நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (21:30.)
இந்த பூமி எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை குர்ஆன் எவ்வளவு அழகாக கூறுகிறது பாருங்கள். இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பல விதமான கட்டுக் கதைகளைத்தான் இதற்கு முன் படித்திருக்கிறோம். திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 வருடங்களுக்கு முன்னதாகவே திருக்குர்ஆன் சொல்லி விட்டது. வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை தானே பிரித்துப் பிளந்து எடுத்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான்.
இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது.
இந்த பிரபஞ்சம் எப்படி உண்டானது? அல்லது எப்படி உருவானது?
பெரு வெடிப்புக் கொள்கை(Big Bang Theory)
'வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் வியாழனை ஒத்த ஆனால் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.'
பெரு வெடிப்புக் கொள்கை என்றழைக்கப் படும் இந்தத் தத்துவமே இன்று பிரபலமானது. 1973 ஆம் ஆண்டு நன்றாக விவரிக்கப்பட்ட இந்த பெரு வெடிப்புக் கொள்கை பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டு உயர் அந்தஸ்தும் கொடுக்கப் பட்டது.
ஆனால் இதை இறைவன் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாகவே திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறிவித்துவிட்டான்.
அதே போல் உயிருள்ள பொருள்களின் மூலம் தண்ணீர் தான் என்ற உண்மையையும் குர்ஆன் கோடிட்டு காட்டுகிறது. . அடுத்து வானத்தைப் பற்றிய மற்றொரு உண்மையையும் குர்ஆன் கூறும் அழகைப் பார்ப்போம்.
இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள். (21:32. )
வானத்தை பாதுகாக்கப் பட்ட முகடு என்று குர்ஆன் கூறுகிறது.
வானத்தை முகடு என்று குர்ஆன் ஏன் கூற வேண்டும்?
விண்ணிலிருந்து வருகின்ற பற ஊதாக் கதிர்கள் வானத்தில் வடிகட்டப் படுகின்றன. அங்கிருந்து வருகின்ற எரி கற்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு எரிக்கப் பட்டு கேடு விளைவிக்காத அளவில் கீழே விழுகின்றன.
மேலே இருக்கின்ற முகடு சூரியனின் அளவு கடந்த வெப்பத்தை பூமிக்கு நேரிடையாக அனுப்பாமல் மட்டுப் படுத்தப்பட்டு மனிதன் தாங்கக் கூடிய அளவுக்கு வெப்பத்தை அனுப்புகிறது. இது போன்ற பாதுகாப்பை உயிரனங்களுக்காக செய்வதால் இறைவன் வானத்தை முகடு என்று வர்ணிக்கிறான்.
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. (21:33)
இங்கு நீந்துதல் என்ற வார்த்தையைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம். கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் சுற்றி வரும்போது அதற்கு பொருத்தமான வார்த்தையான 'நீந்துதல்' என்ற வார்த்தைப் பிரயோகத்தை கவனிக்கவும். உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த அந்த காலத்தை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். இன்றும் கூட நம்மில் பலர் பூமி உருண்டை என்பதையும் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையையும் நம்பாதவர் இருக்கின்றனர்.
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. 41 : 11 - குர்ஆன்.
இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. வானம் பூமி அனைத்தும் ஒன்றாக இருந்து பின்னர் பிரித்து எடுக்கப்பட்டதுதான் என்பதை முன்பே பார்த்தோம். இவ்வாறு பிரித்தெடுக்கப் பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன்பிறகுதான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின: என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை குர்ஆன் அன்றே கூறியிருக்கிறது.
