புத்தாண்டு வாழ்த்துக்களோடு கடந்து போகிற கால மாற்றமல்ல ஹிஜ்ரத். நம் வாழ்வில் அடைந்தே தீரவேண்டிய இலக்குகளை நினைவுறுத்தும் இலட்சிய அடையாளம் அது.
உலகின் வரலாற்றுப் போக்கில் எவற்றையெல்லாம் மனித இனம் கடந்து வந்துள்ளது என்பதை உணர்வதும் அவற்றிலிருந்து நேர்மையான நல்ல படிப்பினைகளைப் பெற்று மனித வாழ்வை சீரமைத்துக் கொள்வதும் பகுத்தறிவு பெற்ற சமூகத்தின் போற்றுதலுக்குரிய சிறப்புப் பண்பியலாகும்.
இந்த உலகம் கண்டு வருகிற நவீன சிக்கல்களையும் அவற்றுக்கான சரியான, நிரந்தரத் தீர்வுகளையும் ஏற்படுத்துகிற பொறுப்பும் கடமையும் இந்த பூமியில் வாழுகிற ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு.
உலகைப் படைத்த இறைவனின் வழிகாட்டுதலைப் பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு அது கூடுதலாக இருக்க வேண்டும். அதற்காக முறைப்படுத்தப்பட்ட முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வரலாற்று நினைவுச் சின்னம் ஹிஜ்ரத்.
இன்றைய நவீன உலகை வழிநடத்தும் #முப்பெரும்_துறைகளான அறிவு செல்வம் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்துகிற நுட்பமான, ஆக்கப்பூர்வ பணிகளை தொய்வில்லாமல் தொடர்ச்சியாகச் செய்திட முஸ்லிம்கள் சபதம் ஏற்கவேண்டும்.
இந்தப் புதிய வருடத்தில் முஸ்லிம் சமூகத்திலிருந்து குறைந்தது ஒரு ஆயிரம் #அறிவுத்துறைவல்லுனர்கள், #அறிவியல்ஆய்வறிஞர்கள், #தொழில்துறை_செல்வந்தர்கள் உருவாக்கப்பட்டே தீரவேண்டும் என்கிற #ஒற்றை_செயல்திட்டத்தில் அவரவர் சார்ந்த மஹல்லாக்களில் அனைத்து ஜமாஅத்துகளும் ஒருங்கிணைந்து ஈடுபட்டால் சமூகத்தின் அபரிமிதமான வளர்ச்சியுடன் நமது தேசத்தின் மகத்தான வளர்ச்சியிலும் எளிதாகப் பங்கெடுக்க முடியும்.
சமகாலக் கோளாறுகளையும் குறைபாடுகளையும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பதில் எந்தப்பயனும் மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
உயர்வான நல்ல இலக்குகளை நிர்ணயித்து, உறுதியோடு இணைந்துப் பயணிப்பவர்கள் வரலாற்றில் ஒருபோதும் தோற்றதில்லை.
அதை நினைவுறுத்தும் வலிமையான சமூக இணைப்புப் பாலமாய் ஹிஜ்ரா வை உணர்வோம்.
"இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் புலம் பெயர்ந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பாளனாகவும், பேரன்பு மிக்கவனாகவும் இருக்கின்றான்." (அல்குர்ஆன் : 4:100) |