாற்று புத்தகத்தை எழுதினார். பப்பைரஸ் சுருள்கள் பதிவு செய்திருந்த முதல் பாரோத் தொடங்கி 31-வது வம்சத்தின் இறுதி பாரோ வரையான தகவல்களை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் தொகுத்துதார். மிக மிக கடினமான காரியம் இது. மண்டை காய்ந்துவிடுவது மாத்திரமில்லாமல் இடுப்பும் ஒடியக் கூடிய வேலை. இன்றைக்கு நான் எகிப்திய பாரோக்கள் குறித்த அட்டவணையை மிக எளிதாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் என்றால் அதற்கு முழு முதல் காரணம் Manetho.
இவர் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த அடிப்படையில் 150-க்கும் மேற்ப்பட்ட பாரோக்களை வரிசையாக தொகுத்தாரோ அதையே இன்று வரைக்கும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதைவிட ஒருவர் சிறப்பாக நூற்றுக்கணக்கான பாரோக்களின் தகவல்களை தொகுத்திருக்க முடியாது என்பதால் நவீன ஆராய்ச்சியாளர்கள் அதில் கைவைக்க துணியவில்லை. மானிதோ எகிப்தின் முதல் பாரோ Menes என்று தொடங்குகிறார். இவனுக்கு Narmer என்றும் Hor-Aha என்று வேறுப் பெயர்களும் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்த நாம் மேலேப் பார்த்த கல் பட்டையத்தின் இரகசியம் மெல்ல மெல்ல அவிழ்ந்துவிட்டது.
அடுத்த தொடரிலும்......
பாகம் 14
Tjeni நகரின் அரசன் Narmer சுமார் கி.மு. 3000 வருடங்கள் வாக்கில் Nubt மற்றும் Nekhen நகரின் அரசர்களை போரில் தோற்கடித்து அந்த நகரங்களை நிர்மூலமாக்கியிருக்கிறான். அவனுடைய வெற்றியின் சிறப்பை இந்த உலகிற்கு அறிவிக்கும் விதமாகவே Nekhen நகரில் அந்த கல் பட்டையம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த கல் பட்டையத்தில் கீழேக் கிடப்பவனின் மண்டையில் அடிப்பதுபோல் நிற்பது நார்மர்.
இந்த வெற்றிக்குப் பிறகு தனித் தனி நகரங்களாகப் (city states) பிரிந்துக் கிடந்த எகிப்தை ஒன்றாக்கி ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து எகிப்தை ஒரு நாடாக மாற்றினான். தன்னை ஒன்றினைந்த எகிப்தின் முதல் பாரோவாக கி.மு. 2950 வாக்கில் அறிவித்தான். எகிப்தின் பாரோ வம்சம் இவனிலிருந்தே தொடங்குகிறது. இவனிலிருந்தே எகிப்தின் முதல் அரச வம்சாவளி (First Dynasty) தொடங்குகிறது. இதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் Early Dynastic Period என்று வசதிக்காக மேலும் ஒரு பகுப்பாக பகுத்திருக்கிறார்கள். Early Dynastic Period கி.மு. 2950–2575 வரை சுமார் 400 ஆண்டுகளுக்கு நீள்கிறது. இந்த பகுப்பு மூன்றாம் அரச வம்சத்தோடு (Third Dynasty) முடிவடைகிறது.