Creation of Universe: Part 1-3
Creation of Universe: Part 2-3
Creation of Universe: Part 3-3
குர்ஆன் கூறும் இந்த உண்மைகளை யொட்டிய ஒரு அறிவியல் கட்டுரையை சமீபத்தில் படித்தேன். அதை அப்படியே கீழே தருகிறேன்:
உலகில் எந்த மூலகமும் மனிதனால் உற்பத்தி செய்யப் படுவதில்லை. ஹீலியம் என்ற மூலகத்தில் தொடங்கி கார்பன், ஆக்சிஜன், இரும்பு, செம்பு, வெள்ளி, நிக்கல், தங்கம் வரை பல மூலகங்களும் நட்சத்திரங்களில் அல்லது அவற்றின் மடிவின் போது தான் உற்பத்தியாகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் தங்கமோ, வெள்ளியோ எல்லாமே ஹைட்ரஜனிலிருந்து தான் தொடங்குகின்றன. அதாவது அனைத்துக்கும் மூலப் பொருள் ஹைட்ரஜன் வாயுதான். வேறு விதமாகச் சொல்வதானால் நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரு வகையில் மூலக உற்பத்தி 'தொழிற்சாலைகளே'.
சூரியன் போன்ற நட்சத்திரத்தில் முதல் கட்டமாக அணுச் சேர்க்கை மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாகிறது. ஹீலியம் பின்னர் கார்பன்ஆகிறது. சூரியனை விட பலப் பல மடங்கு பெரிய நடசத்திரங்களில் மேலும் கடும் வெப்பத்தில் கார்பன் அணுக்கள் இடையில்அணுச் சேர்க்கை ஏற்பட்டு ஆக்சிஜன்,நியான் என பல மூலகங்கள் உற்பத்தியாகின்றன.
சில வகை நட்சத்திரங்கள் குறிப்பிட்ட கட்டத்தில் வெடிக்கின்றன. அது பயங்கர வெடிப்பாகும். அந்த வெடிப்பின் போது அதிக எடை கொண்ட (அதிக எண்ணிக்கையிலான புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் கொண்ட) தங்கம் வெள்ளி பிளாட்டினம் முதலான மூலகங்களின் அணுக்கள் உற்பத்தியாகின்றன. இவ்விதம் விண்வெளியில் எண்ணற்ற நட்சத்திரங்கள் வெடிக்கும் போது இந்த கன ரக மூலகங்களின் அணுக்கள் விண்வெளியில் பரவி நிற்கின்றன.
இவை விண்வெளித் தூசுடனும் ஹைட்ரஜன் வாயுவுடனும் சேர்ந்து பிரம்மாண்டமான முகில்களாக உருவெடுக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்த வாயு முகில்கள் மொத்தையாகத் திரளுகின்றன. அப்போது ஈர்ப்பு சக்தி காரணமாக இவை வடிவில் ஒடுங்க ஆரம்பிக்கின்றன. மாபெரும் உருண்டையாக உருவெடுக்கும் போது உட்புறத்தில் கடும் அமுக்கம் காரணமாக பல மில்லியன் டிகிரி அளவுக்கு வெப்பம் தோன்றி அணுச் சேர்க்கை நடக்கத் தொடங்கி அந்த வாயு மொத்தையானது நட்சத்திரமாக உருவெடுக்கிறது. இறுதியில் ஒரு வேளை அந்த நட்சத்திரத்தின் வாழ்க்கை வெடிப்பில் போய் முடியலாம்.
இப்படியாக விண்வெளியில் அடுத்தடுத்து நட்சத்திரங்கள் மடிவதும் மீண்டும் வாயு முகில்கள் தோன்றுவதும் அவற்றின் மூலம் புது நட்சத்திரங்கள் தோன்றுவதும் நிகழ்கின்றன. இப்படியாக ஒரு வாயு முகில் மூலம் தோன்றியது தான் சூரியன் என்ற நமது நட்சத்திரம். சூரியனுடன் சேர்ந்து தான் பூமியும் இதர கிரகங்களும் தோன்றின.
அந்த வகையில் பார்க்கும் போது பூமியில் அடங்கிய கார்பன், ஆக்சிஜன், இரும்பு, அலுமினியம், தங்கம், வெள்ளி, முதலான எல்லா மூலகங்களும் என்றோ விண்வெளியில் நட்சத்திரங்களின் உட்புறத்தில் அல்லது அவற்றின் வெடிப்பின் போது தோன்றியவையே! (15-10-2006 - தினமணி)