Saturday, 13 March 2010 14:33
இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இளம் தலைமுறையினருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் மனிதராக திகழகிறார்.
இளம் தலைமுறையினரிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் புகழ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அவரை அழைத்து மாணவர்களிடையே சொற்பொழிவாற்ற அழைக்கின்றன. கலாமுக்கும் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் உள்ள ஈடுபாடு காரணமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாணவர்களிடையே உரையாற்றி வருகிறார்.
கட்டுப்பாடின்றி கனவு காணுங்கள் என்று இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் கலாமுக்கே கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்து ஓய்வு பெற்ற பிறகு கலாலை நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்லைக்கழகங்கள் மற்றும் அறிவியல் அமைப்புகள் அழைத்து அவரை பேச வைத்து கவுரவிக்கின்றன.
2007ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு கலாம் இதுவரை 20க்கும் அதிகமான முறை வெளியாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதில் தான் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கலாமின் வெளிநாட்டுப் பயணத்தின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நாளொன்றுக்கு 1000 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 45 ஆயிரம்) செலவாகிறது. இந்தச் செலவைக் குறைக்க கலாமின் வெளிநாட்டு பயணத்தை வருடத்திற்கு ஆறு முறை என்று கட்டுப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை அளிப்பதுடன் பல கேள்விகளையும் எழுப்புகிறது. கலாம் வெளிநாடுகளுக்கு செல்வது பொழுதுபோக்குவதற்காக அல்ல. அவரது ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒவ்வொரு முறை அவர் வெளிநாடுகளில் சொற்பொழிவாற்றும் போதும் இந்தியாவின் பெருமை உயர்ந்து கொண்டே போகிறது.
வெளிநாடுகளில் அந்தந்த நாட்டின் அரசுடன் உறவை தொடர்வதற்காக அரசு தூதர்களை நியமிக்கிறது. ஒவ்வொரு நாடும் இது போன்ற தூதர்களை நியமிக்கின்றன. நமது நாட்டிற்கும் பெரும்பாலான நாடுகளில் தூதர்கள் உள்ளனர் என்ற போதிலும் அப்துல் கலாம் அறிவிக்கப்படாத நமது நாட்டின் அறிவயில், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத் தூதராகவே செயல்படுகிறார்.
இந்தியாவிற்கு மேலும் மேலும் பெருமையை சேர்க்கும் கலாமின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவைக் காரணம் காட்டி ஏன் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கேள்வி பலரது மனத்திலும் தோன்றுவதை மறுக்க முடியாது.
மத்திய, மாநில அரசுகளில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் தேவையற்ற பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்றனர். இதே போல் மத்திய அமைச்சர்கள் சிலர் அரசு ஒதுக்கிய வீடுகளில் தங்காமல் நட்சத்திர ஓட்டல்களில் தங்கியதும் கூட சமீபத்தில் தெரியவந்தது.
திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றுக்கு பாதுகாப்பு, விளையாட்டுப் போட்களுக்கு பாதுகாப்பு, அரசியல் வாதிகள் பயணத்திற்கு காதுகாப்பு என பாதுகாப்புக்காகவே கணக்கின்றி பல கோடி செலவிடும் அரசு உலகம் முழுவதும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படும் கலாமின் பாதுகாப்புக்கு செலவிடும் தொகைக்கு மட்டும் ஏன் கணக்கு பார்க்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.
தன்னால் அரசுக்கு எந்த விதமான அனாவசிய செலவும் இருக்கக்கூடாது என்ற எண்ணமுடையவர் கலாம். இது அவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்த போதே வெளிப்பட்டது. தன் உறவினர்கள் டெல்லியை சுற்றிப் பார்க்க வந்த போது ஆன செலவை கணக்கிட்டு காசோலையாக ராஷ்ட்ரபதி பவன் அதிகாரிகளிடம் வழங்கியவர் கலாம். அதே போல் குடியரசுத் தலைவர் பதவிக்கு அவரை அப்போது ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் நிறுத்தியபோது டெபாசிட் தொகையை செலுத்த அக்கட்சி முன்வந்தது. ஆனால் அதை விரும்பாத கலாம் சென்னையில் உள்ள தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு டெல்லி சென்று பணம் கட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இது போல் வெளிநாடுகளுக்கு சென்று உரையாற்ற அழைக்கப்படும் போது அதற்காக பெரும் தொகையை வாங்குகின்றனர். ஆனால் கலாம் தாம் உரையாற்றுவதற்காக ஒரு பைசா கூட பெறுவதில்லை. அவரது போக்குவரத்து செலவை மட்டும் சொற்பொழிவை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் ஏற்கின்றனர்.
இப்படி எதற்கும் ஆசைப்படாத கலாமின் பாதுகாப்புச் செலவை கணக்குப் பார்த்து அவருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் |