போரில் தோற்ற எதிரியின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து அவன் தலையில் அடித்துக்கொல்லும் இந்த காட்சியமைப்பை அவனுக்குப் பின் வந்த அனைத்து பாரோக்களும் தங்களுடைய வெற்றியை அறிவிக்கப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த காட்சியமைப்பை அனைத்துப் பாரோக்களின் கோயில்களிலும் பிரமிடுகளிலும் குடைவரைக் கல்லறைகளிலும் பார்க்க முடியும். பெண் பாரோக்களாக இருந்தவர்களும் கூட இந்த காட்சியமைப்பில் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த இடத்தில் எகிப்திய பாரோ வம்சத்தின் மொத்தப் பட்டியலையும் தருவது ஏற்புடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
EARLY DYNASTIC PERIOD கி.மு. 2950–2575
முதல் வம்சாவளித் தொடங்கி மூன்றாம் வம்சாவளி வரை
OLD KINGDOM கி.மு. 2575 - 2125
நான்காம் வம்சாவளித் தொடங்கி எட்டாம் வம்சாவளி வரை
FIRST INTERMEDIATE PERIOD கி.மு. 2125–2010
பத்தாம் வம்சாவளித் தொடங்கி பதினோராம் வம்சாவளி வரை
MIDDLE KINGDOM கி.மு. 2010–1630
பன்னிரெண்டாம் வம்சாவளித் தொடங்கி பதினான்காம் வம்சாவளி வரை
SECOND INTERMEDIATE PERIOD கி.மு. 1630–1539
பதினைந்தாம் வம்சாவளித் தொடங்கி பதினேழாம் வம்சாவளி வரை
NEW KINGDOM கி.மு. 1539–1069
பதினெட்டாம் வம்சாவளித் தொடங்கி இருபதாம் வம்சாவளி வரை
THIRD INTERMEDIATE PERIOD கி.மு. 1069–664
இருபத்தியோராம் வம்சாவளித் தொடங்கி இருபத்தைந்தாம் வம்சாவளி வரை
LATE PERIOD கி.மு. 664–332
இருபத்தியாராம் வம்சாவளித் தொடங்கி முப்பத்தியோராம் வம்சாவளி வரை
இதற்குள் அடங்கியிருக்கும் பாரோக்களின் பெயர் பட்டியலை தருவது சலிப்பை ஏற்ப்படுத்தும் என்பதால் அதை இங்கே நான் குறிப்பிடவில்லை.
அடுத்த தொடரிலும்.......
பாகம் 15
நார்மருக்கு முன்பு எகிப்தில் இருந்த வம்சாவளிகளைக் குறித்து கொஞ்சமே கொஞ்சம் தகவல்களை பப்பைரஸ் சுருள்கள் தருகின்றன. அந்த வம்சாவளிகளின் பெயர்கள் Tasian, Badarian மற்றும் Nagada. இந்த வம்சாவளியைச் சேர்ந்த அரசர்களே நாம் மேலப் பார்த்த மூன்று நகரங்களையும் ஆட்சி செய்திருக்கிறார்கள். நார்மர் இதில் எந்த வம்சாவளியைச் சேர்ந்த அரசன் என்று தெளிவாகத் தெரியவில்லை. தமிழ்ர்கள் குறித்த மானுடவியல் வாசிப்பு அனுபவம் உடையவர்களுக்கு Nagada என்கிறப் பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் நெறிடியிருக்கும்.
எகிப்தின் Nagada-க்கள் தமிழர்களின் தொல் பழங்கால வேட்டை நாகரீக குடிகளில் ஒன்றான நாகர்களாக (Nagas) இருக்குமோ என்று சந்தேகம் எழலாம். இந்த சந்தேகம் உண்மையாகவும் கூட இருக்க வாய்ப்புகள் பிரகாசம்தான். ஆனால் இத்தகைய அற்புதமான ஆராய்ச்சித் தகவல்களை எடுத்துவைத்துக்கொண்டு தெளிவாக ஆராய்ந்து எகிப்திய பழங்குடிகளுக்கு நாகரீகத்தையும் விவசாயத்தையும் அதன் மூலமான நகர வாழ்வையும் ஆட்சி அமைப்பையும் அறிமுகப்படுத்தி எகிப்திய நாகரீகத்தின் வேராக இருந்தவர்கள் தமிழர்கள் என்பதை இந்த உலகிற்கு அறிவிக்கவேண்டிய நம்முடைய பல்கலைகழக வரலாற்று ஆராய்ச்சித் துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்பது அதற்கேத் தெரியாத நிலையில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது.
