Posted By:peer On 1/17/2013 |
|
இணையதளம் மூலம் விளம்பரம் செய்து இளைஞர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் சென்னையைச் சுற்றியுள்ள ஏரியாக்களில் பெருகிவிட்டது. இந்த கும்பலிடம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 40 பேர்கள் சிக்கி பணத்தை இழப்பதாகச் சொல்கிறது சைபர் க்ரைம் பிரிவு போலீஸ்.
அது தவிர, பார்ட் டைம் வேலை, வீட்டிலிருந்தே வேலை, கொள்ளை லாபம் தரும் முதலீடுகள் என பல ஆளை மயக்கும் ஆசை வார்த்தைகளைச் சொல்லிவரும் எஸ்.எம்.எஸ். ஏகத்துக்கும் பெருகிவிட்டன. இந்த விளம்பரங்கள் மற்றும் எஸ்.எம்.எஸ். தகவல்களைப் படித்து ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என சைபர் க்ரைம் வட்டாரத்தில் விசாரித்தோம்!
''இது மாதிரியான விளம்பரங்கள், மெசேஜ்களைப் பார்த்தால், முதலில் சந்தேகப்படுங்கள்! ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் அது-இது என்று அளப்பார்கள். அதையும் ஆன்-லைனில் கட்டச் சொல்லுவார்கள். இப்படிச் சொன்னாலே, அது ஃபிராடு என்று முடிவு செய்துவிடலாம். அதேபோல், உங்களது மெயில் அட்ரஸுக்கு வேலை வாங்கித் தருவது தொடர்பாக கடிதம் வரும். அதை நம்பி போட்டோ, பயோ-டேட்டாக்களை அனுப்பாதீர்கள். எந்த கம்பெனி என்று கேட்டு, அங்கே தொடர்புகொண்டு தீர விசாரியுங்கள்.
உங்கள் விசாரணையில் அது தவறான நிறுவனமாக உங்களுக்கு சந்தேகம் வந்தால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனம் பற்றி விசாரிக்க அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சைபர் க்ரைம் தொடர்பான பிரச்னைகளுக்கு 044-23452350 என்கிற எண்ணுடனும், வங்கி மோசடி எனில் 044-23452317 என்கிற எண்ணுடனும் தொடர்புகொள்ளுங்கள். |