நாம் ஒன்றே, நமது கலாச்சாரம் ஒன்றே, நமது பராம்பரியம் ஒன்றே, அன்றாட வாழ்க்கை ஒன்றே, வரலாறு ஒன்றே என இந்துத்துவம் எனும் கொடிய நோயை நாடு முழுவதும் பரப்பும் ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் அஜன்டாவை அரசியல் தளத்தில் நின்று நிறைவேற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி பெருமளவில் முயற்சிக்கிறது, 2014ல் ஆட்சியமைத்து 2004ல் விட்டதை எல்லாம் காவி மாற்றம் செய்யலாம் என பகல் கனவு காண்கிறது. அடித்தொண்டையிலிருந்து பேசும் பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளர் நாடு முழுக்க பொய், புனைகளை சொல்லி நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார். என்னதான் பேசி மறைத்தாலும், பூசி மெழுகினாலும் 1992ல் பாபர் மசூதி இடிப்பும்,1998ல் தேசிய ஜனநாயக கூட்டணியும் செய்த மாபாவங்களை இந்திய மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள். பாரதிய ஜனதா அரசு மத்தியில் ஆட்சி அமைத்த சமயம், பல்வேறு சம்பவங்களால் நாட்டு மக்கள் மெளனமானர்கள்.
இந்தியாவின் மதச்சார்பின்மை தூக்கி எறியப்பட்டது. மத போதை உச்சத்திற்கு சென்றது, அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் ஆழ்ந்தனர் அவ்வாறே மாபெரும் மாற்றத்தை வரலாற்றில் மாற்றுவதற்கு முயற்சித்தார்கள். கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் ஆக்கிரமித்தார்கள், அரசால் நியமிக்கப்பட்டார்கள். வரலாற்று புத்தகங்கள், வரலாறுகள் மாற்றி அமைத்து அகமகிழ்ந்தார்கள்.
சிறிதளவேனும் நெருடல் இல்லாமல் நாட்டின் வரலாற்றை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பா.ஜ.க. வித்யா பாரதி பள்ளி பாடப்புத்தகத்தில் இந்தியாவின் வரைப்படத்தையே மாற்றியமைத்து, பிஞ்சு உளளங்களில் நஞ்சு விதைக்கும் வேலையை அப்பட்டமாக அரங்கேற்றியது. மத வெறியூட்டி தங்களுக்கு ஆதரவான செயல்களை செயல்படுத்த தேவையான கைங்கரியத்தை கற்றுக் கொடுத்தது. இவற்றை தூக்கி எறிய 2004ல் மதச்சார்பின்மையை பாதுகாக்க நாட்டின் மதச்சார்பற்ற சக்திகள் கைகோர்த்தார்கள், பி.ஜே.பி ஆட்சி நாடாளுமன்றத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த இவர்கள் தங்களுடைய இந்துமத தத்துவங்களை செயல்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்தார்கள், வரலாற்று புத்தகங்களில் இஸ்லாம் சம்பந்தமாகவும், கிறித்துவம் சம்பந்தமாகவும் பொய் புனைந்து பாடங்கள் இயற்றப்பட்டன.
மெளரியர்களும், குப்தர்களும் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் இந்தியா சுபிட்சமாக இருந்ததாம். முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்து மக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள் எனவும், இந்து கோயில்கள் இடிக்கப்பட்டது எனவும், இந்துக்கள் புறக்கணிக்கப்பட்டனர் எனவும், யேசு கிறிஸ்து இமாலய மலைகளில் சுற்றி திரிந்தார் அவர் இந்து மதத்திலிருந்து பல ஞானங்களைப் பெற்றார் போன்ற வரலாற்று மாற்றங்களை செய்தார்கள்.
1998 முதல் 2004 வரை அவர்களின் ஆக்கிரமிப்புகள் நினைவில் உள்ளது. தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வரலாற்று ஆய்வுக்கழகம் காவிமயமானது.
தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர்களான ரொமிலா தாப்பர், பிபின் சந்தா, இர்பான் ஹபிப், ஆர்.எஸ். சர்மா, கே.என்.பணிக்கர், டி.கே.எஸ். சுப்பிரமணியன் ஆகியோரின் புத்தகங்கள் புறக்கணிக்கபட வேண்டியவை எனவும், தடை செய்ய வேண்டுமெனவும், கொளுத்த வேண்டியது எனவும் ஆர்.எஸ்.எஸ். வினோதங்கள் கூச்சலிட்டார்கள். வரலாற்று ஆய்வுக் கழகத்தில் இருந்த கே.என்.பணிக்கர், டி.கே.எஸ். சுப்பிரமணியன் வெளியேற்றப்பட்டார்கள். அதற்கு பதிலாக
ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் அப்பணியில் அமர்த்தப்பட்டார்கள். இப்படியே துவங்கிய சங் பரிவார பணி சாதி, மத வேறுபாடு பிரச்சனையிலும் ஊடுருவி மக்களை பிளவுபடுத்தியது.முஸ்லிம்கள், கிறித்துவர்கள் அந்நியர்களாக்கப்பட்டு, வெறுப்பு உமிழும் கருத்துக்கள் வாரி வீசப்பட்டன.