ஆங்கில வரலாற்றுத் துறை, ஒப்புக்குப் பெறாத துப்புக் கிடைத்தாலே அதை வைத்துக்கொண்டு பிரமிக்கத்தக்க வரலாற்று உண்மைகளை வெளியேக் கொண்டுவருவதையும் எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவுகள் குறித்து இத்தனை வளுவான மறைமுக வரலாற்று ஆதாரங்கள் இருந்தும் நம்முடைய வரலாற்று துறை தூங்கி வழிந்துக்கொண்டிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்பதையும் கூட நினைத்துப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. சங்டப்பட்டும் வருத்தப்பட்டும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்றுப் புரிகிறதுதான் இருந்தாலும் ஆதங்கம் அடங்கவில்லை. நல்லதோர் வீணைச் செய்து அதை நலங்கெட புழுதியில் எறிபவர்களை நீங்கள் பார்த்தது இல்லையென்றால் அதற்காக கவலையேப்படவேண்டாம் காரணம் நாம்தான் அந்த அறிவீளிகள். உலக நாகரீகங்களுக்கெல்லாம் வழிகாட்டிய நம்முடைய சிறப்புகளை இப்படி அறியாமைப் புழுதியில் தொலைத்துக்கொண்டிருக்கும் நாம் முட்டாள்கள் இல்லாம் வேறு என்ன!
Tasian, Badarian மற்றும் Nagada வம்சாளியைச் சேர்ந்த அரசர்கள் தங்களுடைய வல்லமையை எதிரிகளுக்கு எடுத்துக்காட்ட தங்களுடைய கல்லறைகளையும் ஒருக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவைகள்தான் பிற்காலத்தில் பாரோக்களின் பிரமிடுகளாக வளர்ச்சியடைந்தவைகள். அந்த வகையில் பிரமிடுகளின் தொடக்கம் என்பது சுமார் கி.மு. 6000 ஆண்டுகளிலிருந்து தொடங்குகிறது. தொடக்கத்தில் இருந்தவைகள் கற்குவியலைக் கொண்டு உருவாக்கப்பட்ட மணல் மேடு போன்றவைகளாக இருந்திருக்கிறது. இதற்குள் அறைகள் எல்லாம் கிடையாது. அரசர்களின் உடல்களும் மம்மிக்களாக மாற்றப்பட்டு இந்த கற்குவியல்களுக்கு அடியில் வைக்கப்பட்டதற்கான தொல்லியல் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த கற்குவியல் கல்லறைகளின் அடுத்த நிலை வளர்ச்சியான Mastabas நார்மரின் காலப் பகுதியில் தோன்றுகிறது. நார்மரின் உடலே Mastaba விற்குள்தான் அடக்கம் செய்யப்பட்டிருகிறது. நார்மரின் இந்த மஸ்டபா இன்றைய Abydos பகுதியில் இருக்கிறது. மஸ்டபாஸ் சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இவைகள் நீள் சதுர வடிவம் கொண்டவைகள். காலத்தால் முற்ப்பட்ட மஸ்டபாக்களின் கீழே அறைகள் இல்லாமல்தான் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மஸ்டபாக்களுடன் இறந்த பாரோக்களை வழிப்பட என்று மேற் கூரையில்லாத கோயில்களும் ஒரு சில பலிபீடங்களும் இருந்திருக்கின்றன. இந்த தொடக்க கால மஸ்டபாக்களில் வைக்கப்பட்ட பாரோக்களின் இறந்த உடல்கள் மம்மிபிகேசன் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
நார்மர் காலத்திய மஸ்டபாக்களின் கீழே இரண்டு அறைகள் கொண்ட அமைப்பு வழக்கத்திற்கு வந்திருக்கின்றன. நார்மரின் மஸ்டபாவாக இன்றைக்கு அடையாளம் காணப்பட்டிருக்கும் மஸ்டபா அடித்தளத்தில் இரண்டு அறைகளைக் கொண்டிருக்கிறது. இதில் நார்மரின் மம்மி உடல் வைக்கப்பட்டிருந்திருக்கலாம்.
அடுத்த தொடரிலும்......
பாகம் 11 - 15, பாகம் 16 - 20, பாகம் 21 - 25, பாகம் 26 - 30