சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பது, போக்குவரத்தைச் சீர்படுத்துவது, வி.ஐ.பி-க்கள் வரும்போது பாதுகாப்பு கொடுப்பது... இவைகள் மட்டுமே காவல் துறையின் வேலை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? நெல்லை காவல் துறைச் செயல்பாடுகளைப் பார்த்தால் கையை உயர்த்தி சல்யூட் வைப்பீர்கள். நதி நீர் பங்கீட்டு விவகாரம் பக்கத்து மாநிலங்களை நம்முடைய எதிரிகளாக மாற்றி இருக்கும் சூழலில், தமிழகத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு
, 120- கி.மீ. தூரத்துக்குப் பாய்ந்து வயல்களைப் பசுமையாக்கிப் பின்னர் கடலில் கலக்கிறது. அத்துடன் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்திசெய்கிறது.
'தமிழகத்தின் வற்றாத ஜீவநதி’ எனப் புகழப்படும் இந்த ஆற்றில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த மணல் கொள்ளை காரணமாக ஆறு தன் இயல்பு மாறிப் போய்விட்டது. சாக்கடை, எண்ணெய்க் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைக் கூளங்கள் என ஆற்றில் கலக்கும் மாசுகள் ஏராளம். இதனைச் சரிப்படுத்தும் முயற்சியில் செவ்வனே களம் இறங்கி இருக்கிறது நெல்லை மாநகரக் காவல் துறை.
தாமிரபரணியைச் சுத்தப்படுத்தும் பணியில் போலீஸைக் களம் இறக்கிய போலீஸ் கமிஷனர் கருணாசாகர், கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் தாமிரபரணிக் கரையில் சுற்றிச்சுழன்று வலம்வருகிறார். சுமார் 300 போலீஸார், 200 ஊர்க்காவல் படையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பத்திரிகையாளர்கள் ஆர்வத்தோடு களம் இறங்கி... 'களங்கம்’ களைந்து வருகிறார்கள்!
முதல்கட்டமாக ஆற்றங்கரையில் இருந்த முட்செடிகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு, மரக் கன்றுகள் நடப்பட்டு இருக்கின்றன. இதைத் தொடர்ந்து சில பல இழுபறிகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டடங்கள் அகற்றப்பட்டன. போலீஸ் கமிஷனர் கருணாசாகரிடம் பேசினேன். ''சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதுடன் எங்கள் வேலை முடிந்துவிடவில்லை. மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்துவைப்பதும் எங்கள் வேலைதான்.
எங்கள் பணிகளைப் பார்த்து பல்வேறு அமைப்புகளும் எங்களோடு இணைந்துக்கொண்டார்கள். அதுவே எங்களுக்குக் கூடுதல் உற்சாகம் கொடுத்தது. கூடிய விரைவிலேயே ஆற்றங்கரை புதியதாக ஜொலிக்கும்'' என்றார்.
இதனை பல்வேறு மாவட்டங்களும் பின்பற்றினால் தமிழகம் ஜொலிக்கும்,
கவிதை:
நமக்கு....
நமக்கென்னவென்று இருந்தால் நம் உடல் கூட நாறும்...
நமக்கு என்று இருப்போம் பூவோடு சேர்ந்த நாறும் மணம் வீசட்டும்
நம் மனதில்...
வாய்மையே வெல்லும் "வாய்" மையே வெல்லும்
கவிதை உரிமை : செழியன் மட்டுமே... நன்றி: எனது அன்பு வருங்கால இந்திய காவல் துறை அதிகாரி செந்தில் அண்ணா...
Source: http://www.thozhirkalam.com/2012/10/river.html
|