வர்ண அடிப்படையில் இந்துக்கள் பிரிக்கப்பட்ட அநியாயத்திற்கு ஆழமான அங்கீகாரம் கொடுத்து அரவணைப்புகள் அறுத்தெறியப்பட்டது. 1992 ன் அடையாளம் இல்லாமல் சங்பரிவாரங்களை குறிப்பிட முடியாது. அவர்கள் செய்த அட்டூழியங்கள் நாட்டின் அமைதியை சீர்குலைத்தன. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து உ.பி., குஜராத், என துவங்கிய கலவரம், மதவெறி சண்டைகள் மகாராஷ்டிரா, அஸ்ஸாம் என விரிவடைந்தது. கன்னிகாஸ்திரிகளை பாலியல்
பாலாத்காரம் செய்தார்கள். ரயில் குண்டு வெடிப்புகள், மசூதி குண்டு வெடிப்புகள் என நீண்டது. அன்பும் பாசமும் ததும்பிய, உணவுகளையும், உணர்வுகளையும் பரிமாறிக்கொண்ட அக்கம் பக்கத்து வீட்டு முஸ்லிம்கள், கிறித்துவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி வகையறாக்கள் ஆனந்தத்தில் திளைத்தார்கள். பாபர் மசூதியை இடித்து தள்ளிய கரசேவகர்களை வரலாற்று புத்தகத்தில் தியாகிகளாக மணிமகுடம் சூட்டினர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு வரலாற்றாளர்கள்.
சுதந்திர போராட்டத்தில் எந்த வித பங்களிப்பும் இல்லாமல், ஆயிரக்கணக்கானவர்கள் அடி வாங்கி, இரத்தம் சிந்தி, உயிர் தியாகம் செய்த போது ஆர்.எஸ்.எஸ். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு சர்வ சுதந்திரமாக உறவாடியது. சுதந்திர போராட்ட அடையாளம் இல்லாத, பஜனை பாடி திரிந்த கூட்டம், சுதந்திர போராட்ட வரலாற்று பக்கங்களில் இடம் பிடிப்பதற்கு வரலாற்று ஆய்வுக்கழகத்தில் அங்கம் வகித்தார்கள். இந்திய வரலாற்றை மாற்றியமைத்தார்கள். ஹெட்கேவர், கேசவராவ் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களை சுதந்திரப்போராட்ட தலைவர்களாக சித்தரித்தார்கள்.
இந்து மகா சபையை முன்னின்று நடத்திய இவர்கள், சுதந்திர போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் இல்லாமல் உண்மைக்கு புறம்பான முரண்பட்ட கருத்துக்களை புத்தகங்களில் ஏற்றினர். முகலாயர்கள் குறித்த வரலாறுகளை சிதைத்தனர், பிஜேபி ஆட்சி செய்த இராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், இமாச்சல பிரதேசம் பள்ளிகள் மற்றும் வித்யா பாரதி பள்ளிகளில் பாடபுத்தகங்களில் முகலாயர்களை கொச்சைப்படுத்தினார்கள், இஸ்லாமிய
மன்னர்கள் இந்துக்கள் கோயிலை இடித்தார்கள் போன்ற பதிவுகளும், நாட்டின் பிரிவினைக்கு முஸ்லிம்கள் முழு பொறுப்பாளர்கள் எனவும், ஆர்.எஸ்.எஸ். விடுதலை இயக்கத்தின் அச்சாணியாக இருந்ததாகவும், ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றி கூறும்பொழுது காங்கிரஸ் பற்றியோ அதில் இயற்றப்பட்ட பூரண சுதந்திரத் தீர்மானம் பற்றிய எந்த கருத்தும் இடம் பெறாமல், அடிமைத்தனத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மாற்றியமைத்தார்கள், என்பன போன்ற வரலாற்று பிறழ்வுகள் பாடப்புத்தகங்களில் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தால் மாற்றியமைக்கப்பட்டது.
ஜின்னாவும், லீக்கும் கடைபிடித்த தவறான முஸ்லிம் மதவாதம் மட்டுமே நாட்டு பிரிவினைக்கு காரணம் போன்ற செய்திகள் இப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.
இங்கு முகலாய மன்னர்களையும், முஸ்லிம் தலைவர்களையும் பாடப்புத்தகங்களில் கேவலப்படுத்துவது இங்கு வாழுகிற முஸ்லிம்களை கேவலபடுத்தும் என்பதாக அவர்கள் எடுத்துக்கொண்டு வெறுப்பு உமிழும் வேலைகளில் ஈடுபட்டார்கள். ஒரு சாதிக்காரன் அதே சாதிக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லையானால் இரத்தத்தின் புனிதத்தன்மை மாற்று சாதியினரின் மாசு கலந்த இரத்தம் தங்களுக்குள் செல்லாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் போன்ற பிற்போக்குவாத கருத்துகள் அப்புத்தகங்களில் காணப்பட்டன. அகண்ட பாரதம் என்ற வரைப்படத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அதில் ஆப்கானிஸ்தான், திபெத், நேபாளம், பூடான், மியான்மர், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ்
போன்றவை ஒரு காலத்தில் இந்தியாவோடு இருந்தன, அப்படியான நாடுகளை உள்ளடக்கிய அகண்ட பாரதத்தின் மீள் உருவாக்கம் குறித்த கருத்துகளும், குதுப்மினாரை கட்டியவர் நாம் குத்புதீன் ஐபக் என்போம், அந்த புத்தகங்களோ சமுத்திர குப்தர் என்கிறது.
இதுமாதிரியான மிரள வைக்கிற பொய்களை புத்தகங்களில் கடந்த 1998களில் பதிவு செய்து நாட்டை காவிமயமாக்கி வரலாறுகளை சீர்குலைவு செய்த பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார கும்பல்கள் மீண்டும் நிலைநாட்ட அனுமதிக்காமல் அப்புறப்படுத்துவோம். ஒற்றுமைக்கு வழிவகுப்போம்.