இதற்கு "முகாம் பள்ளிவாசல்" என்ற பெயரும் உண்டு.
சுமார் 400 வருடங்களுக்கு முன் வாஸ்கோடகாமா -வின் தலைமையில் இந்தியாவை அடிமைப்படுத்த வந்தனர் போர்த்துகீசியர்கள்.
நாடு பிடிக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடற் போர் புரிந்து,
அவர்களுக்குச் சிம்மச் சொப்பனமாகத் திகழ்ந்து இறுதியில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர் கேரளாவைச் சார்ந்த "குஞ்சாலி மரைக்காயர்" எனும் வீரத் திருமகனார் ஆவார்.
குஞ்சாலி மரைக்காயரின் படையில் தளபதியாகவும், முக்கிய வீரராகவும் இருந்து வீரப் போர் புரிந்த காயல்பட்டிணம் சகத் மரைக்காயரின் மகன் வழிப் பேரரும்,
மாபெரும் இஸ்லாமிய அறிஞரும், அழைப்பாளருமான
அஷ்-ஷைகு சலாஹுத்தீன் அப்பா அவர்கள் போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்டிருந்த நமது கலாச்சார மரபுகளை மறுகட்டமைப்புச் செய்யவும், இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளவும் ஏர்வாடிக்கு வருகை தந்து முகாமிட்டுத் தங்கியிருந்த இடம் இப்பள்ளிவாசல் தான்.
இதனாலேயே இதற்கு முகாம் பள்ளிவாசல் எனும் பெயரும் வந்தது.
இன்றும் இப்பெயர் புழக்கத்தில் உள்ளது.
கி.பி 1674 -ல் ஏர்வாடிக்கு வருகைத் தந்த இறைநேசரும், சீர்திருத்தச் செம்மலுமாகிய சலாஹுத்தீன் அப்பா அவர்களின் மண்ணறை இப்பள்ளிவாசலின் வளாகத்தில் தான் உள்ளது.
மிகப் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்றையும் இங்கே காண முடியும்.
இறைநேசர் சலாஹுத்தீன் அப்பா அவர்களின் வருகைக்கு சுமார் 570 ஆண்டுகளுக்கு முன்பே ஏர்வாடியில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
லெட்சுமி நரசிங்க புரம் என்று அழைக்கப்பட்ட ஏர்வாடியில் முஸ்லிம்கள் முதன் முதலில் வாழ்ந்த பகுதி இன்று லெப்பைவளவு என்று அழைக்கப்படும் இப்பள்ளிவாசல் உள்ள பகுதியாகும்.
ஃபத்தாஹ் அப்பா (பத்தாஸப்பா) என்று அறியப்படும் ஓர் இறைநேசரின் மூலம் இஸ்லாம் ஏர்வாடியில் அறிமுகமானது. இவரது மண்ணரை லெப்பைவளவு பகுதியில் திருக்குறுங்குடி சாலையை ஒட்டிய இடத்தில் வலதுபுறம் உள்ளது.
இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து வாழும் இப்பகுதியில்,
நல்ல சமூக நல்லிணக்கம் பேணப்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டியதாகும்.
மரணித்த தங்கள் முஸ்லிம் தோழர்களின் நல்லடக்கத்திற்காக இப்பள்ளிவாசலின் மையவாடிவரை வருகை தருவார்கள் அப்பகுதியின் இந்துக்கள்.
பொதுவாக ஏர்வாடியின் எல்லா பள்ளிவாசல்களிலும் நோன்பு காலத்தில் முஸ்லிம்களால் காய்ச்சி விநியோகிக்கப்படும் நோன்பு கஞ்சியை வாங்குவதற்காக வருகைதரும் இந்து நண்பர்களின் வருகை ஏர்வாடியின் மற்ற பள்ளிவாசல்களை விட இங்கேயே அதிகமாக இருக்கும்.
மரக்குடி, கம்மாளர் தெரு, பொத்தையடி, கோவில்வாசல், பெருந்தெரு போன்ற பகுதிகளைச் சார்ந்த பல இந்து நண்பர்கள் இங்கு வருகை தருவார்கள்.
வரலாற்றுச் சிறப்பும், நல்ல சமூக நல்லிணக்கப் பாரம்பரியமும் கொண்ட லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல் ஏர்வாடியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.